Monday, 25 May 2015

அக்ரி, பயோ- டெக்னாலஜி, மரைன் & இன்னபிற

பனிரெண்டாம் வகுப்பு முடித்த இரண்டு மாணவிகளிடம் பேசினேன். இருவருக்கும் நல்ல கட் -ஆஃப் மதிப்பெண்கள். இருவரும் திருச்சி மாநகரத்தில் உள்ள புகழ்பெற்ற இரண்டு பள்ளிகளில் படித்தவர்கள். ஆனால் சொந்த ஊர், திருச்சியின் இரண்டு மூலைகளில் உள்ளது. அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டேன், இருவரும் சொன்னது "எஞ்சினியரிங்க்கு இப்போ வேல்யூ இல்லை, படிச்ச நெறய பேருக்கு வேலை இல்லை. அக்ரி, பயோ டெக்னாலஜி இல்லைனா பி.டி. எஸ் படிக்கலாம்".

கொஞ்சம் பொறுமையாகவே அவர்களிடம் கேட்டேன், "சரி அக்ரி படிச்சா எங்கே வேலை கிடைக்கும்? அக்ரியில் என்ன படிக்கப் போற?". அவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை. இதையெல்லாம் யார் சொன்னார்கள் என்று கேட்டேன். அவர்கள் தோழிகளுக்குள்  இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்பது மட்டும், ஊரில் கடந்த சில ஆண்டுகளில் எஞ்சினியரிங் படித்துவிட்டு சும்மா இருப்பவர்களைப் பார்த்து உறுதி செய்ப்பப் பட்டிருக்கிறது. இவர்களுடைய மதிப்பெண்ணிற்கு அரசு / அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும்.

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என்னைச் சுற்றி இருந்த நலம் விரும்பிகள் நான் எஞ்சினியரிங் சேரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாலும், நான் தெளிவாகத்தான் இருந்தேன். கல்விக்கடன் கிடைக்கும் என்று நம்பினாலும் பயத்துடன் பெற்றோரும் சம்மதித்திருந்தனர். எனக்கு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர வேண்டும் என்பது பெரிய கனவு. அதில் சீட்டே கிடைக்காது என்று என்னுடைய பள்ளி முன்னோர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் என்னுடைய மதிப்பெண்ணிற்கு தமிழகத்தின் முக்கியமான அரசு உதவிபெறும் கல்லூரியில் (மதுரை)  சீட் இருந்தது. மறுநாள் காலை கவுன்சிலிங். ஆனால் எனக்கு திருச்சி கல்லூரியில் படிக்கத்தான் விருப்பம். என்ஐடியில் எங்களுக்கு வழிகாட்டிய ஒரு அண்ணனிடம் நம்பர் வாங்கி வைத்திருந்தேன்.

இரவு அவரிடம் போன் செய்து கேட்டேன்," திருச்சியிலேயே படிக்கவா?" என்று. அவர் கெட்ட வார்த்தையில் திட்டாத குறை தான். ஒரு வழியாக அரை மனதுடன் தான் மதுரையில் சேர தேர்வு செய்துவிட்டு வந்தேன். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. அந்த வயதில், நான் வளர்ந்த சூழலில் என்னுடைய மெச்சூரிட்டி அவ்வளவு தான். வளரும் சூழலில் எது தொடர்ந்து சொல்லப்பட்டு மனதில் பதிய வைக்கப் படுகிறதோ, அதை மீறிய ஒரு முடிவை எடுப்பதற்கு கடினமாக இருக்கும். இந்த மாணவிகளின் சூழலை, திருச்சி போன்ற இரண்டாம் தர நகரத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் சூழலாக எடுத்துக்கொள்வோம்.

எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்று தொடர்ந்து சூழலில் பதிய வைக்கப்படும்போது, அதனால் பாதிக்கப்படுவது உயர்தட்டு மாணவர்கள் அல்ல. பெருமைக்காக படிக்க வைப்பவர்களும், படித்த பெற்றோகளும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே தான் செய்கிறார்கள். ஆனால், ஒரு அடிமட்டத்தில் இருந்தோ, நடுத்தர குடும்பங்களில் இருந்தோ முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவர்களிடம் இது எத்தகைய பயத்தை உருவாக்கும் என்பதை யோசிக்க வேண்டும். நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தாலும், கடன் வாங்கி ஒருவன் அந்த நிலையில் இருந்து படிக்க வரும்போது, எந்த விதமான நம்பிக்கையை இது கொடுக்கும்? 90% வேலை வாய்ப்பு கிடைக்கும் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்தால் கூட, அதற்காக சக மாணவனுடன் போட்டியிட வேண்டும் என்ற சூழலில், தமிழ் வழியில் படித்த ஒரு கிராமப்புற மாணவனுக்கு வேலை கிடைக்காதோ என்ற பயம் ஏற்ப்படுத்தும் மன உளைச்சல் எத்தகையது, என்று யோசிக்கிறோமா?

கல்வி வழிகாட்டிகள் என்று கல்லூரிகளுடன் கூடு சேர்ந்து கொண்டு வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம், பயோ-டேக், மரைன், ஃபேஷன் டேக் என்றெல்லாம் மாணவர்களுக்கு கலர் கலர் கனவுகளை மட்டும் கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் பிரகாசமான வேலை என்பார்கள். நிகழ்காலத்தில் இந்தத் துறைகளில் எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலை வழங்கியிருக்கின்றன என்பது யாறுக்கும் தெரியாது. இவற்றுடன் ஒப்பிட்டால் மெயின் ஸ்ட்ரீம் என்று சொல்லக் கூடிய வழக்கமான எஞ்சினியரின் படிப்புகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை.

மாணவர்களே சில நேரம் ஒத்துக்கொண்டாலும் பெற்றோர்கள் "எதுக்குடா இந்த ஆறாயிரத்துக்கு இப்படி கஷ்டப் படுற?" என்று அனுப்புவதில்லை. முக்கியமாக வெளி மாநிலங்களில், சைட் வேலை என்று சொல்லப்படும் வேலைகளுக்கு செல்வதை நம் ஆட்கள் முடிந்த அளவு தவிர்க்கவே பார்க்கிறார்கள். குறைந்த ஊதியம் என்பதோ, வெளியூரில் வேலை என்பதோ வாழ்கையின் முடிவு அல்ல. அது ஒரு தொடக்கம். என்னுடைய முதல் சம்பளம், இன்று ஆறு மடங்காக ஆகியிருக்கிறது.

மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் சராசரி ஊதியம் பெறுவதற்கே ஏதாவது ஒரு கட்டத்தில் கஷ்டப் பட்டிருக்க வேண்டும். ஒன்று பள்ளியில் கஷ்டப்பட்டு நல்ல கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது கல்லூரியில் கஷ்டப்பட்டு வேலைவாய்ப்புக்குத் தகுதியானவராக மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது வெளியில் குறைந்த ஊழியத்தில் ஒரு துறையில் நுழைந்து கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதில் ஏதாவது ஒன்றை செய்தே ஆகவேண்டும். போட்டி அதிகமாகிவிட்ட சூழலில் எந்தத் துறையிலும் எளிதில் வேலைவாய்ப்போ, அதிக ஊதியமோ கிடைக்காது. அதே போலத்தான் பொறியியல் துறையும். விரும்பிப் படிப்பவர்களுக்கும், இது தான் தன் குடும்பத்தை சமூக பொருளாதார நிலைகளில் உயர்த்தும் என்று முனைப்புடன் படிப்பவர்களுக்கும் தாராளமாக வேலை கிடைக்கும்.


No comments:

Post a Comment