Tuesday, 20 January 2015

தேர்க்கால் சிறுகதையில் தேருக்கு சன்னக் கட்டை போடுவதைப் பற்றி ராஜன்  எழுதியதைப் படித்தபோது, ஒரு நிமிடம் மனது கதையை விட்டுவிட்டு தேர்களின் நினைவில் சுழல ஆரம்பித்துவிட்டது. பல ஊர்களில் இந்த சன்னக் கட்டை போடுவது குறிப்பிட்ட சில சாதிகளின் அல்லது குடும்பங்களின் உரிமையாக இருக்கும். அப்படி இருந்தாலும் கொஞ்சம் வலுவான ஆண்களே சன்னக் கட்டை போட முன்வருவார்கள். கனமான மரக்கட்டையை தூக்கிக் கொண்டு தேருக்கு முன்னால் ஓடுவதற்கு அசாத்திய உடல் வலு வேண்டும்.

சில நேரங்களில் சன்னக் கட்டைகளை உடைத்துக் கொண்டு தேர்கள் உருண்டோடும்...அதற்கும் தயாராக இருக்க வேண்டும். அந்த மாதிரி நேரங்களில் சிலருக்கு கால் கூட போனதாக கேள்விப்பட்டிருக்கிறேன் . பல்லக்கில் சாமி தூக்கி வரும்போது பல்லக்கை மரக் கால்களில் இறக்கி வைப்பார்கள். அதை "ஆயக்கால்" என்பார்கள். இது பெரும்பாலும் எடை குறைவாக இருப்பதால், சின்ன பசங்களை தூக்கி வர வைத்துவிடுவார்கள்.  சன்னக்கட்டை போடும்போது, தேரை நிறுத்துவதற்கு சக்கரத்தின் எதிரே அந்த சாய்வான கட்டையை  வைப்பதைப் போல, சில நேரங்களில் மக்கள் உணர்ச்சிப் பெருக்கில் வேகமாக இழுக்கும்போது வேகமாக ஓடும் தேரின் வேகத்தை மட்டுப்படுத்த கட்டையை பக்கவாட்டில் வைத்து வைத்து எடுப்பார்கள். தேர் அதன் மேல் ஏறி குலுங்கி இறங்கி ஓடுவதையும், தேர்போல அசைந்து வரும் அழகே என்று நம் ஆட்கள் வர்ணிப்பதையும் ஒப்பிட்டுக்கொள்க.

எப்போதோ நியாபகத்தில் பதிந்த நிகழ்வையோ, வார்த்தையோ இலக்கியத்தின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யும் சுகம் அலாதியானது.       கடந்த வார விகடனில் வந்த எஸ்.செந்தில்குமாரின் வெண்டி மாப்பிள்ளை சிறுகதையில் "தவிதாயப்பட்டார்" என்ற வார்த்தைப் பிரயோகம் வருகிறது. தன் மகளை கல்யாணம் செய்துகொள்ளப் போகும் மாப்பிள்ளை விஷம் குடித்து விட்டான் என்ற செய்து கேட்டு அது உண்மையா என விசாரிக்க அலையும் போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். எங்கள் ஊர்ப்பக்கம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இது. இதற்கு அர்த்தம் தவிப்பது மட்டுமல்ல,.ஒன்றும் செய்ய முடியாமல் ஒரு வகையாகக் குழம்பிப் போன நிலையைக் குறிப்பது.                                                                                                                                           என்னாலும் சரியாக வரையறுக்க முடியவில்லை. இந்த வார்த்தைப் பிரயோகத்தை நேரடியாகக் கேட்கும்போது தான் அந்த உணர்வு புரியும்.                           அந்த கதை முழுவதுமே மாமனார் தவிதாயப் படுவது  தான். அதில் அழகு என்னவென்றால், இந்த வார்த்தையை கதாபாத்திரங்கள் பேசும் வழக்கு மொழியோடு உபயோகிக்காமல், ஒரு ஆசிரியர் கதை சொல்லும் நடையிலேயே பயன்படுத்திருக்கிறார்
காதுகள்

இன்னமும் குழந்தை பிறந்தால் பின்னாளில் என்ன கலரில் இருப்பான் என்று தெரிந்துகொள்ள காதுகளையே பார்க்கின்றனர். சில சமூகங்களில் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே காது குத்தி விடுகிறார்கள். காது குத்து என்பது, ஒரு கல்யாணத்தை விட கோலாகலமான நிகழ்ச்சி. கல்யாணத்தைப் போல, தெரியாத இரண்டு குடும்ப சொந்தங்கள் எதிரெதிர் திசையில் நிற்காமல், எல்லாம் தெரிந்தவர்களாகவே சூழ்ந்திருக்கும் விழா. சொல்லப்போனால் நம் சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே விழாவும் கூட.

ஆண்குழந்தைக்கு காது குத்தினாலும் மூன்று நாளைக்கு கழட்டக் கூடாது என்று விதிமுறைகள் வகுத்திருப்பதால், நானெல்லாம் கம்மலுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறேன். காது குத்தாமல் ஆண்பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யக்கூடாது என்று வழக்கமும் இருப்பதால், திருமண மேடையிலேயே சாஸ்திரத்துக்காக காதுகுத்திக் கொண்டு தாலி கட்டியவர்களைப் பார்த்திருக்குறேன். மொட்டைக் காதோடு பெண் பிள்ளைகள் இருந்தால், தூர்ந்து விடுமென்று, குச்சி குத்தி விடுவார்கள். எந்தக் குழந்தையும் அப்படி அலைய விரும்புவதுமில்லை. காதுகுத்தும் முன்பே, பட்டன் தோடுகள் போட்டு பெரியவர்களாகிவிட்டதாக உணர்வார்கள். சிலருக்கு சரியான தோடு அமையாமல்,  காதுகள் சீழ் பிடித்தும்விடும். உள்ளதிலேயே கொடூரமான மணங்களில் காது சீழும் ஒன்று.

டைட்டானிக் மாட்டல்கள் பரவலாக இருந்த காலத்தில், அந்த மாட்டல்கள் பிரதிபலிக்கும் வண்ணங்களில் மின்னும் காதுகள் இன்னனும் அழகானவையாக உணரப்பட்டிருக்கின்றன. ஊக்கு, ஹேர்பின், பாய்க்குச்சி, பென்சில் என்று எது கிடைத்தாலும் காதுகுடையும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் கோழி இறகால் காது குடைவது தனி சுகம் தான். அதற்காக இறகைத் தேடி எடுத்து, நுனியை மட்டும் விட்டுவிட்டு மீதி இறகைக் கழித்துக் கொடுக்க அத்தைகளோ, சித்திகளோ வீட்டில் இருக்க வேண்டும். ஷீரடியில் அரை அடி நீள கம்பியைக் கையில் வைத்துக் கொண்டு காதில் இருந்து ஈ எடுக்கிறேன் என்று ஒருவர் கேட்டபோது, சிலிர்த்துக் கொள்ள காது மயிர்கள் தான் இல்லை எனக்கு.

அப்பாவுக்கும் எனக்கும் கணக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியருக்கு காதுக்கு வெளியே மயிர்கள் நீட்டியிருக்கும். ஜன்னல் வெளிச்சத்தில் அந்த மயிர்கள் மின்னுவதை பல நாட்கள் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறேன். மனிதர்களை வரையும் போது காதுகள் தான் வரைவதற்கு எளிதானவை. எளிதாக ஒரு கேள்விக்குறியைப் போல முடித்துவிடலாம். விலங்குகளின் காதுகள் தான் கொஞ்சம் ஆச்சர்யமானவை. இவ்வளவு பெரிய யானையின் காதுக்குள் எறும்பு புகுந்தால் இறந்து விடும் என்று ரொம்ப நாட்கள் நம்பியிருக்கிறேன். யானையின் காதுகள் மாதிரி ஒரு extended surface இருந்தால் வெப்பக்கடத்தலை அதிகரிக்கலாம். அதை அறிவியலில் Fins  என்பார்கள். ஆமாம் மீன்களில் செவுல்கள்  மாதிரி தான். உண்மையில் மீன்களின் செவுல்கள் தான் அவற்றின் காதுகளோ என்று கூட யோசித்திருக்கிறேன் சின்ன வயதில். இன்னும் கூட பாம்புக்கு காது இல்லை என்பதை பலரால் நம்ப முடிவதில்லை.

நாயின் காதுகளை வைத்து, அவை என்ன மூடில் இருக்கின்ற என்று அறியலாம். மனிதனைப் போல காதைத் தடவிக் கொடுத்தால் நாய்களும் சுகமாக காட்டிக் கொண்டிருக்கும். ஆடுகளின் காதுக்குள் சேர்ந்திருக்கும் அழுக்கை துடைக்கும் போது வரும் வாடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாத்துகளை கழுத்தைப் பிடித்து தூக்கச் சொன்னால் ஒரு பயம் வருவதைப் போலத்தான், முயல்களை காதைப் பிடித்து தூக்கச் சொன்னாலும் எனக்கு பயம் வரும். வலிக்குமே என்று. எத்தனை ஆசிரியர்கள் நம் காதைத் திருகியிருக்கிறார்கள்

பறவைகளுக்கு காது இருப்பதே தெரியாமல் இறகுகள் மூடியிருக்கும். கோழி பிடிக்கும்போது கையைக் கொண்டு தேவையே காதைக் கண்டுபிடிப்பது ஜாலியாக இருக்கும். பறவைகளில் வௌவாளுக்கும், விலங்குகளில் தேவாங்குக்கும் அழகான காதுகள் என்பது என்னுடைய கருத்து.

சுவற்றுக்கும் கூட காது உண்டு என்பார்கள். சில நேரம் காது குளிர கேட்க வேண்டும் என்றும் சொல்வார்கள். உண்மையில் காது தான் குளிரைத் தாங்க முடியாத உறுப்பு. நேரடியாக உடலுக்குள் குளிரைக் கடத்திவிடுகிறது. காதின் பின்னால் மூக்கையும், நுனி நாக்கையும் வைத்தால் உணர்ச்சி பொங்கும் என்பது தான் கலவியைப் பற்றி சீனியர்கள் சொல்லிக் கொடுத்த முதல் உருப்படியான விஷயம். வான்கோவின் காது என்ற சிறுகதையை உள்ளடக்கிய அதே பெயரிலான மொழி பெயர்ப்புப் புத்தகம் தமிழின் முக்கியான முயற்சி. மறுவாசிப்புக்காக தேடிக்கொண்டிருக்கிறேன். சாய்ந்து கொள்ள ஒரு மடி வேண்டும் என்று நண்பர் சொன்னதற்கு இன்னொரு நண்பர், "எனக்கு இரண்டு காதுகள் மட்டும் போதும்" என்றார். ஆம், காதுகள் தான் நம்மை பைத்தியமாகிவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன

Monday, 19 January 2015

ஒரு கோடை நாளின்
உயிர் துளைக்கும் மாலை மழைக் காற்றில்
எனை மட்டும் நனைக்கும்
தூறல் வேண்டி விழி மூடிய நேரத்தில்
இமையில் விழுந்து முதல்துளியை
முழுதாய் உணர்ந்து முடிப்பதற்குள்
அடைமழையைப் பெய்து போனாய்

வெயில் உலர்த்திக்கொண்டிருக்கும் மழையின் சுவட்டில்
உயிரும் உலரும் என்றஞ்சி இறைஞ்சுகிறேன்
வேகமாய் சுழைவாய் புவியே
அடைமழைக் காதலோன் வேண்டும்...

கவிதை பழகும் காதலி

Thursday, 8 January 2015

கல்லூரி ப்ராஜெக்டுக்காக ஐ.சி.எஃப் இல் இருந்த போது, SSE எனும் சீனியர் செக்ஷன் எஞ்சினியர் ஒரு நாள் எங்களைக் கூப்பிட்டு "அங்க கூட்டுறதுக்கு வந்திருக்காளே ஒரு பொம்பளை, அவளை இந்த 20 நாள்ல என்னிக்காச்சும் பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டார். நாங்கள் பார்த்ததில்லை. "இருபது நாள் கழிச்சு இப்போ தான் வரா, ஏன்னு என்னால கேட்க முடியாது. கேட்டால், நான் பக்கத்து ஷாப்புக்கு போறதுக்குள்ளே என்னை ஆள் வச்சு வெட்டிடுவா" என்றார்.

இந்தியாவில் இரண்டுவிதமான வேலைவாய்ப்பு நிறுவனங்கள்  மட்டுமே இருக்கின்றன. ஒன்று நீங்கள் என்ன செய்தாலும், உங்களை வேலையை விட்டு தூக்க முடியாத நிறுவனம், இரண்டாவது அவர்கள் எப்போது நினைத்தாலும் உங்களை வேலையிலிருந்து தூக்கலாம் என்ற நிறுவனம். வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. முதல் வகையில் பெரும்பாலான, அரசு நிறுவனங்களும், ஒரு சில பழைய தனியார் நிறுவனங்களும், வெகு சில நியாயஸ்தர்கள் நடத்தும் நிறுவங்களும் அடங்கும். உட்கார்ந்து குண்டி தேய்க்கும் வேலை என்று ஒரு காலத்தில் இதைச் சொல்வார்கள். பொண்ணு கொடுக்கும்போது மாமனாரின் முதல் சாய்ஸ் இந்த வேலையில் இருக்கும் மாப்பிள்ளைக்குத் தான்.

தனியார் நிறுவனங்களில் சம்பளம் கொஞ்சம் அதிகம் கிடைக்கத் தொடங்கியபோது, ஸ்திரத் தன்மை என்பதை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு நிறைய பேர் இந்தப் பக்கம் வரத் தொடங்கினார்கள். அரசு வேலை கிடைப்பதில் இருக்கும் ஒளிவு மறைவு சமாச்சாரங்களும் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.  எவ்வளவு முயற்சி செய்தாலும் இன்டர்வியுவ் என்ற பெயரில் பணம் கறக்கிறார்கள், அதற்கு இதுவே பரவாயில்லை என்ற மனநிலையில் கொஞ்சம் பயமிருந்தாலும் தனியார் வேலையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

நண்பனுடைய அப்பா ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்தார். அவனிடம் சொல்லிக்கொண்டே இருப்பார், "எப்போ வேணும்னாலும் என்னை வேலையை விட்டு தூக்குவாங்க, நீ உன்னோட வாழக்கையை பாத்துக்க ஒழுங்கா படி" என்று. அவனும் ஒரு தனியார் நிறுவனத்தில் தான் வேலைக்கு சேர்ந்தான். ஆனால் நிச்சயம் அவன் அப்பா அளவுக்கு அவனுக்கு பயமில்லை. ஏனென்றால் பழகிவிட்டது. அரசு வேலைகள் எல்லாம் இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாக நிரப்பப் பட்டாலும், மொத்த பட்டதாரிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, அரசு வேலைக்கு தேர்வு செய்யப் படுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். வேலை வேண்டும் என்றால், தனியார் தான் ஒரே வழி. வருடக் கணக்கில், பயிற்சி மையங்களுக்கு சென்று, அரசுத் தேர்வுக்குத் தயாராகும் கொடுப்பினை நிறைய பேருக்கு வாய்ப்பதும் இல்லை.

உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயம் இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கச் செய்வது தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளம் தான். அதிலும், எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. நம் ஊரில் குறைந்த பட்ச ஊதியமென்ற கணக்கெல்லாம் இல்லை. அந்த நிறுவனத்தில் அவ்வளவு தருகிறார்களே என்றெல்லாம் கேட்க முடியாது. கேட்டால், அங்கேயே போய்க்கோ என்று பதில் வரும். கொஞ்சம் அதிகமாக சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கும் தனியார் துறைகளில் ஐடி தான் அதிகம் கவனிக்கப் படுகிறது. அதிக சம்பளம் என்பதால் மட்டுமல்ல, வேலைவாப்பு எண்ணிக்கையும் ஐடியில் அதிகம் என்பதால்தான் கவனம் பெறுகிறது.

உதாரணத்துக்கு பவர் செக்டாரை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் எப்படி கணக்கிட்டாலும் இதில் இருக்கும் பொறியாளர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டாது. ஐடி துறையில் ஒரு நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையே லட்சங்களில் இருக்கும். ஆட்குறைப்பு என்பது எல்லா தனியார் நிறுவனங்களிலும், எல்லா துறைகளிலும் எப்பொழுதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட, அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று நாம் நம்பும் ஒரு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் இப்படி ஆட்குறைப்பில் ஈடுபடும்போது எல்லோரும் அதிர்ச்சியாகிரார்கள்.

ஐடி ஊழியர்களால் தான் நாடே சீரழிகின்றது என்று சொல்லிக் கொண்டிருந்த இதே சமுதாயம் தான், இன்று இவர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. உண்மையில் அக்கறையில் தான் கவலைப்படுகிறார்களா அல்லது நடிக்கிறார்களா என்றே
புரியவில்லை. சரி எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்த அக்கறையால் பொறியாளர்கள் மாதிரியான உயர் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் (வார்த்தை உபயம் - ஜெமோ), தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. யார் இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள் என்று பார்த்தால், பெரும்பாலும் இந்த துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தான். உள்ளே இருப்பவர்கள் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிற்சங்கம் அமைந்தால் எல்லாரும் சேருவார்கள் என்றும் சொல்ல முடியாது. ஒற்றுமை நிச்சயம் இருக்காது. ஐடியில் மட்டுமல்ல, பொதுவாகவே பொறியாளர்களிடம் ஒற்றுமை இருக்காது. சக professional களான, மருத்துவர்களிடமும், வக்கீல்களிடமும் இருக்கும் ஒற்றுமையில் ஒரு பத்து சதவீதம் கூட பொறியாளர்களிடம் கிடையாது.  இதற்கு முதல் காரணமாக இருப்பது எண்ணிக்கை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவருக்கு மதுரையில் பத்து மருத்துவர்களைத் தெரியுமா என்று கேட்டால், தெரியும். ஆனால் என்னுடைய அலுவலகத்தில் 2 வது தளத்தில் இருக்கும் எனக்கு, இந்தத் தளத்திலேயே முக்கால்வாசி பேரைத் தெரியாது. இப்படி ஒருங்கிணைக்கவே முடியாத ஒரு பெருங்கூட்டம் இருப்பது, முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. சரி, எப்படி இதை ஒருங்கிணைக்கவே முடியாத கூட்டம் என்கிறேன் என்று கேட்கிறீர்களா? தனியார் நிறுவனங்களிலும், கார்பரேட்டுகளிலும், சக ஊழியர்களுடன் போட்டி போடுவதை ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக்கிவிட்டார்கள். வெகு சில நிறுவனங்கள் மட்டும்தான் இதற்கு விதி விலக்கு.

அரசு வேலைகளில் இருப்பது போல, இத்தனை வருட அனுபவத்துக்கு இவ்வளவு சம்பளம் என்ற பேச்சே கிடையாது. ஒவ்வொரு வருடமும் அப்ரைசல் நடக்கும். (அல்லது நடந்து போல காண்பிக்கப்படும்). அதில் ஒருவருக்கு அதிக ஊதிய உயர்வும், இன்னொருவருக்கு குறைவாகவும், ஒரு சிலருக்கு கிடைக்காமலே கூட போகும். இதை யார் முடிவு செய்வார்கள் என்றால், ஒருவருடைய immediate boss /மேனேஜர் அல்லது டீம் லீடர். அதிலும் பார்த்தால், ஒரு மேனேஜர் இரக்க குணம் படைத்தவராக இருக்கும்பட்சத்தில் கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்க வழி உண்டு. அல்லது உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால் அதன் மூலம் பலன்பெறவும் முடியும். அவருக்கு உங்களைப் பிடிக்காவிட்டால் மொத்தமும் காலி. காராறன ஆட்கள் சில பேர் தான் இருப்பார்கள். நானும் தான் அந்த அளவு கம்பெனிக்காக உழைத்தேன் என்று நீங்கள் சண்டையும் போட முடியாது. ஊதிய உயர்வுக் கடிதம் என்பதே confidential சமாச்சாரம் என்று முத்திரை குத்தப்பட்டு தான் வரும்.

உடன் இருக்கும் ஊழியர்களிடமே இப்படி ஒரு போட்டியை உருவாக்கி விட்டிருக்கும்போது, அலுவலகத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமலும் நிற்கும் போது, தொழிற்சங்கம் என்ற ஒன்றை உருவாக்கினால், எத்தனை பேர் அதில் சேருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? பெரும்பாலும் தொழிற்சங்கங்கள் எல்லாம் இப்படி நிரந்தரமான பணிச் சூழல் இருக்கும் அரசு நிறுவனங்களில் அல்லது மிகவும் பழைய தனியார் நிறுவனங்களிலும் தான் செயல்படமுடியும். கார்பரேட்டுகளில் வேலைக்கு சேரும்போதே, "எங்களுக்கு தேவைப்படும் வரை மட்டுமே நீங்கள் இங்கே பணியில் இருக்க முடியும்" என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் சேர்ப்பார்கள். அதுவுமில்லாமல், வேலை நிறுத்தம் என்ற ஒன்றை எல்லாம் அலுவலகங்களில் நடத்த முடியாது. அது மாதிரியான சமாச்சாரங்கள் எல்லாம், ஒரு தொழிற்சாலை, அதனுள் சில இயந்திரங்கள் இருக்கும் அமைப்புக்குத்தான் ஒத்து வரும். அலுவலகத்தில் தொழிற்சங்கங்கள் கதவை மூடி போராட்டம் நடத்த முடியாது. கதவை மூடினால், வீட்டில் இருந்து கூட வேலை நடக்கும். நீங்கள் இல்லையென்றால், அந்த வேலையை கொத்திக்கொண்டு போக ஆயிரம் பேர் இருக்கும் சூழலில் உங்கள் மேனேஜர் வேலையை முடி என்றால் முடித்து தான் ஆக வேண்டும்.

வேலையை விட்டு தூக்காமல் சம்பளத்தைக்  குறைப்பது, வசதிகளைக் குறைப்பது, மூன்று மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் தருவது இப்படி எல்லாம் கூட மறைமுகமாக நிறுவனங்களால் கொள்ளையடிக்க முடியும். எவ்வளவு தொழிற் சங்கங்கள் வைத்தாலும் சட்ட ரீதியாக ஒன்னும் கிழிக்க முடியாது. ஏன் புகார் கூட தெரிவிக்க முடியாது. என்னுடைய பழைய இரண்டு நிறுவனங்களில் இருந்தே எனக்கு இப்படி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வர வேண்டி இருக்கிறது. பலருக்கு எத்தனையோ லட்சங்கள், கோடிகள். ஆனால் சட்ட ரீதியில் எங்கும் போராட முடியாது. சம்பளம் தரவில்லை என்று போக்குவரத்து ஊழியர்கள் மாதிரி, மறியலில் எல்லாம் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைக்க முடியாது.

உருப்படியான தீர்வு ஏதாவது கிடைக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று, போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால் மட்டுமே முடியும். வருடந்தோறும் பொறியியல் முடித்து வெளிவரும், ஒரு பெரும்கூட்டத்தையும், ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் கூட்டத்தையும், பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசிடம் இருந்து கொஞ்சம் தெளிவான தொலைநோக்குள்ள திட்டங்கள் வேண்டும். முதலாளிகளின் தேவையை விட ஆட்கள் குறைவாகக் கிடைக்கும்போது, முதலாளித்துவத்தின் பிடி தானாகவே தளரும்.

எதற்கும் சுஜாதாவின் "மண்ணின் மைந்தர்கள்" குறுநாவலை ஒரு முறை படிக்குமாறு சிபாரிசு செய்கிறேன். எந்தத் தொகுப்பில் இருக்கிறதென்று தெரியவில்லை.

Tuesday, 6 January 2015

நடுவாய்க்கால் களிமண்ணுதான்
சுடும்போது வெடிக்காது
புள்ளையாரை சுடப் போறோமா?
சரி, காயும்போது வெடிக்காது......
இதுவும் அதானே,
அப்புறம் ஏன் தும்பிக்கை மட்டும் விழுது?
என்கிட்ட கேட்டா ?
ஏன் சாமி வேணாமா ?
அது என்னோடது இல்லையே

Monday, 5 January 2015

இலக்கியவாதிகள் செய்யும் பல விஷயங்கள் இன்னும் எனக்கு சரியாகப் புரிவதே இல்லை. எக்சைல் வெளியீட்டுக்கு எதற்காக நெல்சன் சேவியர் அழைக்கப் பட்டார் என்று இதுவரை எனக்குப் புரியவில்லை. ஒரு வளர்ந்து வரும் ஊடகவியலாளராக (வளர்ந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்) நெல்சன் மேல் எனக்கு கொஞ்சம் மரியாதை உண்டு. ஆனால் ஒரு முன்னணி எழுத்தாளரின் நாவலை வெளியீட்டின் போது விமர்சித்துப் பேசுவதற்கு அவர் சரியான ஆள் தானா என்பதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்து சந்தேகம் தான்.

ஜெயமோகன் இளையராஜாவை வைத்து புத்தக வெளியீடு நடத்தும்போது, இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று கேட்கலாம். சொல்லப் போனால், ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்தவர் என்ற ஒரே தகுதிக்காக (!!!!!) நீது சந்திராவை அழைக்கப் போகிறேன் என்று சாரு சொன்னதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை தான். இருந்தாலும் வேறு யாரையாவது அழைத்திருக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.

ஒரு நாவலை விமர்சிக்க அவருக்கு தகுதி இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை. ஒரு நாவலை விமர்சிக்க ஒரு வாசகனாக இருந்தால் மட்டும் போதும். உலக நாவல்களை எல்லாம் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தாரளமாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழகு சேர்ப்பது எது? அந்த நூலை முன்பே படித்து, ஆழமாக விமர்சிக்கும் ஒரு உரை தானே? நாலு பேர் அப்படி தீவிர விமர்சனம் செய்பவர்களாக இருக்கும்போது ஒருவர் கமர்ஷியலுக்காக இருக்கலாம். ஆனால் இங்கு நடப்பதோ தலைகீழ்.

கவுதம் மேனனையும், இளையராஜாவையும் பார்ப்பதற்காக வரும் ரசிகக் கூட்டங்களை விட, தீவிர வாசகர்கள் தான் ஒரு இலக்கிய நிகழ்வுக்கு அதிகம் வருகிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு. (எவ்வளவு பெரிய பிரபலம் வந்தாலும், இலக்கியக் கூட்டம் என்றால் தலைதெறிக்க ஓடுபவர்கள் தான் அதிகம்). இந்த தீவிர வாசகர்களுக்கும் சரி, எழுத்தாளருக்கும் சரி ஒரு நல்ல விமர்சன உரையை விட மகிழ்வான ஒன்று இருக்க முடியுமா? ஆனால் அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள்?

காநாசு வுக்குப் பிறகு தமிழில் நல்ல விமர்சனங்களே வருவதில்லை என்று எழுத்தாளர்கள் புலம்புகிறார்கள். விமர்சிக்க வேண்டிய தமிழறிஞர்களோ சமகால இலக்கிய நிகழ்வுகள் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் இலக்கியம் பக்கம் போனாலும், "பாரதி படைப்புகளில் தேசியம்", "குடும்ப நாவல்களில் பெண்மையின் மாண்பு" என்ற வகையில் முனைவர் பட்டம் வாங்குவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சரி அப்போ, யார் விமர்சனம் எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும்? எழுத்தாளர்கள் தானே செய்ய வேண்டும்? தங்கள் வெளியீட்டு விழாக்களில் கூட அப்படி ஒருவரை கண்டறிந்து விமர்சனம் செய்ய வைக்காமல், நாவலை வாசிக்காத  தருண் தேஜ்பாலையும், நண்பன் என்பதற்காக மிஷ்கினையும் வைத்து விழா நடத்தினால் நல்ல விமர்சகர்கள் எப்படி உருவாக முடியும்?

தீவிர விமர்சம் என்றால், டீ கூட குடிக்காத அந்த மாலைப் பசியிலும் தூங்க வைப்பதைப் போல சிலர் உரையாற்றுகிறார்கள். தினத்தந்தி சினிமா விமர்சனத்தை எடுத்துக் கொள்ளுங்கள், படம் பார்க்காத ஒருவனை படம் பார்க்கத் தூண்டுவது போல் எப்படி எழுதுகிறார்கள்? அப்படி எழுதினாலோ, பேசினாலோ தானே நாவலை சராசரி மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும்? அனால் தமிழ் இலக்கியச் சூலில் நடப்பது என்ன? ஒரு பக்கம் எளிமையாக எழுதும் அசோகமித்திரன் படைப்புகளை வாசிப்பது எப்படி என்று இரண்டு நாள் வகுப்பெடுக்கிராகள், இன்னொரு பக்கம் கமலையும் இளையராஜாவையும் நம்பி புத்தகம் விற்க இறங்குகிறார்கள். உண்மையில் இந்த celebrity பிம்பத்தை வைத்து ஒரு புத்தகம் கூட விற்க முடியாது என்பதை இலக்கியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். கமலே guest appearance இல் நடித்தால் கூட, ரசிகனுக்கு பிடித்திருந்தால் தான் படத்துக்கே போவான். பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். சகலமும் சினிமா மயமான தமிழ் நாட்டில் சினிமாவுக்கே  இந்த நிலைமை என்றால் இலக்கியத்துக்கு சொல்லவா வேண்டும்.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்  "காசு கொடுத்து குதிரை வாங்கலாம், ஆனால் கொள்ளு திங்க வைக்க முடியாது".