Thursday, 27 February 2014


பாரதி-யார் ?

இன்று எல்லா பள்ளிகளிலும் பாரதி விழா சிறப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கும். தமிழாசிரியர்கள் மட்டும் விழுந்து விழுந்து ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருப்பார்கள். மற்ற ஆசிரியர்கள் தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல தங்கள் வேலைகளில் மூழ்கி இருப்பார்கள். தமிழில் பேசினால் தண்டனை வழங்கும் பள்ளிகள் கூட இன்று குழந்தைகளுக்கு பாரதியைப் போல மாறு வேடப் போட்டி நடத்தி, 4 கவிதைகள் ஒப்புவிக்க வைத்து தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வார்கள்.

நிச்சயம் பாரதியார் கவிதைகள் புத்தகம் பரிசாக வழங்கப்படும். மொத்தமாகப் பார்த்தால் எல்லா பள்ளிகளின் போட்டிகளிலும் ஒரு இருபது பாடல்கள் தான் மாறாமல் இருக்கும். சங்கே முழங்கு, செந்தமிழ் நாடென்னும், சிங்களத் தீவினிற்கோர் ........... ஒரு நான்கு வகை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி தலைப்புகள். கவிதைகளை குழந்தைகளே மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும். பேச்சுப் போட்டிக்கும் கட்டுரைக்கும் தமிழாசிரியர்களே எழுதிக் கொடுத்து விடுவார்கள்

அது போன வருடம் எழுதியதாகக் கூட இருக்கும். திக்காமல் உரக்கக் கத்திப் பேசுபவனுக்கு கண்டிப்பாக பரிசு நிச்சயம். அதுவும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லும்போது சிமெண்ட் தரையே பெயர்ந்துவிடும் அளவுக்கு காலை உதைத்து கத்தினால் நிச்சயம் முதல் பரிசு. பாரதியின் வாழ்க்கையும் எழுத்தும் மாணவர்களுக்கு புரிந்ததா என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. முக்கியமாக பாரதியை யார் என்று குழந்தைகளிடம் அறிமுகப் படுத்துவதிலேயே நிறைய தோல்விகள் தமிழ் ஆசிரியர்களிடம்.

கவிஞன், புரட்சியாளன், தேசபக்தன், கட்டுரையாளன், சிறுகதை ஆசிரியர் இதில் எதைச் சொல்லி அறிமுகப் படுத்துவது? சில தேசபக்திப் பாடல்கள், சில தனிப்பாடல்கள் இதை மட்டுமே வைத்துக் கொண்டு காலம் முழுவதும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள். பாரதி சுதேசமித்திரனில் எழுதி இருக்கிறார் என்று மேலோட்டமாக எங்காவது குறிப்பு வந்தால் கூட என்ன எழுதினார் என்று எந்த ஆசிரியரும் மாணவர்களுக்கு விளக்கியதில்லை. அத்தனையும் அருமையான கட்டுரைகள்.

கட்டுரையின் சில சொற்கள் அந்த காலத்தியதாக இருந்தாலும் தரமும் அதன் கருப்பொருளும் இன்றும் நாம் விவாதிக்கத் தகுந்தவை. உதாரணமாக இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் தாய் மொழியில் மருத்துவ, தொழில்நுட்பப் படிப்புகள் வர வேண்டும் என்பதைப் பற்றி அன்றே விவாதித்திருக்கிறார். நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்ற இன்றைய இளைஞர்களின் கேள்விக்கு அருமையான எளிய விளக்கம் அவர் கட்டுரைகளில் இருக்கிறது.

பாரதி சிறுகதை, கட்டுரை எழுதி இருக்கிறார் என்று எனக்கு சென்ற வருடம் தான் தெரியும். எத்தனை பேர் இன்னும் தெரியாமல் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நவீன உரைநடையின் முன்னோடிகளில் பாரதியும் ஒருவர். அனால் இந்த தமிழாசிரியர்கள் இந்த கட்டுரைகளையும் கதைகளையும் முழுதாகப் படித்திருக்கிறார்களா என்றால் சந்தேகமே. பாரதியின் தேசப் பற்று, சாதி ஒழிப்பு, சமூக அக்கறை இப்படி எந்த தலைப்பில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வந்தாலும் சரி, எதிலுமே அவருடைய உரைநடையில் இருந்து மேற்கோள்கள் இருக்காது. எல்லாமே அவருடைய கவிதைகளின் அடிப்படையில் தான் இருக்கும்.

மாணவர்களுக்கு எழுதிக் கொடுக்கும் ஆசிரியர்கள் கட்டுரைகளைப் படித்திருந்தால் நிச்சயம் அவர்கள் மேற்கோள் காட்ட எக்கச்சக்கமான கருத்துகள் அதில் உள்ளன. அல்லது அவர்கள் பாரதியை வெறும் கவிஞனாக மட்டுமே பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை. முடிந்தால் பாரதியார் கட்டுரைகள் புத்தகத்தை பரிசாகக் கொடுப்பதிலிருந்தாவது ஆரம்பிக்கலாம்.

சரி கவிதையிலாவது அவர்கள் புரிதல் சரியாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தேமா புளிமா என மாணவர்களுக்கு யாப்பு சொல்லித் தரும்போதே இந்த கட்டமைப்பை எப்படி உடைத்து புதுக்கவிதை படைத்திருக்கிறான் பாரதி என்று சொல்லிக் கொடுத்திருந்தால், இன்று அவனவன் கவிதை எழுதிக் கொண்டு திரிந்திருக்க மாட்டான்

பாரதியின் கட்டுரைகள் இணையத்திலே படிக்கக் கிடைக்கின்றன. தவறவிட்டவர்கள் இன்றே படிக்கவும். வாழ்த்தி வாழ்த்தி போஸ்ட் போட்டும், அவர் படங்களை ப்ரொபைல் படமாக வைத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்களால் முடிந்தால் மற்றவர்களையும் படிக்க வைக்கவும்.

http://www.tamilvu.org/library/lA450/html/lA450cnt.htm

No comments:

Post a Comment