Friday, 16 October 2015

எந்தவித அரசியல் தொடர்பும் இல்லாத, தங்கள் அன்றாட வாழக்கைக்காகத் தினமும் ஓடிக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள் சிலரிடம் மாட்டுக்கறிக்கு எதிராக நடப்பவைகளைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் சிலர் பள்ளிக்கல்வி வரை படித்தவர்கள், சிலர் கல்லூரி முடித்து வேலை பார்ப்பவர்கள், குடும்பத்தலைவிகள் இப்படி.. ஆனால், எல்லோருமே மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள். அவர்களிடம் மாட்டுக்கறி மீதான தடையைப் பற்றிக் கேட்டபோது, எல்லோரும் ஒரே மாதிரி, "அதனால் என்ன?, தடை செஞ்சா செஞ்சுக்கட்டும்" என்றார்கள்.

அவர்களுடைய உணவில் மாட்டுக்கறி இல்லாததால், அதற்குத் தடை விதிப்பதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. "சரி மாட்டுக்கறி சாப்பிடுறவங்களைக் கொலை செய்யலாமா?" என்று கேட்டேன். "ஐயோ, பசு மாட்டைக் கொன்னா, பாவம்னு சொல்வாங்க, அதுக்காக மனுஷனைக் கொன்னால், அது பெரிய பாவமாச்சே" என்றார்கள்.

இதுதான் இந்த விஷயத்தில் சாதாரண மக்களின் புரிதல் / நிலைப்பாடு.
பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் மக்களின் உணவை சூழலியல் காரணங்களுக்காக அன்றி, மத நம்பிக்கையின் பெயரால் தடை செய்வதில் உள்ள உரிமை மீறலையும், அதன் எதிர்கால விளைவுகளையும் எளிய மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அதைவிடக் கொடுமை, தாத்ரி படுகொலைப் பற்றி நான் பேசிய 80% பேர்களுக்குத் தெரியவில்லை. சீரியல்களுக்கிடையே அவர்கள் பார்க்கும் அரை மணிநேரச் செய்திதான் அவர்களுக்கும், உலகத்திற்கும் இடையேயான தொடர்பு. இந்த மாதிரி சின்ன விஷயங்களெல்லாம் நம்முடைய அரைமணிச் செய்திகளில் ஓரிரு நாட்களுக்குச்\ சில நொடிகள் இடம்பெற்று, இப்பொது காணாமல் போய்விட்டன.

இந்தியாவில் ஒருவர் தான் விரும்பிய எந்த மதத்தையும் பின் தொடரலாம். பின் தொடர்ந்தாலும், அந்த மதத்தின் எல்லா வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என்பது தான், நமக்குள்ள சுதந்திரம். ஒரு மதத்தில் உள்ள தவிர்க்கப்பட்ட விஷயங்களை நாம் செய்தால், யாரும் நம்மை மதத்தை விட்டு விலக்கி வைக்க முடியாது. ஏனெனில் எந்த மதத்துக்கும், அதிகாரம் ஒரு புள்ளியில் இல்லை. நாம் ஒரு மதத்தைப் பின்பற்றுவதை எந்த ஒரு தனி நபரும், அமைப்பும் அங்கீகரிக்கத் தேவையில்லை. பிடித்தால் இருக்கலாம். அவ்வளவு தான். மதத்தைப் பின்தொடரவே இப்படிக் கட்டுப்பாடுகள் இல்லாத போது, மதத்தின் வழி முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது எவ்வளவு நகைப்புக்குரியது? நாம் சார்ந்திருக்கும் மதத்தைச் சேர்ந்தவர்களையே இப்படிக் கட்டாயப் படுத்த முடியாத போது, நம்முடைய மத நம்பிக்கைக்காக, வேறு மதத்தவரைக் கட்டாயப்படுத்துவது அதைவிடகேவலமான ஒரு செயல் தானே.

யாருடைய சாப்பாட்டுத் தட்டையோ பறிக்கிறார்கள் என்று விட்டுவிட்டால், நாளை நம் தட்டைப் பறிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இதே கும்பல், நாளை இந்து மதம் சைவத்தைப் பின்பற்றச் சொல்லியிருக்கிறது என்று ஆடு, கோழி, மீன் தின்பதை தடை செய்தால் என்ன செய்வது? இன்னும் முத்திப் போய், வெங்காயம் பூண்டையும் தடை செய்தாலும் செய்வார்கள். இவர்களுக்கு நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றிய கவலையில்லை, நம் மீது அவர்கள் தொடர்ந்து அதிகாரம் செலுத்தவேண்டும் என்பதே முக்கியம். ஜாதி, மத அடிப்படைவாதிகள் எல்லோரும் இதே வகையினர் தான். மேலோட்டமாகப் பார்க்கும்போது எதிர் சாரரைத் தாக்குவது போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவர்கள் தங்கள் சொந்த ஜாதி, மத மக்களின் மீது தங்கள் அடக்குமுறையை இறுக்குகிறார்கள்.

இதையெல்லாம் சாதாரண மக்களிடம் சொல்லிப் புரியவைப்பது யார்? ஆயிரம் போராட்டங்கள் நடத்தலாம், ஆனால் யாருக்காகப் போராடுகிறோமோ, அவர்களுக்கு நாம் எதற்காகப் போராடுகிறோம் என்பது தெரியவேண்டுமல்லவா? சரி யார் இதை மக்களிடம் கொண்டு சென்று புரியவைப்பது? வேறு யார் கலைஞர்கள் தானே? கலையின் தொடக்கமே இப்படி வந்தது தான். மனிதன் தனியாகச் சுற்றித் தெரிந்தபோது, அவனுக்கு மொழியோ, ஓவியமோ, குரலோ தேவைப்படவில்லை. ஒரு குழுவாக வாழத் தொடங்கியபோது தகவல்களைப் பரப்ப, தனக்குத் தெரிந்த அத்தனை கலை வடிவங்களையும் முயன்றான். அது அந்தக் குழுவுக்கும், அதனைத் தொடர்ந்து வந்த தலைமுறைகளுக்கும் பயனளித்து வளர உதவியது.

துரதிருஷ்டவசமாக இன்று நம் கலையின் அத்தனை வடிவங்களும் சினிமா, டிவி என்பவற்றுக்குள் முடங்கி விட்டது. மக்களுக்குக் கல்வி அறிவு குறைவாக இருந்த காலத்தில் இப்படி நாடகம், சினிமா போன்ற ஊடகங்கள் பிரபலமாக இருந்ததைப் போல, எழுத்தறிவு உயர்ந்த பிறகு மற்ற கலைகளும் வளர்ந்திருக்க வேண்டும் .ஆனால் நம் நாட்டில் எல்லாமே தழைகீழ். சினிமா, டிவி போன்ற ஊடகங்களைத் தவிர்த்து மக்களிடம் சென்று சேர்பவர்கள் என்று பார்த்தால் எழுத்தாளர்கள் தாம்.
தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட சூழலில் பிற தலையீடுகள் இன்றி இதெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க எழுத்தாளர்களாலேயே முடியும்.

அது என்ன எழுத்தாளர்களுக்கு மட்டும் சமூக அக்கறை வேண்டுமென்று எதிர் பார்க்கிறீர்கள்? என்று சிலர் கேட்பதுண்டு. யாரால் முடியுமோ அவர்களிடம் தானே கேட்க முடியும். எழுத்தாளனை யார் மதிக்கிறார்கள்? சினிமாக்காரர்களைத் தானே மதிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். எப்பொழுது எழுத்தாளர்கள் தனக்காகத்தான் எழுதுகிறார்கள் என்று பாமர மக்கள் உணர்கிறார்களோ, அப்போது நிச்சயம் மதிப்பார்கள். சினிமா ஹீரோக்கள், மக்களுக்காக உழைப்பதைப் போல நடிக்கவாவது செய்கிறார்கள். நம் ஊர், பெரும்பான்மை எழுத்தாளர்கள் நாட்டில் என்ன நடந்தாலும் வாய் திறப்பதில்லை. இதுபோன்ற படுகொலையை விடுங்கள், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், "அதனால் எனக்கென்ன, போன வாரம் ஜப்பான் போனதைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறேன், வாசியுங்கள்" என்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் சிந்தனைத் தளத்தை உயர்த்துபவர்கள் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், கல்வியாளர்களுமே. அதற்காக எழுத்தாளர்களைத் தெருவில் இறங்கிப் போராடச் சொல்லவில்லை. அவர்களின் ஆயுதம் எழுத்து. எளிய மக்களுக்கு, இந்த மாட்டுகறித் தடை போன்ற விஷயங்களின் பின்நாள் உள்ள அரசியலையும், அதன் எதிர்கால விளைவுகளையும் எழிமையாக எழுதிப் புரிய வைத்தால் போதும். ஒவ்வொருவரும் தாங்கள் தொடர்ந்து எழுதும் பத்திருக்கைகளில், இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தருகிறேன், பிரசுரியுங்கள் என்று நிர்பந்திக்கலாம். தங்களின் வலைத்தளங்களில் எழுதி, வாசகர்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். கொலை காரனெல்லாம், சமூக வலைத்தளத்தின் வீச்சால் ஆடியோ வெளியிடும்போது, ஏன் எழுத்தாளர்களால் முடியாது?

தொடர்ச்சியாக இதைப்பற்றி விவாதிக்கும்போதும், எழுதும்போதும் எப்படியாவது மக்களின் காதுகளுக்கு எட்டிவிடும். எதுவும் முடியாதபோது, விருதுகளைத் திருப்பிக் கொடுக்கலாம். நம் ஊர் எழுத்தாளர்கள் எழுதுவதும் இல்லை, விருதைத் திருப்பிக் கொடுப்பவர்களையும் நக்கலடிக்கிறார்கள். ஐயா சாமிகளே, நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய விருதுகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அட்லீஸ்ட் எழுதுங்கள்.

Monday, 25 May 2015

அக்ரி, பயோ- டெக்னாலஜி, மரைன் & இன்னபிற

பனிரெண்டாம் வகுப்பு முடித்த இரண்டு மாணவிகளிடம் பேசினேன். இருவருக்கும் நல்ல கட் -ஆஃப் மதிப்பெண்கள். இருவரும் திருச்சி மாநகரத்தில் உள்ள புகழ்பெற்ற இரண்டு பள்ளிகளில் படித்தவர்கள். ஆனால் சொந்த ஊர், திருச்சியின் இரண்டு மூலைகளில் உள்ளது. அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டேன், இருவரும் சொன்னது "எஞ்சினியரிங்க்கு இப்போ வேல்யூ இல்லை, படிச்ச நெறய பேருக்கு வேலை இல்லை. அக்ரி, பயோ டெக்னாலஜி இல்லைனா பி.டி. எஸ் படிக்கலாம்".

கொஞ்சம் பொறுமையாகவே அவர்களிடம் கேட்டேன், "சரி அக்ரி படிச்சா எங்கே வேலை கிடைக்கும்? அக்ரியில் என்ன படிக்கப் போற?". அவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை. இதையெல்லாம் யார் சொன்னார்கள் என்று கேட்டேன். அவர்கள் தோழிகளுக்குள்  இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்பது மட்டும், ஊரில் கடந்த சில ஆண்டுகளில் எஞ்சினியரிங் படித்துவிட்டு சும்மா இருப்பவர்களைப் பார்த்து உறுதி செய்ப்பப் பட்டிருக்கிறது. இவர்களுடைய மதிப்பெண்ணிற்கு அரசு / அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும்.

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என்னைச் சுற்றி இருந்த நலம் விரும்பிகள் நான் எஞ்சினியரிங் சேரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாலும், நான் தெளிவாகத்தான் இருந்தேன். கல்விக்கடன் கிடைக்கும் என்று நம்பினாலும் பயத்துடன் பெற்றோரும் சம்மதித்திருந்தனர். எனக்கு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர வேண்டும் என்பது பெரிய கனவு. அதில் சீட்டே கிடைக்காது என்று என்னுடைய பள்ளி முன்னோர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் என்னுடைய மதிப்பெண்ணிற்கு தமிழகத்தின் முக்கியமான அரசு உதவிபெறும் கல்லூரியில் (மதுரை)  சீட் இருந்தது. மறுநாள் காலை கவுன்சிலிங். ஆனால் எனக்கு திருச்சி கல்லூரியில் படிக்கத்தான் விருப்பம். என்ஐடியில் எங்களுக்கு வழிகாட்டிய ஒரு அண்ணனிடம் நம்பர் வாங்கி வைத்திருந்தேன்.

இரவு அவரிடம் போன் செய்து கேட்டேன்," திருச்சியிலேயே படிக்கவா?" என்று. அவர் கெட்ட வார்த்தையில் திட்டாத குறை தான். ஒரு வழியாக அரை மனதுடன் தான் மதுரையில் சேர தேர்வு செய்துவிட்டு வந்தேன். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. அந்த வயதில், நான் வளர்ந்த சூழலில் என்னுடைய மெச்சூரிட்டி அவ்வளவு தான். வளரும் சூழலில் எது தொடர்ந்து சொல்லப்பட்டு மனதில் பதிய வைக்கப் படுகிறதோ, அதை மீறிய ஒரு முடிவை எடுப்பதற்கு கடினமாக இருக்கும். இந்த மாணவிகளின் சூழலை, திருச்சி போன்ற இரண்டாம் தர நகரத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் சூழலாக எடுத்துக்கொள்வோம்.

எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்று தொடர்ந்து சூழலில் பதிய வைக்கப்படும்போது, அதனால் பாதிக்கப்படுவது உயர்தட்டு மாணவர்கள் அல்ல. பெருமைக்காக படிக்க வைப்பவர்களும், படித்த பெற்றோகளும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே தான் செய்கிறார்கள். ஆனால், ஒரு அடிமட்டத்தில் இருந்தோ, நடுத்தர குடும்பங்களில் இருந்தோ முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவர்களிடம் இது எத்தகைய பயத்தை உருவாக்கும் என்பதை யோசிக்க வேண்டும். நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தாலும், கடன் வாங்கி ஒருவன் அந்த நிலையில் இருந்து படிக்க வரும்போது, எந்த விதமான நம்பிக்கையை இது கொடுக்கும்? 90% வேலை வாய்ப்பு கிடைக்கும் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்தால் கூட, அதற்காக சக மாணவனுடன் போட்டியிட வேண்டும் என்ற சூழலில், தமிழ் வழியில் படித்த ஒரு கிராமப்புற மாணவனுக்கு வேலை கிடைக்காதோ என்ற பயம் ஏற்ப்படுத்தும் மன உளைச்சல் எத்தகையது, என்று யோசிக்கிறோமா?

கல்வி வழிகாட்டிகள் என்று கல்லூரிகளுடன் கூடு சேர்ந்து கொண்டு வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம், பயோ-டேக், மரைன், ஃபேஷன் டேக் என்றெல்லாம் மாணவர்களுக்கு கலர் கலர் கனவுகளை மட்டும் கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் பிரகாசமான வேலை என்பார்கள். நிகழ்காலத்தில் இந்தத் துறைகளில் எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலை வழங்கியிருக்கின்றன என்பது யாறுக்கும் தெரியாது. இவற்றுடன் ஒப்பிட்டால் மெயின் ஸ்ட்ரீம் என்று சொல்லக் கூடிய வழக்கமான எஞ்சினியரின் படிப்புகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை.

மாணவர்களே சில நேரம் ஒத்துக்கொண்டாலும் பெற்றோர்கள் "எதுக்குடா இந்த ஆறாயிரத்துக்கு இப்படி கஷ்டப் படுற?" என்று அனுப்புவதில்லை. முக்கியமாக வெளி மாநிலங்களில், சைட் வேலை என்று சொல்லப்படும் வேலைகளுக்கு செல்வதை நம் ஆட்கள் முடிந்த அளவு தவிர்க்கவே பார்க்கிறார்கள். குறைந்த ஊதியம் என்பதோ, வெளியூரில் வேலை என்பதோ வாழ்கையின் முடிவு அல்ல. அது ஒரு தொடக்கம். என்னுடைய முதல் சம்பளம், இன்று ஆறு மடங்காக ஆகியிருக்கிறது.

மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் சராசரி ஊதியம் பெறுவதற்கே ஏதாவது ஒரு கட்டத்தில் கஷ்டப் பட்டிருக்க வேண்டும். ஒன்று பள்ளியில் கஷ்டப்பட்டு நல்ல கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது கல்லூரியில் கஷ்டப்பட்டு வேலைவாய்ப்புக்குத் தகுதியானவராக மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது வெளியில் குறைந்த ஊழியத்தில் ஒரு துறையில் நுழைந்து கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதில் ஏதாவது ஒன்றை செய்தே ஆகவேண்டும். போட்டி அதிகமாகிவிட்ட சூழலில் எந்தத் துறையிலும் எளிதில் வேலைவாய்ப்போ, அதிக ஊதியமோ கிடைக்காது. அதே போலத்தான் பொறியியல் துறையும். விரும்பிப் படிப்பவர்களுக்கும், இது தான் தன் குடும்பத்தை சமூக பொருளாதார நிலைகளில் உயர்த்தும் என்று முனைப்புடன் படிப்பவர்களுக்கும் தாராளமாக வேலை கிடைக்கும்.


Monday, 18 May 2015

ஷாப்பிங்

தோழிக்கு சுடிதார் வாங்குவதற்காக ஒரு கடையில் சில மணி நேரங்கள் தேடி, கடைசியாக ஒரு கருப்பு சுடிதார் பார்த்ததும் இருவருக்கும் பிடித்திருந்தது. "நல்லா இருக்கு, எடுத்துக்கோ" என்றேன். "இது இருக்கட்டும், அந்த லைனையும் பார்க்கலாம்" என்றால். அந்த வரிசையைப் பார்த்து முடித்து வரும்போது, அந்த கறுப்புச் சுடிதாரை இன்னொரு பெண் தனக்கு வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் அப்பாவும் அருமையாக இருக்கிறதென்று சொல்லிவிட்டதால், நேரடியாக பில் போடா எடுத்துச் சென்று விட்டனர்.

இதைப் பார்த்ததும் தோழிக்கு வந்த கோபத்திற்கு, கடையில் எதுவும் கலவரம் வந்துவிடாமல் இருக்க, எல்லாத் திட்டையும் நானே வாங்கிக் கொண்டு, சரி வா வேற பார்க்கலாம் என்றேன். "வெட்டியா தானே இருக்க, அதை எடுத்து கையில வச்சிருக்கலாம்ல?" என்று திட்டிக் கொண்டே பார்க்க மனமில்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே வந்தாள். அந்த நேரத்தில் சேல்ஸ்மேன் புண்ணியவான் அதே மாடல் கருப்பு சுடிதாரில் இரண்டு பீஸ்களைக் கொண்டுவந்து லைனில் வைத்தார். "கடவுள் இருக்கான் கொமாரு" என்று நினைத்துக் கொண்டே அவளிடம் அதைக் காட்டி, வா போய் எடுக்கலாம் என்றேன். முறைத்துவிட்டு " அந்த பொண்ணு எடுத்த அதே சுடிதாரை எல்லாம் என்னால எடுக்க முடியாது, வேற பார்க்கலாம்" என்று அவள் சொன்னபோது, லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது.

மறுபடியும் லைன்-1 இல் ஆரம்பித்து லைன்-3 இல் வரும்போது, ஒரு சுடிதாரை ஆர்வமாக எடுத்து அவள் மேல் வைத்துக் காட்டி நல்லா இருக்கா என்றாள். ஆஹா முடியப் போகுது என்ற சந்தோஷத்தில், அருமையா இருக்கு, இந்தக் கலர் தான் சூப்பரா வித்தியாசமா இருக்கு என்றேன். ஸ்கூலில் அத்தனை நாடகங்கள் நடித்தும் கடைசியில் எதுவம் கை கொடுக்கவில்லை. எப்படியோ கண்டுபிடித்துவிட்டு வேண்டாம் என்றாள். ராஜதந்திரங்கள் வீணாகப் போன சோகத்தில் சரி வா அடுத்து பார்க்கலாம் என்றேன். அதையே கையில் வைத்துக் கொண்டே இருந்தாள், "பிடிச்சிருந்தா எடு" என்றேன்.

 பக்கத்தில் கூப்பிட்டு "நமக்குப் முன்னாடி ஒரு அம்மாவும் பொண்ணும் நிக்கிறாங்களா?" என்றாள். பார்த்தேன். "நான் இதை எடுத்து வச்சுப் பார்க்கும்போது, அந்த பொண்ணு அவங்க அம்மா கிட்ட இந்த சுடிதாரைக் காட்டி நல்லா இருக்குல்லன்னு கேட்டுச்சு, அந்த அம்மாவும் தலையாட்டுச்சு, இப்பவும் அவங்க இதையே தான் பார்த்துகிட்டு இருக்காங்க பாரு" என்றாள். "சரி வச்சுட்டு வா, அவங்க எடுக்கட்டும்" என்றேன். "அதெப்படி அப்படியே விட முடியும்.. கொஞ்ச நேரம் அவங்களை கடுப்பேத்தலாம்." என்று அடுத்த பத்து நிமிடங்களுக்கு கையிலேயே வைத்திருந்தாள். இவள் வைத்துவிட்டுக் கிளம்பும்போது அவர்கள் வந்து எடுக்கிறார்களா என்பதையும் திரும்பிப் பார்த்துக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.

தலை சுற்றலை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அடுத்து எங்கே என்றேன். போத்தீஸ். ரெடிமேட் லைன் 1-5, மட்டீரியல் லைன் 1- 8 என்று சுழற்சி முறையில் சென்று கொண்டிருந்தது. இடையிடையில் இது எப்படி இருக்கு என்று எதையாவது காட்டுவதும், கேவலமா இருக்கு என்ற பதிலில் கடையில் ஒரு பல்ப் கூடுவதுமாக இருந்தது. ஒரு வழியாக ஒரு மஞ்சள் சுடிதாரை எடுத்து சேல்ஸ் கேர்ளிடம் கொடுத்து தனியாக வைக்கச் சொன்னாள். அந்தப் பக்கம் போன இன்னொரு பெண் அதை ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டே போனாள். என்னிடம் வந்து "இப்போ பாரு அந்த பொண்ணு மஞ்சள் கலரையா தேடுவாள்" என்று கிசுகிசுத்தாள். ஆச்சர்யமாக அவளும் அப்படியே செய்துகொண்டிருந்தாள். "சரி எடுத்தாச்சுல்ல, வா போகலாம்" என்றேன். "நமக்கு மஞ்சள் வேண்டாம், பச்சையில் பார்க்கலாம்" என்று சொன்னபோது அப்படியே கண்கள் சொருகி இரு வரேன் என்று நகர்ந்தேன். கொஞ்சம் உட்காரலாம் என்று சேர்கள் போட்டிருக்கும் பகுதிக்குச் சென்றால், எல்லா இருக்கைகளையும் அடைத்துக் கொண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.

Wednesday, 13 May 2015

"காந்தியை ஏமாற்றி வரும் இந்தியா" என்ற தலைப்பில் திரு மு. இராமனாதன் தமிழ் இந்துவில் ஒரு அழகான கட்டுரை எழுதியிருக்கிறார். ஹாங்காங் புறநகர் பகுதி மோனோ ரயிலில் இவர் பயணித்த போது, மெட்ரோ ரயில்களைப் போல டிக்கெட் இருந்தால் தான் திறக்கும் தானியங்கி கதவுகள் இல்லாமல் இருந்த போதும், எல்லோரும் முறையாக டிக்கெட் எடுத்து பயணித்ததைப் பார்த்து ஆச்சர்யமடந்திருக்கிறார். தன்னுடன் வந்தவரிடம், "இது எப்படி சாத்தியமானது?" என்று கேட்டபோது, அவர் "நாங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் எனபதை  பள்ளியிலேயே பழக்கிவிடுகிறோம்" என்றாராம்.

"காந்தி விடுதலைப் போராட்டத்திற்காக சட்டத்தை மீறினாலும், மற்ற விஷயங்களில் எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றே விரும்பினார். ஒரு நல்ல சிவில் சமூகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் சொன்னதை ஏன் பள்ளியிலேயே நாம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில்லை?" என்று வருத்தப்படுகிறார். தான் பார்த்த சில உதாரணங்களைக் குறிப்பிட்டு, சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தால் இளைஞர்கள் இப்படி ஆகியிருக்க மாட்டார்கள் என்கிறார்.

காந்தி சொன்னபடி சட்டத்தை மதிப்பதை பள்ளிகள் போதிக்கின்றனவா என்பதை பின்னால் பார்க்கலாம். முதலில் காந்தியைப் பற்றி பள்ளிகள் என்ன சொல்லித்தருகின்றன என்பதைப் பார்ப்போம். பாடத்திட்டம், பேச்சுப்போட்டி, ஆண்டுவிழா இவற்றிலெல்லாம் காந்தியும் அஹிம்சையும் முன்னிறுத்தப் படுகின்றன. ஆனால் மாணவர்களுடன் நேரடியாக உரையாடும் ஆசிரியர்களுக்கு காந்தியின் மேலுள்ள அபிப்பிராயம் என்ன? உண்மையில் சரி பாதி ஆசிரியர்களுக்கு காந்தியைப் பிடிக்கவில்லை. அதிலும் சில பேருக்கு காந்தி என்றாலே ஆகாது. ,

"காந்தி ஒரு அயோக்கியன், ஏமாற்றுக்காரன், ("ன்" தான் "ர்" அல்ல) தேச துரோகி, சுயநலவாதி, பொம்பளை பொருக்கி, காந்தியால் தான் சுதந்திரம் தாமதமானது, சண்டையிட்டிருந்தால் வெள்ளைக்காரன் அப்பவே ஓடியிருப்பான், கோட்சே தான் உண்மையான தேச பக்தன்" இப்படி எல்லாம் ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு சொல்லித் தருவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு ஆசிரியர் அல்ல, பலர் இதையே செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை அரிதாகவே ஏற்றுக்கொள்ளும் மாணவர்கள் இதை அப்படியே நம்பி ஏற்கிறார்கள்.

"உலகமே உத்தமர் என்று சொல்பவரைப் பற்றிய ரகசிய உண்மைகள் எனக்குத் தெரியும், நல்லவேளை என் ஆசிரியர் உண்மையைச் சொன்னதால் அந்த ஆளைப் பற்றி தெரிந்தது, இல்லையென்றால் உன்னைப் போல நானும் அவனை தேசத்தந்தை என்று நம்பியிருப்பேன்" என்ற மனநிலையில் நிறைய மாணவர்கள் பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு பத்தாவது படிக்கும் சிறுவனுக்கு வேறு என்ன மனமுதிர்ச்சி இருக்கக்கூடும். ஒருமுறை இப்படி மனதில் பதிய வைக்கப்பட்டபின் அதை மாற்றுவது மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது.

ஒரு பக்கம் நேதாஜி வெறியர்கள், சில ஜாதி அமைப்பில் மூழ்கிப் போனவர்கள், இன்னொரு பக்கம் அம்பேத்காரை புறக்கணித்தார் காந்தி என்ற ஆதங்கத்தில் இன்னொரு ஜாதி ஆட்கள், இன்னொரு பக்கம் இப்படி  அரைகுறையாக கேள்விப்பட்டு, அரைகுறையாகவே பயின்ற ஆசிரியர்கள். இன்னும் சில பேருக்கு அஹிம்சை, சத்தியாகிரகம் என்பதெல்லாம் ஒரு நடக்கவியலாத சமாச்சாரமாகத் தெரிகிறது. அதெல்லாம் நடந்திருக்க சாத்தியமே இல்லை, இரண்டாம் உலகப் போரால் இங்கிலாந்து நலிவடைந்து இருந்தது, அதனால் அவர்கள் வெளியேறினார்கள். புகழை எல்லாம் காந்தி எடுத்துக்கொண்டார் என்பார்கள்.

அஹிம்சை என்பது ஒரு ஆச்சர்யமான, நிகழ வாய்ப்பே இல்லாத விஷயம் தான். இத்தனை கோடி வருடங்களாக பூமியில் இருந்துவரும் உயிரினங்களின் அடிப்படை இயல்புக்கு எதிரானது. எந்த உயிரினமும், தன்னை ஒரு வலிமையான எதிரி தாக்கும்போது, முடிந்த அளவு போராடித்தான் சரணடையும். அஹிம்சை முறையில் எந்த விலங்குடனும் போராட முடியாது, மனிதனைத் தவிர. ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட அறவழி அஹிம்சைப் போராட்டத்திற்கு, தைரியம், மன முதிர்ச்சி, ஒற்றுமை வேண்டும். இத்தனை கோடி ஆண்டு வரலாற்றுக்கு எதிராக, இவ்வளவு பெரிய தேசத்தில் மக்களை ஒருங்கிணைத்து காந்தி அதை சாதித்தற்காகத்தான் உலகம் அவரைக் கொண்டாடுகிறது.

அவருக்கும் சில குறைகள் இருந்ததன. அதை அவர் பொதுவில் வைத்தார். உங்களுக்கோ எனக்கோ அந்த தைரியம் இல்லை, நாம் ஒருவேளை ஒரு குழந்தையை வன்புணர்வு செய்திருப்போம், நண்பன் நாசகாகப் போக வேண்டும் என்று வேண்டியிருப்போம். சந்தப்பம் கிடைத்தால் யாரையாவது கொலை செய்யலாம் என்று எண்ணியிருப்போம். ஆனால், இதையெல்லாம் வசதியாக மறந்தோ மறுத்தோ விடுவோம். ஒருவேளை காந்தியைப் போல நாமும் சுய பரிசோதனை செய்துகொண்டிருந்தால் யார் அயோக்கியன் என்று தெரியவரும்.

Thursday, 2 April 2015

சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி
சஞ்சரிக்கும் தவம் காதல்.
‪#‎தரமணி‬ படத்தின் போஸ்டர்களில் இப்படி விளம்பரப் படுத்துகிறார் இயக்குனர் ராம்.
தொடர்ந்து தெய்வீகக் காதல், காமமில்லாக் காதல், புனிதமானக் காதல், சமூக விழுமியங்கள் இப்படி தனக்கு பிடித்தமான விஷயங்கள் மட்டுமே உண்மையானவை என்று தனது படங்களின் மூலம் ரசிகர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றார். கொடுமை என்னவென்றால் இவரை தமிழகத்தின் மிகப்பெரிய இண்டெலெக்சுவலாக நினைத்து அப்பாவி இளைஞர்கள் பலர் இவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் எம். ஏ ஒரு ஆகச் சிறந்த குப்பை. பீச்சில் இரண்டு பேர் முத்தம் கொடுத்துகொள்கிரார்கள் என்றால் அது அவர்கள் உதடு. அதற்காக கொலை செய்வதெல்லாம் பெரிய காமெடி.. கேட்டால் பப்ளிக்கில் செய்கிறார்கள் என்றும், சமுதாயம் தான் அவனை அப்படி செய்ய வைத்தது என்றும் விளக்கம் சொல்லுவார். உளவியல் ரீதியாகப் பார்த்தால், இந்த சதையில்லா காதல், காமமில்லா காதல் போன்ற போலி கலாச்சார விழுமியங்கள் தான் அப்படி ஒருவன் பீச்சில் முத்தம் கொடுத்துக் கொள்பவர்களைப் பார்த்து கோபப் பட வைக்கிறது. கொடுமை என்னவென்றால் அதே போலி விழுமியங்களை ராம் தான் தனது ரசிகர்களுக்கு புகட்டிக் கொண்டிருக்கிறார்.
பொதுவெளியில் முத்தம் கொடுத்தால் என்னய்யா தவறு? எல்லா விலங்குகளும் பொதுவெளியில் தான் புணர்கின்றன. அது தான் இயற்கை. இரண்டு நாய்கள் புணரும்போது இன்னொரு நாய் வெறிக்க வெறிக்க நின்று வேடிக்கை பார்ப்பதில்லை.. காதலர்கள் எல்லை மீறுகிறார்கள் என்று பொங்கும் கலாச்சாரக் காவலர்களை நினைத்தால் அப்படி வேடிக்கை பார்க்கும் ஒரு நாயைப் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. மனிதனுடைய பாலியல் ஒழுக்கக் கோட்பாடுகள் எல்லாம் இயற்கையானவை என்று நினைத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவுமில்லை. இந்த பாலியல் ஒழுங்கு என்று வெங்காயங்கள் எல்லாம் முழுக்க முழுக்க நாமே கட்டமைத்துக் கொண்ட செயற்கை விதிகள்.
Guns, Germs, and Steel: The Fates of Human Societies என்ற புத்தகத்தை எழுதிய Jared Diamond எழுதிய இன்னொரு அற்புதமான புத்தகம் Why is Sex Fun? The Evolution of Human Sexuality . இது இலவசமாக PDF இல் கூட கிடைக்கிறது. முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். மனிதன் பாலியல் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் எவ்வளவு செயற்கையாக நடந்து கொண்டிருக்கிறான் என்பது புரியும். ராம் மாதிரியான ஆட்கள் கையில் இந்த சமூகம் மாட்டும்போது ஆண்குறியை வெட்டிவிட்டு, பெண்குறியை சிமெண்ட் வைத்து நிரப்பிவிட்டும் தான் காதலிக்க அனுமதிப்பாரோ என்று தோன்றுகிறது.
"என்னடா உன் ஆளுக்கு முத்தம் கொடுத்தியா?"ன்னு கேட்டால், "தப்பா பேசாதடா, எங்க காதல் புனிதமானது, அவளை அந்த மாதிரி எண்ணத்தோட என்னால பார்க்கவே முடியாது" என்று சில கோஷ்டிகள் பதில் சொல்லும். "அடேய் உன் ஆளை தாண்டா அப்படி பாக்கணும், மத்த பொண்ணுங்களை அந்த என்னத்துல பாக்கக் கூடாதுன்னு" சொன்னாலும் அவங்களுக்கு புரியாது. எத்தனை ஆதவன் வந்தாலும் இவங்களை திருத்தமுடியாது. இந்த மாதிரி அப்பாவி குஞ்சுகள் ராம் மாதிரி விழுமிய இயக்குனர்கள் கையில் சிக்கும்போது இந்த சமூகத்தில் எல்லாமே தவறு என்பதைப் போல பொங்கிக் கொண்டிருப்பார்கள். ராம் ரசிகர்கள் முதலிரவுக்கு போகும்போது, ஒரு தூபக்காலும், சூடத் தட்டும் கொண்டு போவார்கள் என்று நம்புகிறேன்.

Tuesday, 31 March 2015

அன்புள்ள திராவிடக் கண்மணிகளுக்கு,
(சுயமரியாதை இயக்கம், தி.க முதல் லதிமுக வரை)

வணக்கம்,
நான் ஒரு திராவிடன் என்பதை, என்னுடைய ஒரு மூன்று நான்கு தலைமுறைகளை ஆராய்ந்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்கு முன்பு, என் மூதாதையர் எந்த இனக்குழுவில் இருந்தனர் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மனித இனத்தின் ஆயுளான பல கோடி ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த மூன்று நான்கு தலைமுறைக் காலம் என்பது மிகவும் குறுகியக் கட்டம் என்பதால், என்னை ஒரு குறுப்பிட்ட இனக்குழுவுக்குள் சுருக்கிக் கொள்வதை நான் விரும்புவதில்லை.

ஆனால், திராவிட இயக்கங்களின் சாதனைகளைக் கருதி என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் பட்டிருக்கிறேன். ஆனாலும், திராவிடக் கொள்கைகளில் என்னை முழுதாக இணைத்துக் கொள்ள முடிவதில்லை. எந்த ஒரு தனிக் கொள்கையும், மனித குல மேம்பாட்டிற்கான முழுத் தீர்வாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. திராவிடம், தனி தேசியம் என்ற கொள்கைகளைத் தவிர்த்து, சுயமரியாதை, பகுத்தறிவு, வருணாசிரம எதிர்ப்பு, தாய்மொழியைப் பேணுதல், பெண்களுக்கு சம உரிமை போன்ற பெரியாரின் கொள்கைகளை எல்லா நேரங்களிலும் முடியாவிடிலும், முடிந்த அளவு கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

பெரியாருக்குப் பிறகு, அதிகம் இந்தக் கொள்கைகள் பரவலாக்கப்பட்டு, திமுகவின் ஆரம்பக் கட்டத்தில் உச்சம் பெற்று, பிறகு படிப்படியாகக் குறைந்து, இன்று எதிர்த் திசையில் சென்று கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். திராவிட இயக்கத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் இடுவதைத் தடுக்க முடிந்ததை குறிப்பிடுகிறோம். ஆனால், இன்றைய நிலவரம் என்ன என்பதை கொஞ்சம் களத்தில் இறங்கிப் பார்த்தால் தெரியும். ஐந்தாவது படிக்கும் சிறுவர்களுக்கும் கூட தாங்கள் அச்சடிக்கும் ஜாதிப் பெயரிட்ட பனியனை அணிவித்து, வேறுபாட்டை வளர்க்கத் தொடங்கி விடுகிறார்கள். பின்னால் ஜாதிப் பெயரிட்டால் வரும் குற்ற உணர்ச்சியெல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இப்போது பெண்களும் இதை பெரிதும் விரும்புகிறார்கள் (பெரியார் விழைந்த சமஉரிமை). முன்பைவிட இப்பொழுது கவுரவக் கொலைகள் அதிகமாக நடக்கின்றன, ஜாதிச் சங்கங்கள் நினைத்தால் யாரையும் மிரட்டவோ அடிக்கவோ முடிகிறது. பிராமண ஆதிக்கம், மெல்ல மெல்ல இடைநிலைச் சாதிகளின் கையில் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் திராவிடக் கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிப்பதைத் தவிர இதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை. ஒரு திராவிடக் கட்சி, ஒரு தேசியக் கட்சி என்று இருந்தபோது, மேடைகளில் எல்லாம் திராவிடக் கருத்துகள் முழங்கின. இன்று இரு திராவிடக் கட்சிகளுக்குள்ளேயே (அட்லீஸ்ட் பெயரளவில் திராவிடக் கட்சிகள்) போட்டி என்று ஆன பின்பு, ஒருவர் மாற்றி ஒருவர் வசை பாடவே நேரம் சரியாக இருக்கிறது.

ஒருவேளை இரண்டுக் கட்சிகளும், ஒரு தேசியக் கட்சியிடம் தோல்வியடைந்தால் மட்டுமே மீண்டும் திராவிடக் கொள்கைகள் மேடையேறும் என்று நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக தேசியக் கட்சிகளுக்கு அந்த அளவு மூளை வேலை செய்வதில்லை. சரி,  கட்சிகள் முன்னெடுக்காமல் மீண்டும் இந்த திராவிடக் கருத்துகளை மக்கள் சிந்திக்கப் போவதில்லையா என்று கேட்டால், அதற்கான வாய்ப்புகள் அருகிக் கொண்டு வருவதாகத்தான் தோன்றுகிறது. இட ஒதுக்கீட்டையும், இந்தி எதிர்ப்பையும் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் இன்றைய இளைஞர்களிடம் தொடர்ந்து பரப்பப் பட்டு வருகின்றன. அதற்கு துணையாக, தலைவர்களின் குறைகளையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

உதாரணமாக, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பற்றி பேசிய ஒரு தலைவர், கடவுளை முற்றாக நிராகரித்த ஒரு தலைவர், சில நேரங்களில் கடவுள் வழிபாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிப்பதை எடுத்துக் கொள்ளலாம். தலைவர்கள் மட்டுமல்ல, கடைசி மட்டத் தொண்டன் வரை, கடவுளை ஏற்ப்பதா நிராகரிப்பதா என்று தெரியாமல் குழம்பி, கடைசியில் குடும்பக் காரணங்களுக்காக ஏற்றுக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், நீ கடவுளை நிராகரி என்று ஒரு தலைவன் சொன்னால், உடனே ஒரு தொண்டனால் தூக்கிப் போட முடியாது. எப்போது ஒருவனால் அப்படிச் செய்ய முடியும்? கடவுளை நம்பாமல், தனது பிரச்சினைகளை தானே தீர்த்துக் கொள்ள முடிந்தால் கடவுள் நம்பிக்கையை ஒதுக்கலாம். அதற்கு அடிப்படை, கல்வியும் வாசிப்பும். நமது கல்வியின் லட்சணம் என்னவென்று தெரியுமென்பதால் அதை விட்டுவிடலாம். ஆனால் கல்வியறிவால், ஒரு சில மூடநம்பிக்கைகளைத் தவிர்க்கலாம். மூட நம்பிக்கைகளுக்காகத்தானே, கடவுளை நிராகரிக்கச் சொல்கிறார் பெரியவர்.

ஆனால், சில தலைவர்கள் கடவுளை நிராகரித்துவிட்டு, மூட நம்பிக்கைகளை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். திரு. கி.வீரமணி அவர்களுடைய ஒரு மூடநம்பிக்கையை ஒருவர் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொண்டால்தால், அவர் கடைபிடிக்கும் கொள்கைகளின்மேல் மக்களுக்கும் நம்பிக்கை வரும். தனது வாகனங்களுக்கு ஒரே பதிவு எண்ணை (அது ராசியா என்று தெரியவில்லை) விரும்பி வாங்குவது, எந்த வகையிலும் பகுத்தறிவில் சேராது. இதற்காக அவர் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். இதை, ஒவ்வொரு திராவிட இயக்கச் சிந்தனையாளரும், தன்மீது வைக்கைப்பட்ட ஒரு கேள்வியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட கொள்கை என்ன? அதன்படிதான் நடக்கிறோமா என்று ஆராய வேண்டும்.

இதை விட்டுவிட்டு, பார்ப்பனீய சக்திகள் திராவிடச்செடியை  துளிர்க்கவிடாமல் செய்கின்றன என்று காட்டுக் கூச்சல் போடுவதால் எந்தப் பலனும் இல்லை. குறைகளை சரி செய்துகொள்ளாத எந்த இயக்கமும் நீண்டகாலம் உயிர்ப்புடன் இருக்க முடியாது. கம்யூனிசம் ஒரு சிறந்த உதாரணம்.

தி.கவின் இன்னொரு மூட நம்பிக்கை, தாலியறுக்கும் போராட்டம், மன்னிக்கவும், தாலி அகற்றும் போராட்டம். இதற்கான காரணமாகச் சொல்லப்படுவது, தாலி தான் பெண்களை அடிமைப்படுத்துகிறது, தாலியை அகற்றுவதன் மூலம், பெண்களை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து சம உரிமையைப் பேணலாம். அட்லீஸ்ட், இது பெண்ணடிமைத்தனத்தைக் களைய முதல் படி என்று. வாலியின் கழுத்துச் சங்கிலி போல, தாலிக்கு இத்தனை சக்தியா என்று ஆச்சரியமாக இருக்கிறது. போகட்டும், விஷயத்துக்கு வருவோம். கடந்த நாற்பது ஆண்டுகளை ஒப்பிட்டால், பெண்கள் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார்கள், அடிமைத்தளை கொஞ்சம் இளகியிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தாலியின் தடிமன் இந்தக் காலத்தில் குறைந்துவிட்டது என்பதா?

முன்பைவிட பெண்கள் அதிகமான அளவு, அடிப்படைக் கல்வி பெறுகிறார்கள், சுமாரான அளவு வேலைவாய்ப்பும் பெற்று, கொஞ்சம் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்திருக்கிறார்கள். இதுதானே காரணமாக இருக்க முடியும்? அப்படியெனில், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்து, அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டுமென்றால் எங்கிருந்து தொடங்க வேண்டும்? கல்வியில் இருந்து தானே? கல்வியில் தொடங்கி பொருளாதாரச் சுந்திரம், அதிகாரம் என்று எல்லாவற்றிலும் சரிசமமாகும்போது, தாலி என்பது தானாகவே ஒரு திருமண அடையாச் சின்னம் மட்டும் என்றாகிவிடும் தானே? அதை விட்டுவிட்டு, பின்னால் இருந்து தொடங்குவதை எப்படி ஒரு தொடக்கம் என்று சொல்ல முடியும்?

பெண்கள் தான் படிக்கிறார்களே, ஆண்களை விட தேர்ச்சி விகிதத்தில் அதிகம் இருக்கிறார்கள், அதில் என்ன இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஐடி, போன்ற சில துறைகள் தவிர, பல பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் எல்லாம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றன, பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவதை ஊக்குவிக்கிறோம் வாருங்கள் என்று. அப்படியானால், பள்ளியில் அதிகம் தேர்ச்சி பெற்ற அந்தப் பெண்கள் எல்லாம் எங்கே போனார்கள்? பலர் கடமைக்காக ஒரு டிகிரி படிக்கவேண்டுமே என்று படிக்கிறார்கள், சிலர் கல்யாணம் வரை வேலைக்குப் போகிறார்கள், சிலர் குழந்தை பெறும்வரை. வெகுசிலர் தான், கடைசி வரை குடும்ப நெருக்கடிகளையும் சமாளித்து விருப்பத்துடன் வேலைக்குச் செல்கிறார்கள்.

சில காலமாக ஒரு விஷயம் கேள்விப்படுகிறேன், தன் பெண்ணை டாக்டராகவோ, எஞ்சினியராகவோ உருவாக்கினால், அதகேற்ற மாப்பிள்ளை தேட வேண்டும். அந்த மாப்பிள்ளைகள் எல்லாம் சீர்வரிசை அதிகம் கேட்பார்கள் என்பதால், தகுதி, திறமை இருந்தும் பல பெண்களை அவர்கள் பெற்றோர்கள் எதோ ஒரு டிகிரியுடன் நிறுத்துகிறார்கள். இப்படி பெண் கல்வி, இந்தச் சமுதாயத்தில் ஏதேதோ காரங்களால், சீரழிக்கப் பட்டுக்கொண்டிருக்கும்போது, உண்மையாக பெண்கள் விடுதலை என்பதை முதலில் கல்வியில் தானே தொடங்க வேண்டும்?

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள பெண் குழந்தைகளைச் சந்தித்து, அவர்களுக்கு கல்வியின் பயனை விளக்கி, சமுதாயத்தில் சமபங்காற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது, தனது பெரியார் மணியம்மை பல்கழைக் கழகத்தின் மூலம், பள்ளிகளில் நல்ல மதிப்பெண் எடுத்த ஏழை மாணவிகளை படிக்கவைத்து, வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது போன்ற புரட்சிகளை ஐயா கி.வீ நடத்தினால், கருப்புச்சட்டையுன் வரத் தயாராக இருக்கிறேன். மற்றபடி தாலி அகற்றுவதெல்லாம், அவர் தன்னை கோமாளி  என்பதை நிறுவுவதற்கு மட்டுமே உதவும்.

Wednesday, 25 March 2015

என்னிடம் உலகில் உனக்கைக் கவர்ந்த, மிகவும் சுவாரசியமான விஷயம் எதுவெனக் கேட்டால் "பெண்கள்" என்று தான் சொல்வேன். சலிப்பூட்டக் கூடிய எந்தப் பெண்ணையும் இதுவரை சந்தித்ததே இல்லை என்றுதான் சொல்வேன். பெண்களின் சில செயல்கள் சலிப்பூட்டச் செய்யும், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் சில செயல்கள் சலிப்பூடுகின்றன என்று சொல்வதற்கும் பெண்களே சலிப்பூட்டுகின்றனர் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது

ஒரு எளிமையான, சாதாரணமான ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவானவை. அவை பெரும்பாலும், அவன் வளர்ந்த சூழலில் பொதுவாக பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட கடமைகளின் நீட்சியாகவே இருக்கும். உதாரணத்திற்கு, நன்றாக சமைக்கத் தெரியவேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் / கூடாது இப்படி சாதாரணமானவை தான். ஆனால், கொஞ்சம் வாசிப்பு, சிந்திக்கும் தளத்தினுள் காலடி எடுத்துவைக்கும்போது, தன்னுடைய துணையோ, தோழியோ அதே போல சிந்திக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனதில் முளைத்துவிடுகிறது.

நண்பன் ஒரு நாள் கவலையுடன் சொன்னான், " என் காதலி தீவிர விஜய் ரசிகை, எனக்கு இப்படி அமையும் என்று எதிர் பார்க்கவே இல்லை. நான் கிம்கிடுக் பற்றிப் பேசினால், ஆதி அளவுக்கு இருக்குமா? என்றாள்.. கடைசிவரை ஒத்துவருமா என்று தெரியல மச்சி". சிரித்துக்கொண்டே கேட்டேன், "எதற்காக அவளிடம் நீ கிம் கி டுக் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறாய்?" என்று. "அந்தப் படம் எனக்கு ஒரு பார்வை அனுபத்தைக் கொடுத்தது, அதை அவளிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு வாழ்க்கைத்துணையிடம் இதையெல்லாம் பகிர்ந்துகொண்டால் நல்லது தானே?" என்றான்.

"உனக்கு அவளிடம் க்ரே கார்டன் பற்றிப் பேச வேண்டும், இந்தியா ஏன் மிக் விமானங்களை வைத்துக் கொன்று மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும், தி.ஜாவின் கும்பகோணத்தை அவளுடன் காலரா நடந்து அனுபவிக்க வென்றும் இப்படியெல்லாம் எதிர்பார்ப்பிருக்கிறது. ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகளை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஃபைட் கிளப் பற்றி மூன்று மணி நேரம் பேசுவதை விட, உன்னுடன் பீச்சில் மிளகாய் பச்சி சாப்பிடுவது அவளுக்கு பிடித்ததாக இருக்கலாம்.

இதில் உயர்வு தாழ்வு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. உனக்கு உயர்வாகப் படுவது, அவளுக்கு தேவையில்லாததாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும், உன்னுடைய எதிர்பார்ப்புகள் காலத்துக்கும் மாறாதவை என்று சொல்ல முடியுமா? நேற்று பால குமாரனைப் போல் உலகில் யாரும் எழுத முடியாது என்று சொன்னாய். இன்று கரிச்சான் குஞ்சு என்கிறாய். உன் சிந்தனைத்தளம் நகரும்போதேல்லாம், அவளுடையதும் நகர வேண்டும் என்று எதிர்பார்ப்பாயா?

சரி இப்படி எடுத்துக்கொள், நீ பாலகுமாரன் பற்றி பேசும்போது, "ச்சீ கருமம்" என்று சொல்லி அவள் "மார்க்குவெஸ், யோசா ரேஞ்சில் இருக்கும் எனக்கு, இவன் ஒத்துவருவானா" என்று கேட்டால் எப்படி இருக்கும்? கலை, இலக்கியம், அரசியல், அறிவியல் இவற்றில் ஒருவரின் நிலைப்பாட்டை வைத்து அவரைக் காதலிக்கவோ, நண்பராக்கிக் கொள்ளவோ முடியாது. மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நீ எவ்வளவு வாசித்தாலும், சிந்தித்தாலும் பிரயோஜனமே இல்லை" என்றேன்.

இந்த உரையாடலை ஏனோ ஜெயமோகனுக்கு டெடிகேட் செய்யத் தோன்றியது. "நீங்கள் இலக்கியவாசகராகவும், யோசிப்பவராகவும் இருந்தால், வாழ்நாளில் சுவாரசியமான நான்கைந்து இந்தியப் பெண்களைக் கூட சந்திக்கப் போவதில்லை" என்கிறார். பாவமாக இருக்கிறது. அவரை நினைத்து அல்ல, அவரைச் சந்தித்த அந்தப் பெண்களை நினைத்து. ஒரு பெண்ணை சுவாரசியமாக பேசவைக்கக் கூடத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டு என்ன கஷ்டப்பட்டார்களோ, தெரியவில்லை.