Wednesday, 31 December 2014

தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில புத்திசாலிகளில் எனக்கு பிரகாஷ்ராஜை அதிகம் பிடிக்கும். பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், சில நேரங்களில் அரிதாகக் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர். அவருடைய சில கதாபத்திரங்களின் வசனங்களில் நான் அவருடைய சிந்தனையையே பார்ப்பதாகத் தோன்றும்.

அலிபாபா படத்தில் ஒரு வீட்டில் திருடிக் கொண்டிருக்கும்போது ஹீரோயினிடம் பிரகாஷ் ராஜும் அவர் மகனும் மாட்டிக் கொள்வார்கள். மகன் தப்பித்து ஓடலாம் என்று சொல்லும்போது, பிரகாஷ்ராஜ் நினாதமாக அந்தப் பெண்ணுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பிப்பார். "எதை நீ தப்புன்னு சொல்ற? இந்த சரி தப்பு எல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுத்தாங்க? உங்க அப்பா, அம்மா, இல்லை உன்னை சுத்தி இருந்த சமுதாயம் இவங்க தான் சொல்லிக் கொடுத்திருப்பாங்க, ஆனால் நீயா வளர்ந்து இந்த உலகத்தைப் புரிஞ்சுக்கும்போது, இந்த சரி, தப்பு எல்லாமே மாறும்".... இப்படி சொல்லிக் கொண்டேயிருப்பார். "இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தால் உங்க அப்பா, என்னையும் உங்க கூட சேர்ந்து திருட வச்சிருப்பார்" என்று ஹீரோயின் சொல்வாள்.

நம்மில் பெரும்பாலானோருக்கு நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயம் நல்லது கெட்டது, சரி தவறு, ஒழுக்கம் தொடர்பான வரையறைகளை சொல்லித் தந்திருக்கிறது. இவற்றில் சில விஷயங்கள் சமூகங்களையும், இடத்தையும், காலத்தையும் பொறுத்து மாறக் கூடியவை. ஆனால் சமுதாயம், இனம், மொழி, மதம் கடந்து இவற்றில் கடைபிடிக்க வேண்டியவை அறம் சார்ந்த  கோட்பாடுகளை மட்டுமே.

அறம் சார்ந்த விஷயங்களில் கூட, நம்முடைய சமுதாயங்கள் ஒரு சில விஷயங்களை இறுக்கிப் பிடிக்காமல் விடுவதுண்டு. பாலியல் தொடர்பான ஒழுக்கக் கோட்பாடுகள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். பிறன்மனை நோக்காமை என்பது அறத்தில் இருந்தாலும், அதை கழுத்தை இறுக்குமளவு நாம் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. அட்லீஸ்ட், ஆண்கள் அப்படி இப்படி இருப்பதை நம் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறது. இங்கு நாம், நம் சமூகம் என்று சொல்வதெல்லாம்  ofcourse பாரம்பரியமான, மூத்த குடியான தமிழ்ச் சமுதாயம் தான். சங்க காலத்தில் தலைவன் பரத்தையிடம் போவது முதல், இந்தக் காலத்தில் சின்ன வீடு வைத்திருப்பது வரை எல்லாவற்றையும், தமிழ்ச் சமூகம் மென்மையாகவே கையாண்டிருக்கிறது. இதற்காக யாரும் தூக்கிலிடப்பட்டதாகவோ, சிரச் சேதம் செய்யப் பட்டதாகவோ தகவல் இல்லை.

சிலர் தேவைக்காகவும், சிலர் இந்த ஒழுக்க மரபை மீறுவதால் கிடைக்கும் ஒரு இன்பத்துக்காகவும், சிலர் சூழ்நிலைகளாலும், பலர் விரும்பியும் பாலியல் தொடர்பான ஒழுக்கக் கோட்பாடுகளை மீறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக இதை பெரும்பாலனோரால் ஒத்துகொள்ள முடிவதில்லை. இப்படி மீறுபவர்களில் சிலர் / பலர் எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாதாமல் இருக்கலாம், சிலர் /பலர் குற்ற உணர்வுடன் மீறியிருக்கலாம். (உங்கள் மன முதிர்ச்சிக்கேற்ப சிலர்/பலர் போட்டுக் கொள்ளவும்). ஆனால் பலரால், இந்த ஒழுக்கக் கொள்கைகளை மீறி சிந்திப்பதையே ஏற்ற்றுக் கொள்ள முடிவதில்லை.

பத்து குடும்பம் இருக்கும் ஒரு தெருவில் குறைந்த பட்சம் நாலு குடும்பங்களில் பாலியல் ஒழுங்குமுறை விதிகளை (என்ன கண்றாவி இது, எப்படி எழுதுறதுன்னே தெரியல, முதல்ல இதுக்கு ஒரு பேர் வைங்க)  மீறிய சம்பவங்களை அடையாளம் காட்ட முடியும். அதிகபட்சம் இது பத்துக்குப் பத்தாகவும் இருக்கலாம். உண்மையை சொல்ல வேண்டும் என்று சொன்னால்  ஆண்கள் அளவுக்கு இல்லையென்றாலும் பெண்களும் கணிசமான அளவு இதைச் செய்கிறார்கள்.

பக்கத்துக்குப் பக்கம் தமிழ் நாளிதழ்கள் இந்த செய்திகளை தினமும் வழங்கிக் கொண்டிருந்தாலும், நிறைய பேரால் இதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை, அல்லது அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. இன்னமும் கேட்டால், மேலை நாடுகளில் தான் இதெல்லாம் அதிகம், நமது கலாச்சாரம், பண்பாடு இதை எல்லாம் அனுமதிப்பதில்லை என்பார்கள். எனக்குத் தெரிந்த வரை, கணவனோ மனைவியோ இப்படி இருப்பது பெரும்பாலும் மற்றவருக்கு (மனைவிக்கோ / கணவனுக்கோ) தெரிந்தே தான் இருக்கிறது. ஆனால், அதற்காக சின்ன சண்டைகள் முதல், அதிகபட்சம் சொந்தங்களைக் கூட்டி கமுக்கமாக ஒரு பஞ்சாயத்து வரைக்கும் தான் இந்த விஷயம் நகரும். பின்பு சமாதானமாகிவிடும். இதற்காக தண்டனை வழங்குவதோ, திருமண உறவை முறித்துக் கொள்வதோ நம் ஊரில் குறைவு தான்.

நமது சமுதாயம் இந்த திருமண உறவைத்தான் இறுக்கியிருக்கிறது. கோட்பாடுகளையும் ஒழுக்க நெறிகளையும் அல்ல. மனைவியை அடிப்பது கூட ஒரு ஒழுக்க மீறல் தானே? ஆனால் திருமணம் என்னும் பந்தத்தை பிரியாமல் காக்க இந்த ஒழுக்க மீறல் பெரும்பாலும் நம் சமூகத்தில் அனுமதிக்கப் படுகிறது. அதைப் போலவே தான் extra marital affairs கூட... ஆனால் மேலை நாடுகளில் இதைப் போல சம்பவங்கள் உடனடியாக  விவாகரத்து வரை வந்து, அது வெளிப்படையாக தெரியவும் செய்வதால், ஏதோ நம் சமுதாயம் அவர்களை விட புனிதமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.

இதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் பயம்... இது போன்ற விஷயங்கள் நமது பிறப்பைக் கேள்விக் குறியாக்குகின்றன. இத்தனை காலமாக நாம் நம்பிக் கொண்டிருக்கும், குலப் பெருமை, பாரம்பரியம் இவற்றையை எல்லாம் இது தகர்த்தெறிகிறது. இன்னும் சொல்லப் போனால், இது நாம் நம்பிக் கொண்டிருக்கும் ஜாதி அமைப்புகளை கேலி செய்கிறது. இன்னொரு ஜாதிக் காரனின் ரத்தம் நம் உடம்பில் கலந்திருக்குமோ என்ற பயத்தை உருவாக்குகிறது. இந்த பயம் எல்லா ஜாதிக் காரர்களிடமும் இருக்கிறது.  இது நல்லதா கெட்டதா என்பதெல்லாம் அவரவர்களைப் பொறுத்தது. ஆனால் இப்படி நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முகமூடி அணிந்துகொண்டு கண்ணாடி பார்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

பெருமாள் முருகன், திருச்செங்கொட்டு திருவிழாவைப் பற்றி எழுதியிருப்பதை பலர் ஏற்றுக் கொள்ள முடியாததற்கு இது முக்கியக் காரணம், முக்கியமாக அந்தப் பகுதி மக்கள். வேடிக்கையான விஷயம் என்னவென்றால், எல்லா ஊரிலும் திருவிழாக்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. பல பெருசுகள் இப்படி ஊர்த் திருவிழா சமயத்தில் தனித் திருவிழா கொண்டாடிய கதையை நானும் கேட்டிருக்கிறேன். .ராவின் மறைவாய் சொன்ன கதைகளில் பெரும்பாலும், இப்படி குடும்ப ஒழுக்கத்தை மீறிய கதைகள் தான்.இதில் அசிங்கப்பட எதுவும் இல்லை. கி ஒரு காலத்தில் எல்லாரும் ஆடை இல்லாமல் கூடத்தான் இருந்தோம், அதற்காக வெட்கப் பட்டு தூக்கு மாட்டிக் கொள்கிறோமா?

"சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தாலும் நடந்திருக்கலாம், அதற்காக ஆதாரமில்லாமல் அதையெல்லாம் எழுதி எங்கள் பெண்களை இழிவு செய்வதா?" என்று இந்துத்துவ வாதிகள் மட்டுமல்ல, சில முற்போக்கு முகமூடி கும்பலும் சில நாட்களுக்கு முன்பு கேட்டது. அதே கும்பல் கோவையில் இப்போது key exchange நடப்பதாகக் கேள்விப்பட்டு அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கறது. நூற்றாண்டுகளுக்கு முன்பு தானே இப்படி இருந்தது? இப்போ ஏன் இதற்கு எதிருப்பு தெரிவிக்கிறார்கள்? இந்த சாவி மாறுவதைக் கூட, மேற்க்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் என்கிறது அந்தக் கூட்டம், ஆனால் கண்ணதாசன் வனவாசத்திலேயே இதை எழுதியிருக்கிறார்.

அந்த கும்பலுக்கு, அடியேனின் சின்ன அட்வைஸ் -
"இது அற நெறிகளுக்கு எதிரானது, இதெல்லாம் மாற வேண்டும் என்று நினைத்தால் முதலில், இப்படி நடக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். கண்ணை மூடிக்கொண்டு அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், நடந்துகொண்டே தான் இருக்கும். நடந்துட்டுப் போகட்டும், என்னால் ஜீரணிக்க முடியாது என்றால் இருக்கவே இருக்கிறது Eno - மாத்திரையை விட சீக்கிரம் கரையும், வயிற்றெரிச்சலை ஆறே வினாடியில் குணப்படுத்தும்"