Sunday, 23 February 2014

பொதுவில் மட்டுமா பெண்களுக்கு உரிமை மறுக்கிறோம்?


பெண்கள் மீதான அடக்குமுறை என்பதைச் சின்ன வயதில் இருந்தே தொடங்கி விடுகிறோம். தங்கையிடம் நம்முடைய பொம்மைக் காரை கொடுக்க மறுப்பதில் இருந்து, நான் ஒரு ஆண், நீ ஒரு பெண் என்ற வேறுபாட்டைத் தொடங்கி வைக்கிறோம். வேறுபாடு கொஞ்ச நாட்களில் ஆதிக்கமாகி, தொடர்ந்து உரிமை மறுப்பாகவும் ஆகி விடுகிறது. 

இதைக் கண்டிக்க வேண்டிய பெற்றோர்கள் தான் முதலில் நம்மை ஊக்குவிக்கிறார்கள். வளர வளர, நம்முடைய அதிகாரம் அதிகமாகும் போதெல்லாம் அதன் கீழ் இருக்கும் பெண்களின் உரிமைகளை நம்மால் எந்த அளவு தடுக்கவும் மறுக்கவும் முடியுமோ அந்த அளவு மறுத்து வருகிறோம். அக்கா, அம்மா, மனைவி, குழந்தை என ஏதாவது ஒரு வழியில் அவர்கள் உரிமையைத் தடுப்பதையே பெருமையாக நினைக்கிறோம். தொடர்ச்சியாக இப்படி உரிமையைத் தடுப்பதன் மூலம் நமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்கிறோம்.

காலப் போக்கில் இப்படி உரிமை மறுக்கப் படுவது தான் இயற்கை எனப் பெண்களும் நம்புகிறார்கள். அது தான் உண்மையான அக்கறை என்று அவர்களே நினைக்கத் தொடங்கி விடுகிறார்கள். "நான் ரோட்டில போறப்ப கீழ குனிஞ்சு நடன்னு, என் தம்பி திட்டுவான்" என்று பெருமையாகச் சொல்லும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். சரி பொது வெளியில் தான் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு ஆண் இப்படிச் செய்கிறான் என்று நினைத்தால் தவறு. படுக்கை அறையில் கணவனும் மனைவியும் மட்டும் இருக்கும் போது கூட அவளுடைய உரிமைகைகளைப் பெரும்பாலான ஆண்கள் மறுத்துவிடுகிறார்கள்.

The Patience Stone படத்தில் கழுத்தில் குண்டு பாய்ந்து கோமாவில் இருக்கும் கணவனை வெளியில் போர் நடப்பதால் வீட்டில் வைத்து கவனிப்பாள் நாயகி. இது நாள் வரை முகம் கொடுத்துக் கூடப் பேசாத கணவனிடம், தன்னுடைய ரகசியங்கள் அனைத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பாள். ஒரு நாள் ஒரு ராணுவ வீரன் துப்பாக்கி முனையில் அவளை வன்புணர்வு செய்கிறான். அவள் ஒரு விலைமாது என்று நினைத்துக் காசை விட்டெரிந்து செல்கிறான்.

இதன் பின் அழுதுகொண்டே கணவனிடம் அவள் சொல்வாள். "உனக்கும் அவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீயும் இப்படித் தான் இருந்த, நம்ம முதல் இரவை நினைச்சுப் பாரு. ஒரு வெறிப் பிடிச்சவன் மாதிரி என் மேல பாய்ஞ்சியே தவிர என்னைப் பத்தி நீ எதுவுமே யோசிக்கல. வலியைத் தவிர எனக்கு எதுவும் தோணல. உனக்கு நான் ஒரு சதைக் குவியல் அவ்வளவு தான்"

தொடர்ந்து அந்த இராணுவத்தான் வருகிறான். குடும்பத்தால் கைவிடப் பட்ட அவள், இரண்டு குழந்தைகளுக்கான செலவிற்காகவும், கணவனின் மருத்துவச் செலவிற்காகவும் ஒத்துக் கொள்கிறாள். இடையில் அவன் மீது கொஞ்சம் பரிதாபமும் வருகிறது. வழக்கம் போலச் சுயநினைவின்றி இருக்கும் கணவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சொல்கிறாள், "அந்தப் பையன் சீக்கிரமா கத்துக்கொள்கிறான், சொல்றதை செய்கிறான். ஆனால் உன்கிட்ட இப்படி எல்லாம் என்னால சொல்ல முடியுமா? சொன்னா நிச்சயம் என்னைக் கொன்னுடுவ. ஆனால் அவன் கையைப் பிடித்து என்னால் வழிகாட்ட முடிகிறது"..

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுக்குக் குற்ற உணர்வு வருகிறது, பெண்கள் இதைப் பற்றியெல்லாம் பேசக் கூடாதே, நான் ஏன் இப்படிப் பேசுகிறேன் என்று உடனே குரானைத் தேடி எடுத்து அணைத்துக் கொள்வாள். ஏதோ பாலஸ்தீனில் மட்டும் இந்த நிலைமை இல்லை, நம் ஊரிலும் இதே தான். ஒரு பெண் தனது பாலியல் சார்ந்த தேவைகளைத் தன்னுடைய கணவனிடம் கூட உரிமையாகத் தெரிவிக்க முடியாது.

அதைப் பற்றிப் பேசுவதே பிடிக்காத மாதிரி பெண்ணாக இருந்தால் மட்டும் அவள் சுத்தமானவள் என்று ஆண்கள் நம்புவார்கள் என்ற எண்ணம் மறைமுகமாகப் பெண்களுக்கும் பரவி விட்டது. ஒவ்வொரு ஆணும் அதையே தான் விரும்புகிறான். ஒன்றும் தெரியாத பெண்ணிற்குத் தான் தான் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறான். பெண்களுக்குத் தெரிந்திரிந்தால் கூட "இவளுக்கு எப்படித் தெரியும்" என்று ரகுவரன் மாதிரி புருஷன் சந்தேகப் பட்டு விடுவானோ என்று பயந்தே வெளியில் காட்டிக் கொள்வதில்லை.

வெறுப்புகளை உடனே காட்டிவிடலாம், ஆனால் பெண்களால் விருப்பங்களை எளிதாக வெளியே சொல்லி விட முடியாது. அதற்கு ஒரு நாளும் நாம் அவர்களை அனுமதித்ததில்லை. ஆரம்பத்தில் தன்னுடைய எதிர்பார்ப்புகள் ஒரு நாலாவது பூர்த்தியாகும் என்று ஏங்குபவர்கள், குழந்தைகள் பிறந்த பின்பு நமக்கு வைத்தது அவ்வளவு தான் என்று சிறிது மனக் குமுறலோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அதைக் கூட வெளியில் யாரிடமும் பகிர முடியாது.

ஒரு அறைக்குள்ளேயே, சகியாக ஏற்றுக் கொண்ட மனைவியின் உரிமையைத் தெரிந்தோ, தெரியாமலோ மறுத்துக் கொண்டிருக்கும் ஆண்கள் எப்படிப் பொதுவில் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவார்கள் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment