Friday, 16 October 2015

எந்தவித அரசியல் தொடர்பும் இல்லாத, தங்கள் அன்றாட வாழக்கைக்காகத் தினமும் ஓடிக்கொண்டிருக்கும் சாதாரண மக்கள் சிலரிடம் மாட்டுக்கறிக்கு எதிராக நடப்பவைகளைப் பற்றிக் கேட்டேன். அவர்களில் சிலர் பள்ளிக்கல்வி வரை படித்தவர்கள், சிலர் கல்லூரி முடித்து வேலை பார்ப்பவர்கள், குடும்பத்தலைவிகள் இப்படி.. ஆனால், எல்லோருமே மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள். அவர்களிடம் மாட்டுக்கறி மீதான தடையைப் பற்றிக் கேட்டபோது, எல்லோரும் ஒரே மாதிரி, "அதனால் என்ன?, தடை செஞ்சா செஞ்சுக்கட்டும்" என்றார்கள்.

அவர்களுடைய உணவில் மாட்டுக்கறி இல்லாததால், அதற்குத் தடை விதிப்பதைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. "சரி மாட்டுக்கறி சாப்பிடுறவங்களைக் கொலை செய்யலாமா?" என்று கேட்டேன். "ஐயோ, பசு மாட்டைக் கொன்னா, பாவம்னு சொல்வாங்க, அதுக்காக மனுஷனைக் கொன்னால், அது பெரிய பாவமாச்சே" என்றார்கள்.

இதுதான் இந்த விஷயத்தில் சாதாரண மக்களின் புரிதல் / நிலைப்பாடு.
பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் மக்களின் உணவை சூழலியல் காரணங்களுக்காக அன்றி, மத நம்பிக்கையின் பெயரால் தடை செய்வதில் உள்ள உரிமை மீறலையும், அதன் எதிர்கால விளைவுகளையும் எளிய மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அதைவிடக் கொடுமை, தாத்ரி படுகொலைப் பற்றி நான் பேசிய 80% பேர்களுக்குத் தெரியவில்லை. சீரியல்களுக்கிடையே அவர்கள் பார்க்கும் அரை மணிநேரச் செய்திதான் அவர்களுக்கும், உலகத்திற்கும் இடையேயான தொடர்பு. இந்த மாதிரி சின்ன விஷயங்களெல்லாம் நம்முடைய அரைமணிச் செய்திகளில் ஓரிரு நாட்களுக்குச்\ சில நொடிகள் இடம்பெற்று, இப்பொது காணாமல் போய்விட்டன.

இந்தியாவில் ஒருவர் தான் விரும்பிய எந்த மதத்தையும் பின் தொடரலாம். பின் தொடர்ந்தாலும், அந்த மதத்தின் எல்லா வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என்பது தான், நமக்குள்ள சுதந்திரம். ஒரு மதத்தில் உள்ள தவிர்க்கப்பட்ட விஷயங்களை நாம் செய்தால், யாரும் நம்மை மதத்தை விட்டு விலக்கி வைக்க முடியாது. ஏனெனில் எந்த மதத்துக்கும், அதிகாரம் ஒரு புள்ளியில் இல்லை. நாம் ஒரு மதத்தைப் பின்பற்றுவதை எந்த ஒரு தனி நபரும், அமைப்பும் அங்கீகரிக்கத் தேவையில்லை. பிடித்தால் இருக்கலாம். அவ்வளவு தான். மதத்தைப் பின்தொடரவே இப்படிக் கட்டுப்பாடுகள் இல்லாத போது, மதத்தின் வழி முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சொல்வது எவ்வளவு நகைப்புக்குரியது? நாம் சார்ந்திருக்கும் மதத்தைச் சேர்ந்தவர்களையே இப்படிக் கட்டாயப் படுத்த முடியாத போது, நம்முடைய மத நம்பிக்கைக்காக, வேறு மதத்தவரைக் கட்டாயப்படுத்துவது அதைவிடகேவலமான ஒரு செயல் தானே.

யாருடைய சாப்பாட்டுத் தட்டையோ பறிக்கிறார்கள் என்று விட்டுவிட்டால், நாளை நம் தட்டைப் பறிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இதே கும்பல், நாளை இந்து மதம் சைவத்தைப் பின்பற்றச் சொல்லியிருக்கிறது என்று ஆடு, கோழி, மீன் தின்பதை தடை செய்தால் என்ன செய்வது? இன்னும் முத்திப் போய், வெங்காயம் பூண்டையும் தடை செய்தாலும் செய்வார்கள். இவர்களுக்கு நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றிய கவலையில்லை, நம் மீது அவர்கள் தொடர்ந்து அதிகாரம் செலுத்தவேண்டும் என்பதே முக்கியம். ஜாதி, மத அடிப்படைவாதிகள் எல்லோரும் இதே வகையினர் தான். மேலோட்டமாகப் பார்க்கும்போது எதிர் சாரரைத் தாக்குவது போலத் தோன்றினாலும், உள்ளுக்குள் அவர்கள் தங்கள் சொந்த ஜாதி, மத மக்களின் மீது தங்கள் அடக்குமுறையை இறுக்குகிறார்கள்.

இதையெல்லாம் சாதாரண மக்களிடம் சொல்லிப் புரியவைப்பது யார்? ஆயிரம் போராட்டங்கள் நடத்தலாம், ஆனால் யாருக்காகப் போராடுகிறோமோ, அவர்களுக்கு நாம் எதற்காகப் போராடுகிறோம் என்பது தெரியவேண்டுமல்லவா? சரி யார் இதை மக்களிடம் கொண்டு சென்று புரியவைப்பது? வேறு யார் கலைஞர்கள் தானே? கலையின் தொடக்கமே இப்படி வந்தது தான். மனிதன் தனியாகச் சுற்றித் தெரிந்தபோது, அவனுக்கு மொழியோ, ஓவியமோ, குரலோ தேவைப்படவில்லை. ஒரு குழுவாக வாழத் தொடங்கியபோது தகவல்களைப் பரப்ப, தனக்குத் தெரிந்த அத்தனை கலை வடிவங்களையும் முயன்றான். அது அந்தக் குழுவுக்கும், அதனைத் தொடர்ந்து வந்த தலைமுறைகளுக்கும் பயனளித்து வளர உதவியது.

துரதிருஷ்டவசமாக இன்று நம் கலையின் அத்தனை வடிவங்களும் சினிமா, டிவி என்பவற்றுக்குள் முடங்கி விட்டது. மக்களுக்குக் கல்வி அறிவு குறைவாக இருந்த காலத்தில் இப்படி நாடகம், சினிமா போன்ற ஊடகங்கள் பிரபலமாக இருந்ததைப் போல, எழுத்தறிவு உயர்ந்த பிறகு மற்ற கலைகளும் வளர்ந்திருக்க வேண்டும் .ஆனால் நம் நாட்டில் எல்லாமே தழைகீழ். சினிமா, டிவி போன்ற ஊடகங்களைத் தவிர்த்து மக்களிடம் சென்று சேர்பவர்கள் என்று பார்த்தால் எழுத்தாளர்கள் தாம்.
தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட சூழலில் பிற தலையீடுகள் இன்றி இதெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்க எழுத்தாளர்களாலேயே முடியும்.

அது என்ன எழுத்தாளர்களுக்கு மட்டும் சமூக அக்கறை வேண்டுமென்று எதிர் பார்க்கிறீர்கள்? என்று சிலர் கேட்பதுண்டு. யாரால் முடியுமோ அவர்களிடம் தானே கேட்க முடியும். எழுத்தாளனை யார் மதிக்கிறார்கள்? சினிமாக்காரர்களைத் தானே மதிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். எப்பொழுது எழுத்தாளர்கள் தனக்காகத்தான் எழுதுகிறார்கள் என்று பாமர மக்கள் உணர்கிறார்களோ, அப்போது நிச்சயம் மதிப்பார்கள். சினிமா ஹீரோக்கள், மக்களுக்காக உழைப்பதைப் போல நடிக்கவாவது செய்கிறார்கள். நம் ஊர், பெரும்பான்மை எழுத்தாளர்கள் நாட்டில் என்ன நடந்தாலும் வாய் திறப்பதில்லை. இதுபோன்ற படுகொலையை விடுங்கள், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், "அதனால் எனக்கென்ன, போன வாரம் ஜப்பான் போனதைப் பற்றிப் புத்தகம் எழுதியிருக்கிறேன், வாசியுங்கள்" என்கிறார்கள்.

ஒரு சமூகத்தின் சிந்தனைத் தளத்தை உயர்த்துபவர்கள் எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், கல்வியாளர்களுமே. அதற்காக எழுத்தாளர்களைத் தெருவில் இறங்கிப் போராடச் சொல்லவில்லை. அவர்களின் ஆயுதம் எழுத்து. எளிய மக்களுக்கு, இந்த மாட்டுகறித் தடை போன்ற விஷயங்களின் பின்நாள் உள்ள அரசியலையும், அதன் எதிர்கால விளைவுகளையும் எழிமையாக எழுதிப் புரிய வைத்தால் போதும். ஒவ்வொருவரும் தாங்கள் தொடர்ந்து எழுதும் பத்திருக்கைகளில், இதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தருகிறேன், பிரசுரியுங்கள் என்று நிர்பந்திக்கலாம். தங்களின் வலைத்தளங்களில் எழுதி, வாசகர்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். கொலை காரனெல்லாம், சமூக வலைத்தளத்தின் வீச்சால் ஆடியோ வெளியிடும்போது, ஏன் எழுத்தாளர்களால் முடியாது?

தொடர்ச்சியாக இதைப்பற்றி விவாதிக்கும்போதும், எழுதும்போதும் எப்படியாவது மக்களின் காதுகளுக்கு எட்டிவிடும். எதுவும் முடியாதபோது, விருதுகளைத் திருப்பிக் கொடுக்கலாம். நம் ஊர் எழுத்தாளர்கள் எழுதுவதும் இல்லை, விருதைத் திருப்பிக் கொடுப்பவர்களையும் நக்கலடிக்கிறார்கள். ஐயா சாமிகளே, நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய விருதுகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அட்லீஸ்ட் எழுதுங்கள்.

Monday, 25 May 2015

அக்ரி, பயோ- டெக்னாலஜி, மரைன் & இன்னபிற

பனிரெண்டாம் வகுப்பு முடித்த இரண்டு மாணவிகளிடம் பேசினேன். இருவருக்கும் நல்ல கட் -ஆஃப் மதிப்பெண்கள். இருவரும் திருச்சி மாநகரத்தில் உள்ள புகழ்பெற்ற இரண்டு பள்ளிகளில் படித்தவர்கள். ஆனால் சொந்த ஊர், திருச்சியின் இரண்டு மூலைகளில் உள்ளது. அடுத்து என்ன செய்யலாம் என்று அவர்களிடமே கேட்டேன், இருவரும் சொன்னது "எஞ்சினியரிங்க்கு இப்போ வேல்யூ இல்லை, படிச்ச நெறய பேருக்கு வேலை இல்லை. அக்ரி, பயோ டெக்னாலஜி இல்லைனா பி.டி. எஸ் படிக்கலாம்".

கொஞ்சம் பொறுமையாகவே அவர்களிடம் கேட்டேன், "சரி அக்ரி படிச்சா எங்கே வேலை கிடைக்கும்? அக்ரியில் என்ன படிக்கப் போற?". அவர்களுக்கு சொல்லத் தெரியவில்லை. இதையெல்லாம் யார் சொன்னார்கள் என்று கேட்டேன். அவர்கள் தோழிகளுக்குள்  இப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்பது மட்டும், ஊரில் கடந்த சில ஆண்டுகளில் எஞ்சினியரிங் படித்துவிட்டு சும்மா இருப்பவர்களைப் பார்த்து உறுதி செய்ப்பப் பட்டிருக்கிறது. இவர்களுடைய மதிப்பெண்ணிற்கு அரசு / அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும்.

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என்னைச் சுற்றி இருந்த நலம் விரும்பிகள் நான் எஞ்சினியரிங் சேரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாலும், நான் தெளிவாகத்தான் இருந்தேன். கல்விக்கடன் கிடைக்கும் என்று நம்பினாலும் பயத்துடன் பெற்றோரும் சம்மதித்திருந்தனர். எனக்கு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர வேண்டும் என்பது பெரிய கனவு. அதில் சீட்டே கிடைக்காது என்று என்னுடைய பள்ளி முன்னோர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் என்னுடைய மதிப்பெண்ணிற்கு தமிழகத்தின் முக்கியமான அரசு உதவிபெறும் கல்லூரியில் (மதுரை)  சீட் இருந்தது. மறுநாள் காலை கவுன்சிலிங். ஆனால் எனக்கு திருச்சி கல்லூரியில் படிக்கத்தான் விருப்பம். என்ஐடியில் எங்களுக்கு வழிகாட்டிய ஒரு அண்ணனிடம் நம்பர் வாங்கி வைத்திருந்தேன்.

இரவு அவரிடம் போன் செய்து கேட்டேன்," திருச்சியிலேயே படிக்கவா?" என்று. அவர் கெட்ட வார்த்தையில் திட்டாத குறை தான். ஒரு வழியாக அரை மனதுடன் தான் மதுரையில் சேர தேர்வு செய்துவிட்டு வந்தேன். இப்போது நினைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. அந்த வயதில், நான் வளர்ந்த சூழலில் என்னுடைய மெச்சூரிட்டி அவ்வளவு தான். வளரும் சூழலில் எது தொடர்ந்து சொல்லப்பட்டு மனதில் பதிய வைக்கப் படுகிறதோ, அதை மீறிய ஒரு முடிவை எடுப்பதற்கு கடினமாக இருக்கும். இந்த மாணவிகளின் சூழலை, திருச்சி போன்ற இரண்டாம் தர நகரத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் சூழலாக எடுத்துக்கொள்வோம்.

எஞ்சினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்று தொடர்ந்து சூழலில் பதிய வைக்கப்படும்போது, அதனால் பாதிக்கப்படுவது உயர்தட்டு மாணவர்கள் அல்ல. பெருமைக்காக படிக்க வைப்பவர்களும், படித்த பெற்றோகளும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே தான் செய்கிறார்கள். ஆனால், ஒரு அடிமட்டத்தில் இருந்தோ, நடுத்தர குடும்பங்களில் இருந்தோ முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவர்களிடம் இது எத்தகைய பயத்தை உருவாக்கும் என்பதை யோசிக்க வேண்டும். நல்ல மதிப்பெண்களே எடுத்திருந்தாலும், கடன் வாங்கி ஒருவன் அந்த நிலையில் இருந்து படிக்க வரும்போது, எந்த விதமான நம்பிக்கையை இது கொடுக்கும்? 90% வேலை வாய்ப்பு கிடைக்கும் சிறந்த கல்லூரிகளில் சேர்ந்தால் கூட, அதற்காக சக மாணவனுடன் போட்டியிட வேண்டும் என்ற சூழலில், தமிழ் வழியில் படித்த ஒரு கிராமப்புற மாணவனுக்கு வேலை கிடைக்காதோ என்ற பயம் ஏற்ப்படுத்தும் மன உளைச்சல் எத்தகையது, என்று யோசிக்கிறோமா?

கல்வி வழிகாட்டிகள் என்று கல்லூரிகளுடன் கூடு சேர்ந்து கொண்டு வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம், பயோ-டேக், மரைன், ஃபேஷன் டேக் என்றெல்லாம் மாணவர்களுக்கு கலர் கலர் கனவுகளை மட்டும் கொடுக்கிறார்கள். எதிர்காலத்தில் பிரகாசமான வேலை என்பார்கள். நிகழ்காலத்தில் இந்தத் துறைகளில் எந்தெந்த நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலை வழங்கியிருக்கின்றன என்பது யாறுக்கும் தெரியாது. இவற்றுடன் ஒப்பிட்டால் மெயின் ஸ்ட்ரீம் என்று சொல்லக் கூடிய வழக்கமான எஞ்சினியரின் படிப்புகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் யாருக்கும் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்ல விருப்பமில்லை.

மாணவர்களே சில நேரம் ஒத்துக்கொண்டாலும் பெற்றோர்கள் "எதுக்குடா இந்த ஆறாயிரத்துக்கு இப்படி கஷ்டப் படுற?" என்று அனுப்புவதில்லை. முக்கியமாக வெளி மாநிலங்களில், சைட் வேலை என்று சொல்லப்படும் வேலைகளுக்கு செல்வதை நம் ஆட்கள் முடிந்த அளவு தவிர்க்கவே பார்க்கிறார்கள். குறைந்த ஊதியம் என்பதோ, வெளியூரில் வேலை என்பதோ வாழ்கையின் முடிவு அல்ல. அது ஒரு தொடக்கம். என்னுடைய முதல் சம்பளம், இன்று ஆறு மடங்காக ஆகியிருக்கிறது.

மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் சராசரி ஊதியம் பெறுவதற்கே ஏதாவது ஒரு கட்டத்தில் கஷ்டப் பட்டிருக்க வேண்டும். ஒன்று பள்ளியில் கஷ்டப்பட்டு நல்ல கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது கல்லூரியில் கஷ்டப்பட்டு வேலைவாய்ப்புக்குத் தகுதியானவராக மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது வெளியில் குறைந்த ஊழியத்தில் ஒரு துறையில் நுழைந்து கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதில் ஏதாவது ஒன்றை செய்தே ஆகவேண்டும். போட்டி அதிகமாகிவிட்ட சூழலில் எந்தத் துறையிலும் எளிதில் வேலைவாய்ப்போ, அதிக ஊதியமோ கிடைக்காது. அதே போலத்தான் பொறியியல் துறையும். விரும்பிப் படிப்பவர்களுக்கும், இது தான் தன் குடும்பத்தை சமூக பொருளாதார நிலைகளில் உயர்த்தும் என்று முனைப்புடன் படிப்பவர்களுக்கும் தாராளமாக வேலை கிடைக்கும்.


Monday, 18 May 2015

ஷாப்பிங்

தோழிக்கு சுடிதார் வாங்குவதற்காக ஒரு கடையில் சில மணி நேரங்கள் தேடி, கடைசியாக ஒரு கருப்பு சுடிதார் பார்த்ததும் இருவருக்கும் பிடித்திருந்தது. "நல்லா இருக்கு, எடுத்துக்கோ" என்றேன். "இது இருக்கட்டும், அந்த லைனையும் பார்க்கலாம்" என்றால். அந்த வரிசையைப் பார்த்து முடித்து வரும்போது, அந்த கறுப்புச் சுடிதாரை இன்னொரு பெண் தனக்கு வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் அப்பாவும் அருமையாக இருக்கிறதென்று சொல்லிவிட்டதால், நேரடியாக பில் போடா எடுத்துச் சென்று விட்டனர்.

இதைப் பார்த்ததும் தோழிக்கு வந்த கோபத்திற்கு, கடையில் எதுவும் கலவரம் வந்துவிடாமல் இருக்க, எல்லாத் திட்டையும் நானே வாங்கிக் கொண்டு, சரி வா வேற பார்க்கலாம் என்றேன். "வெட்டியா தானே இருக்க, அதை எடுத்து கையில வச்சிருக்கலாம்ல?" என்று திட்டிக் கொண்டே பார்க்க மனமில்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டே வந்தாள். அந்த நேரத்தில் சேல்ஸ்மேன் புண்ணியவான் அதே மாடல் கருப்பு சுடிதாரில் இரண்டு பீஸ்களைக் கொண்டுவந்து லைனில் வைத்தார். "கடவுள் இருக்கான் கொமாரு" என்று நினைத்துக் கொண்டே அவளிடம் அதைக் காட்டி, வா போய் எடுக்கலாம் என்றேன். முறைத்துவிட்டு " அந்த பொண்ணு எடுத்த அதே சுடிதாரை எல்லாம் என்னால எடுக்க முடியாது, வேற பார்க்கலாம்" என்று அவள் சொன்னபோது, லேசாக தலை சுற்ற ஆரம்பித்தது.

மறுபடியும் லைன்-1 இல் ஆரம்பித்து லைன்-3 இல் வரும்போது, ஒரு சுடிதாரை ஆர்வமாக எடுத்து அவள் மேல் வைத்துக் காட்டி நல்லா இருக்கா என்றாள். ஆஹா முடியப் போகுது என்ற சந்தோஷத்தில், அருமையா இருக்கு, இந்தக் கலர் தான் சூப்பரா வித்தியாசமா இருக்கு என்றேன். ஸ்கூலில் அத்தனை நாடகங்கள் நடித்தும் கடைசியில் எதுவம் கை கொடுக்கவில்லை. எப்படியோ கண்டுபிடித்துவிட்டு வேண்டாம் என்றாள். ராஜதந்திரங்கள் வீணாகப் போன சோகத்தில் சரி வா அடுத்து பார்க்கலாம் என்றேன். அதையே கையில் வைத்துக் கொண்டே இருந்தாள், "பிடிச்சிருந்தா எடு" என்றேன்.

 பக்கத்தில் கூப்பிட்டு "நமக்குப் முன்னாடி ஒரு அம்மாவும் பொண்ணும் நிக்கிறாங்களா?" என்றாள். பார்த்தேன். "நான் இதை எடுத்து வச்சுப் பார்க்கும்போது, அந்த பொண்ணு அவங்க அம்மா கிட்ட இந்த சுடிதாரைக் காட்டி நல்லா இருக்குல்லன்னு கேட்டுச்சு, அந்த அம்மாவும் தலையாட்டுச்சு, இப்பவும் அவங்க இதையே தான் பார்த்துகிட்டு இருக்காங்க பாரு" என்றாள். "சரி வச்சுட்டு வா, அவங்க எடுக்கட்டும்" என்றேன். "அதெப்படி அப்படியே விட முடியும்.. கொஞ்ச நேரம் அவங்களை கடுப்பேத்தலாம்." என்று அடுத்த பத்து நிமிடங்களுக்கு கையிலேயே வைத்திருந்தாள். இவள் வைத்துவிட்டுக் கிளம்பும்போது அவர்கள் வந்து எடுக்கிறார்களா என்பதையும் திரும்பிப் பார்த்துக் கொண்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.

தலை சுற்றலை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அடுத்து எங்கே என்றேன். போத்தீஸ். ரெடிமேட் லைன் 1-5, மட்டீரியல் லைன் 1- 8 என்று சுழற்சி முறையில் சென்று கொண்டிருந்தது. இடையிடையில் இது எப்படி இருக்கு என்று எதையாவது காட்டுவதும், கேவலமா இருக்கு என்ற பதிலில் கடையில் ஒரு பல்ப் கூடுவதுமாக இருந்தது. ஒரு வழியாக ஒரு மஞ்சள் சுடிதாரை எடுத்து சேல்ஸ் கேர்ளிடம் கொடுத்து தனியாக வைக்கச் சொன்னாள். அந்தப் பக்கம் போன இன்னொரு பெண் அதை ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டே போனாள். என்னிடம் வந்து "இப்போ பாரு அந்த பொண்ணு மஞ்சள் கலரையா தேடுவாள்" என்று கிசுகிசுத்தாள். ஆச்சர்யமாக அவளும் அப்படியே செய்துகொண்டிருந்தாள். "சரி எடுத்தாச்சுல்ல, வா போகலாம்" என்றேன். "நமக்கு மஞ்சள் வேண்டாம், பச்சையில் பார்க்கலாம்" என்று சொன்னபோது அப்படியே கண்கள் சொருகி இரு வரேன் என்று நகர்ந்தேன். கொஞ்சம் உட்காரலாம் என்று சேர்கள் போட்டிருக்கும் பகுதிக்குச் சென்றால், எல்லா இருக்கைகளையும் அடைத்துக் கொண்டு ஆண்கள் அமர்ந்திருந்தனர்.

Wednesday, 13 May 2015

"காந்தியை ஏமாற்றி வரும் இந்தியா" என்ற தலைப்பில் திரு மு. இராமனாதன் தமிழ் இந்துவில் ஒரு அழகான கட்டுரை எழுதியிருக்கிறார். ஹாங்காங் புறநகர் பகுதி மோனோ ரயிலில் இவர் பயணித்த போது, மெட்ரோ ரயில்களைப் போல டிக்கெட் இருந்தால் தான் திறக்கும் தானியங்கி கதவுகள் இல்லாமல் இருந்த போதும், எல்லோரும் முறையாக டிக்கெட் எடுத்து பயணித்ததைப் பார்த்து ஆச்சர்யமடந்திருக்கிறார். தன்னுடன் வந்தவரிடம், "இது எப்படி சாத்தியமானது?" என்று கேட்டபோது, அவர் "நாங்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் எனபதை  பள்ளியிலேயே பழக்கிவிடுகிறோம்" என்றாராம்.

"காந்தி விடுதலைப் போராட்டத்திற்காக சட்டத்தை மீறினாலும், மற்ற விஷயங்களில் எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றே விரும்பினார். ஒரு நல்ல சிவில் சமூகம் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் சொன்னதை ஏன் பள்ளியிலேயே நாம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதில்லை?" என்று வருத்தப்படுகிறார். தான் பார்த்த சில உதாரணங்களைக் குறிப்பிட்டு, சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தால் இளைஞர்கள் இப்படி ஆகியிருக்க மாட்டார்கள் என்கிறார்.

காந்தி சொன்னபடி சட்டத்தை மதிப்பதை பள்ளிகள் போதிக்கின்றனவா என்பதை பின்னால் பார்க்கலாம். முதலில் காந்தியைப் பற்றி பள்ளிகள் என்ன சொல்லித்தருகின்றன என்பதைப் பார்ப்போம். பாடத்திட்டம், பேச்சுப்போட்டி, ஆண்டுவிழா இவற்றிலெல்லாம் காந்தியும் அஹிம்சையும் முன்னிறுத்தப் படுகின்றன. ஆனால் மாணவர்களுடன் நேரடியாக உரையாடும் ஆசிரியர்களுக்கு காந்தியின் மேலுள்ள அபிப்பிராயம் என்ன? உண்மையில் சரி பாதி ஆசிரியர்களுக்கு காந்தியைப் பிடிக்கவில்லை. அதிலும் சில பேருக்கு காந்தி என்றாலே ஆகாது. ,

"காந்தி ஒரு அயோக்கியன், ஏமாற்றுக்காரன், ("ன்" தான் "ர்" அல்ல) தேச துரோகி, சுயநலவாதி, பொம்பளை பொருக்கி, காந்தியால் தான் சுதந்திரம் தாமதமானது, சண்டையிட்டிருந்தால் வெள்ளைக்காரன் அப்பவே ஓடியிருப்பான், கோட்சே தான் உண்மையான தேச பக்தன்" இப்படி எல்லாம் ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு சொல்லித் தருவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு ஆசிரியர் அல்ல, பலர் இதையே செய்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை அரிதாகவே ஏற்றுக்கொள்ளும் மாணவர்கள் இதை அப்படியே நம்பி ஏற்கிறார்கள்.

"உலகமே உத்தமர் என்று சொல்பவரைப் பற்றிய ரகசிய உண்மைகள் எனக்குத் தெரியும், நல்லவேளை என் ஆசிரியர் உண்மையைச் சொன்னதால் அந்த ஆளைப் பற்றி தெரிந்தது, இல்லையென்றால் உன்னைப் போல நானும் அவனை தேசத்தந்தை என்று நம்பியிருப்பேன்" என்ற மனநிலையில் நிறைய மாணவர்கள் பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு பத்தாவது படிக்கும் சிறுவனுக்கு வேறு என்ன மனமுதிர்ச்சி இருக்கக்கூடும். ஒருமுறை இப்படி மனதில் பதிய வைக்கப்பட்டபின் அதை மாற்றுவது மிகவும் கடினமான வேலையாக இருக்கிறது.

ஒரு பக்கம் நேதாஜி வெறியர்கள், சில ஜாதி அமைப்பில் மூழ்கிப் போனவர்கள், இன்னொரு பக்கம் அம்பேத்காரை புறக்கணித்தார் காந்தி என்ற ஆதங்கத்தில் இன்னொரு ஜாதி ஆட்கள், இன்னொரு பக்கம் இப்படி  அரைகுறையாக கேள்விப்பட்டு, அரைகுறையாகவே பயின்ற ஆசிரியர்கள். இன்னும் சில பேருக்கு அஹிம்சை, சத்தியாகிரகம் என்பதெல்லாம் ஒரு நடக்கவியலாத சமாச்சாரமாகத் தெரிகிறது. அதெல்லாம் நடந்திருக்க சாத்தியமே இல்லை, இரண்டாம் உலகப் போரால் இங்கிலாந்து நலிவடைந்து இருந்தது, அதனால் அவர்கள் வெளியேறினார்கள். புகழை எல்லாம் காந்தி எடுத்துக்கொண்டார் என்பார்கள்.

அஹிம்சை என்பது ஒரு ஆச்சர்யமான, நிகழ வாய்ப்பே இல்லாத விஷயம் தான். இத்தனை கோடி வருடங்களாக பூமியில் இருந்துவரும் உயிரினங்களின் அடிப்படை இயல்புக்கு எதிரானது. எந்த உயிரினமும், தன்னை ஒரு வலிமையான எதிரி தாக்கும்போது, முடிந்த அளவு போராடித்தான் சரணடையும். அஹிம்சை முறையில் எந்த விலங்குடனும் போராட முடியாது, மனிதனைத் தவிர. ஆயுதம் ஏந்திப் போராடுவதை விட அறவழி அஹிம்சைப் போராட்டத்திற்கு, தைரியம், மன முதிர்ச்சி, ஒற்றுமை வேண்டும். இத்தனை கோடி ஆண்டு வரலாற்றுக்கு எதிராக, இவ்வளவு பெரிய தேசத்தில் மக்களை ஒருங்கிணைத்து காந்தி அதை சாதித்தற்காகத்தான் உலகம் அவரைக் கொண்டாடுகிறது.

அவருக்கும் சில குறைகள் இருந்ததன. அதை அவர் பொதுவில் வைத்தார். உங்களுக்கோ எனக்கோ அந்த தைரியம் இல்லை, நாம் ஒருவேளை ஒரு குழந்தையை வன்புணர்வு செய்திருப்போம், நண்பன் நாசகாகப் போக வேண்டும் என்று வேண்டியிருப்போம். சந்தப்பம் கிடைத்தால் யாரையாவது கொலை செய்யலாம் என்று எண்ணியிருப்போம். ஆனால், இதையெல்லாம் வசதியாக மறந்தோ மறுத்தோ விடுவோம். ஒருவேளை காந்தியைப் போல நாமும் சுய பரிசோதனை செய்துகொண்டிருந்தால் யார் அயோக்கியன் என்று தெரியவரும்.

Thursday, 2 April 2015

சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி
சஞ்சரிக்கும் தவம் காதல்.
‪#‎தரமணி‬ படத்தின் போஸ்டர்களில் இப்படி விளம்பரப் படுத்துகிறார் இயக்குனர் ராம்.
தொடர்ந்து தெய்வீகக் காதல், காமமில்லாக் காதல், புனிதமானக் காதல், சமூக விழுமியங்கள் இப்படி தனக்கு பிடித்தமான விஷயங்கள் மட்டுமே உண்மையானவை என்று தனது படங்களின் மூலம் ரசிகர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றார். கொடுமை என்னவென்றால் இவரை தமிழகத்தின் மிகப்பெரிய இண்டெலெக்சுவலாக நினைத்து அப்பாவி இளைஞர்கள் பலர் இவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் எம். ஏ ஒரு ஆகச் சிறந்த குப்பை. பீச்சில் இரண்டு பேர் முத்தம் கொடுத்துகொள்கிரார்கள் என்றால் அது அவர்கள் உதடு. அதற்காக கொலை செய்வதெல்லாம் பெரிய காமெடி.. கேட்டால் பப்ளிக்கில் செய்கிறார்கள் என்றும், சமுதாயம் தான் அவனை அப்படி செய்ய வைத்தது என்றும் விளக்கம் சொல்லுவார். உளவியல் ரீதியாகப் பார்த்தால், இந்த சதையில்லா காதல், காமமில்லா காதல் போன்ற போலி கலாச்சார விழுமியங்கள் தான் அப்படி ஒருவன் பீச்சில் முத்தம் கொடுத்துக் கொள்பவர்களைப் பார்த்து கோபப் பட வைக்கிறது. கொடுமை என்னவென்றால் அதே போலி விழுமியங்களை ராம் தான் தனது ரசிகர்களுக்கு புகட்டிக் கொண்டிருக்கிறார்.
பொதுவெளியில் முத்தம் கொடுத்தால் என்னய்யா தவறு? எல்லா விலங்குகளும் பொதுவெளியில் தான் புணர்கின்றன. அது தான் இயற்கை. இரண்டு நாய்கள் புணரும்போது இன்னொரு நாய் வெறிக்க வெறிக்க நின்று வேடிக்கை பார்ப்பதில்லை.. காதலர்கள் எல்லை மீறுகிறார்கள் என்று பொங்கும் கலாச்சாரக் காவலர்களை நினைத்தால் அப்படி வேடிக்கை பார்க்கும் ஒரு நாயைப் போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. மனிதனுடைய பாலியல் ஒழுக்கக் கோட்பாடுகள் எல்லாம் இயற்கையானவை என்று நினைத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவுமில்லை. இந்த பாலியல் ஒழுங்கு என்று வெங்காயங்கள் எல்லாம் முழுக்க முழுக்க நாமே கட்டமைத்துக் கொண்ட செயற்கை விதிகள்.
Guns, Germs, and Steel: The Fates of Human Societies என்ற புத்தகத்தை எழுதிய Jared Diamond எழுதிய இன்னொரு அற்புதமான புத்தகம் Why is Sex Fun? The Evolution of Human Sexuality . இது இலவசமாக PDF இல் கூட கிடைக்கிறது. முடிந்தவர்கள் படித்துப் பாருங்கள். மனிதன் பாலியல் ஒழுக்கம் தொடர்பான விஷயங்களில் எவ்வளவு செயற்கையாக நடந்து கொண்டிருக்கிறான் என்பது புரியும். ராம் மாதிரியான ஆட்கள் கையில் இந்த சமூகம் மாட்டும்போது ஆண்குறியை வெட்டிவிட்டு, பெண்குறியை சிமெண்ட் வைத்து நிரப்பிவிட்டும் தான் காதலிக்க அனுமதிப்பாரோ என்று தோன்றுகிறது.
"என்னடா உன் ஆளுக்கு முத்தம் கொடுத்தியா?"ன்னு கேட்டால், "தப்பா பேசாதடா, எங்க காதல் புனிதமானது, அவளை அந்த மாதிரி எண்ணத்தோட என்னால பார்க்கவே முடியாது" என்று சில கோஷ்டிகள் பதில் சொல்லும். "அடேய் உன் ஆளை தாண்டா அப்படி பாக்கணும், மத்த பொண்ணுங்களை அந்த என்னத்துல பாக்கக் கூடாதுன்னு" சொன்னாலும் அவங்களுக்கு புரியாது. எத்தனை ஆதவன் வந்தாலும் இவங்களை திருத்தமுடியாது. இந்த மாதிரி அப்பாவி குஞ்சுகள் ராம் மாதிரி விழுமிய இயக்குனர்கள் கையில் சிக்கும்போது இந்த சமூகத்தில் எல்லாமே தவறு என்பதைப் போல பொங்கிக் கொண்டிருப்பார்கள். ராம் ரசிகர்கள் முதலிரவுக்கு போகும்போது, ஒரு தூபக்காலும், சூடத் தட்டும் கொண்டு போவார்கள் என்று நம்புகிறேன்.

Tuesday, 31 March 2015

அன்புள்ள திராவிடக் கண்மணிகளுக்கு,
(சுயமரியாதை இயக்கம், தி.க முதல் லதிமுக வரை)

வணக்கம்,
நான் ஒரு திராவிடன் என்பதை, என்னுடைய ஒரு மூன்று நான்கு தலைமுறைகளை ஆராய்ந்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதற்கு முன்பு, என் மூதாதையர் எந்த இனக்குழுவில் இருந்தனர் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மனித இனத்தின் ஆயுளான பல கோடி ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த மூன்று நான்கு தலைமுறைக் காலம் என்பது மிகவும் குறுகியக் கட்டம் என்பதால், என்னை ஒரு குறுப்பிட்ட இனக்குழுவுக்குள் சுருக்கிக் கொள்வதை நான் விரும்புவதில்லை.

ஆனால், திராவிட இயக்கங்களின் சாதனைகளைக் கருதி என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப் பட்டிருக்கிறேன். ஆனாலும், திராவிடக் கொள்கைகளில் என்னை முழுதாக இணைத்துக் கொள்ள முடிவதில்லை. எந்த ஒரு தனிக் கொள்கையும், மனித குல மேம்பாட்டிற்கான முழுத் தீர்வாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. திராவிடம், தனி தேசியம் என்ற கொள்கைகளைத் தவிர்த்து, சுயமரியாதை, பகுத்தறிவு, வருணாசிரம எதிர்ப்பு, தாய்மொழியைப் பேணுதல், பெண்களுக்கு சம உரிமை போன்ற பெரியாரின் கொள்கைகளை எல்லா நேரங்களிலும் முடியாவிடிலும், முடிந்த அளவு கடைபிடிக்க முயற்சிக்கிறேன்.

பெரியாருக்குப் பிறகு, அதிகம் இந்தக் கொள்கைகள் பரவலாக்கப்பட்டு, திமுகவின் ஆரம்பக் கட்டத்தில் உச்சம் பெற்று, பிறகு படிப்படியாகக் குறைந்து, இன்று எதிர்த் திசையில் சென்று கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். திராவிட இயக்கத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் இடுவதைத் தடுக்க முடிந்ததை குறிப்பிடுகிறோம். ஆனால், இன்றைய நிலவரம் என்ன என்பதை கொஞ்சம் களத்தில் இறங்கிப் பார்த்தால் தெரியும். ஐந்தாவது படிக்கும் சிறுவர்களுக்கும் கூட தாங்கள் அச்சடிக்கும் ஜாதிப் பெயரிட்ட பனியனை அணிவித்து, வேறுபாட்டை வளர்க்கத் தொடங்கி விடுகிறார்கள். பின்னால் ஜாதிப் பெயரிட்டால் வரும் குற்ற உணர்ச்சியெல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இப்போது பெண்களும் இதை பெரிதும் விரும்புகிறார்கள் (பெரியார் விழைந்த சமஉரிமை). முன்பைவிட இப்பொழுது கவுரவக் கொலைகள் அதிகமாக நடக்கின்றன, ஜாதிச் சங்கங்கள் நினைத்தால் யாரையும் மிரட்டவோ அடிக்கவோ முடிகிறது. பிராமண ஆதிக்கம், மெல்ல மெல்ல இடைநிலைச் சாதிகளின் கையில் இறங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் திராவிடக் கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிப்பதைத் தவிர இதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை. ஒரு திராவிடக் கட்சி, ஒரு தேசியக் கட்சி என்று இருந்தபோது, மேடைகளில் எல்லாம் திராவிடக் கருத்துகள் முழங்கின. இன்று இரு திராவிடக் கட்சிகளுக்குள்ளேயே (அட்லீஸ்ட் பெயரளவில் திராவிடக் கட்சிகள்) போட்டி என்று ஆன பின்பு, ஒருவர் மாற்றி ஒருவர் வசை பாடவே நேரம் சரியாக இருக்கிறது.

ஒருவேளை இரண்டுக் கட்சிகளும், ஒரு தேசியக் கட்சியிடம் தோல்வியடைந்தால் மட்டுமே மீண்டும் திராவிடக் கொள்கைகள் மேடையேறும் என்று நினைக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக தேசியக் கட்சிகளுக்கு அந்த அளவு மூளை வேலை செய்வதில்லை. சரி,  கட்சிகள் முன்னெடுக்காமல் மீண்டும் இந்த திராவிடக் கருத்துகளை மக்கள் சிந்திக்கப் போவதில்லையா என்று கேட்டால், அதற்கான வாய்ப்புகள் அருகிக் கொண்டு வருவதாகத்தான் தோன்றுகிறது. இட ஒதுக்கீட்டையும், இந்தி எதிர்ப்பையும் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் இன்றைய இளைஞர்களிடம் தொடர்ந்து பரப்பப் பட்டு வருகின்றன. அதற்கு துணையாக, தலைவர்களின் குறைகளையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

உதாரணமாக, பகுத்தறிவுக் கொள்கைகளைப் பற்றி பேசிய ஒரு தலைவர், கடவுளை முற்றாக நிராகரித்த ஒரு தலைவர், சில நேரங்களில் கடவுள் வழிபாட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிப்பதை எடுத்துக் கொள்ளலாம். தலைவர்கள் மட்டுமல்ல, கடைசி மட்டத் தொண்டன் வரை, கடவுளை ஏற்ப்பதா நிராகரிப்பதா என்று தெரியாமல் குழம்பி, கடைசியில் குடும்பக் காரணங்களுக்காக ஏற்றுக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், நீ கடவுளை நிராகரி என்று ஒரு தலைவன் சொன்னால், உடனே ஒரு தொண்டனால் தூக்கிப் போட முடியாது. எப்போது ஒருவனால் அப்படிச் செய்ய முடியும்? கடவுளை நம்பாமல், தனது பிரச்சினைகளை தானே தீர்த்துக் கொள்ள முடிந்தால் கடவுள் நம்பிக்கையை ஒதுக்கலாம். அதற்கு அடிப்படை, கல்வியும் வாசிப்பும். நமது கல்வியின் லட்சணம் என்னவென்று தெரியுமென்பதால் அதை விட்டுவிடலாம். ஆனால் கல்வியறிவால், ஒரு சில மூடநம்பிக்கைகளைத் தவிர்க்கலாம். மூட நம்பிக்கைகளுக்காகத்தானே, கடவுளை நிராகரிக்கச் சொல்கிறார் பெரியவர்.

ஆனால், சில தலைவர்கள் கடவுளை நிராகரித்துவிட்டு, மூட நம்பிக்கைகளை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். திரு. கி.வீரமணி அவர்களுடைய ஒரு மூடநம்பிக்கையை ஒருவர் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொண்டால்தால், அவர் கடைபிடிக்கும் கொள்கைகளின்மேல் மக்களுக்கும் நம்பிக்கை வரும். தனது வாகனங்களுக்கு ஒரே பதிவு எண்ணை (அது ராசியா என்று தெரியவில்லை) விரும்பி வாங்குவது, எந்த வகையிலும் பகுத்தறிவில் சேராது. இதற்காக அவர் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். இதை, ஒவ்வொரு திராவிட இயக்கச் சிந்தனையாளரும், தன்மீது வைக்கைப்பட்ட ஒரு கேள்வியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட கொள்கை என்ன? அதன்படிதான் நடக்கிறோமா என்று ஆராய வேண்டும்.

இதை விட்டுவிட்டு, பார்ப்பனீய சக்திகள் திராவிடச்செடியை  துளிர்க்கவிடாமல் செய்கின்றன என்று காட்டுக் கூச்சல் போடுவதால் எந்தப் பலனும் இல்லை. குறைகளை சரி செய்துகொள்ளாத எந்த இயக்கமும் நீண்டகாலம் உயிர்ப்புடன் இருக்க முடியாது. கம்யூனிசம் ஒரு சிறந்த உதாரணம்.

தி.கவின் இன்னொரு மூட நம்பிக்கை, தாலியறுக்கும் போராட்டம், மன்னிக்கவும், தாலி அகற்றும் போராட்டம். இதற்கான காரணமாகச் சொல்லப்படுவது, தாலி தான் பெண்களை அடிமைப்படுத்துகிறது, தாலியை அகற்றுவதன் மூலம், பெண்களை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து சம உரிமையைப் பேணலாம். அட்லீஸ்ட், இது பெண்ணடிமைத்தனத்தைக் களைய முதல் படி என்று. வாலியின் கழுத்துச் சங்கிலி போல, தாலிக்கு இத்தனை சக்தியா என்று ஆச்சரியமாக இருக்கிறது. போகட்டும், விஷயத்துக்கு வருவோம். கடந்த நாற்பது ஆண்டுகளை ஒப்பிட்டால், பெண்கள் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார்கள், அடிமைத்தளை கொஞ்சம் இளகியிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? ஆம் என்றால், அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தாலியின் தடிமன் இந்தக் காலத்தில் குறைந்துவிட்டது என்பதா?

முன்பைவிட பெண்கள் அதிகமான அளவு, அடிப்படைக் கல்வி பெறுகிறார்கள், சுமாரான அளவு வேலைவாய்ப்பும் பெற்று, கொஞ்சம் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்திருக்கிறார்கள். இதுதானே காரணமாக இருக்க முடியும்? அப்படியெனில், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்து, அடிமைத்தனத்தை ஒழிக்கவேண்டுமென்றால் எங்கிருந்து தொடங்க வேண்டும்? கல்வியில் இருந்து தானே? கல்வியில் தொடங்கி பொருளாதாரச் சுந்திரம், அதிகாரம் என்று எல்லாவற்றிலும் சரிசமமாகும்போது, தாலி என்பது தானாகவே ஒரு திருமண அடையாச் சின்னம் மட்டும் என்றாகிவிடும் தானே? அதை விட்டுவிட்டு, பின்னால் இருந்து தொடங்குவதை எப்படி ஒரு தொடக்கம் என்று சொல்ல முடியும்?

பெண்கள் தான் படிக்கிறார்களே, ஆண்களை விட தேர்ச்சி விகிதத்தில் அதிகம் இருக்கிறார்கள், அதில் என்ன இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஐடி, போன்ற சில துறைகள் தவிர, பல பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் எல்லாம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றன, பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவதை ஊக்குவிக்கிறோம் வாருங்கள் என்று. அப்படியானால், பள்ளியில் அதிகம் தேர்ச்சி பெற்ற அந்தப் பெண்கள் எல்லாம் எங்கே போனார்கள்? பலர் கடமைக்காக ஒரு டிகிரி படிக்கவேண்டுமே என்று படிக்கிறார்கள், சிலர் கல்யாணம் வரை வேலைக்குப் போகிறார்கள், சிலர் குழந்தை பெறும்வரை. வெகுசிலர் தான், கடைசி வரை குடும்ப நெருக்கடிகளையும் சமாளித்து விருப்பத்துடன் வேலைக்குச் செல்கிறார்கள்.

சில காலமாக ஒரு விஷயம் கேள்விப்படுகிறேன், தன் பெண்ணை டாக்டராகவோ, எஞ்சினியராகவோ உருவாக்கினால், அதகேற்ற மாப்பிள்ளை தேட வேண்டும். அந்த மாப்பிள்ளைகள் எல்லாம் சீர்வரிசை அதிகம் கேட்பார்கள் என்பதால், தகுதி, திறமை இருந்தும் பல பெண்களை அவர்கள் பெற்றோர்கள் எதோ ஒரு டிகிரியுடன் நிறுத்துகிறார்கள். இப்படி பெண் கல்வி, இந்தச் சமுதாயத்தில் ஏதேதோ காரங்களால், சீரழிக்கப் பட்டுக்கொண்டிருக்கும்போது, உண்மையாக பெண்கள் விடுதலை என்பதை முதலில் கல்வியில் தானே தொடங்க வேண்டும்?

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள பெண் குழந்தைகளைச் சந்தித்து, அவர்களுக்கு கல்வியின் பயனை விளக்கி, சமுதாயத்தில் சமபங்காற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது, தனது பெரியார் மணியம்மை பல்கழைக் கழகத்தின் மூலம், பள்ளிகளில் நல்ல மதிப்பெண் எடுத்த ஏழை மாணவிகளை படிக்கவைத்து, வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது போன்ற புரட்சிகளை ஐயா கி.வீ நடத்தினால், கருப்புச்சட்டையுன் வரத் தயாராக இருக்கிறேன். மற்றபடி தாலி அகற்றுவதெல்லாம், அவர் தன்னை கோமாளி  என்பதை நிறுவுவதற்கு மட்டுமே உதவும்.

Wednesday, 25 March 2015

என்னிடம் உலகில் உனக்கைக் கவர்ந்த, மிகவும் சுவாரசியமான விஷயம் எதுவெனக் கேட்டால் "பெண்கள்" என்று தான் சொல்வேன். சலிப்பூட்டக் கூடிய எந்தப் பெண்ணையும் இதுவரை சந்தித்ததே இல்லை என்றுதான் சொல்வேன். பெண்களின் சில செயல்கள் சலிப்பூட்டச் செய்யும், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் சில செயல்கள் சலிப்பூடுகின்றன என்று சொல்வதற்கும் பெண்களே சலிப்பூட்டுகின்றனர் என்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது

ஒரு எளிமையான, சாதாரணமான ஆணுக்கு பெண்ணின் மேல் உள்ள எதிர்பார்ப்புகள் மிகவும் குறைவானவை. அவை பெரும்பாலும், அவன் வளர்ந்த சூழலில் பொதுவாக பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட கடமைகளின் நீட்சியாகவே இருக்கும். உதாரணத்திற்கு, நன்றாக சமைக்கத் தெரியவேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும் / கூடாது இப்படி சாதாரணமானவை தான். ஆனால், கொஞ்சம் வாசிப்பு, சிந்திக்கும் தளத்தினுள் காலடி எடுத்துவைக்கும்போது, தன்னுடைய துணையோ, தோழியோ அதே போல சிந்திக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனதில் முளைத்துவிடுகிறது.

நண்பன் ஒரு நாள் கவலையுடன் சொன்னான், " என் காதலி தீவிர விஜய் ரசிகை, எனக்கு இப்படி அமையும் என்று எதிர் பார்க்கவே இல்லை. நான் கிம்கிடுக் பற்றிப் பேசினால், ஆதி அளவுக்கு இருக்குமா? என்றாள்.. கடைசிவரை ஒத்துவருமா என்று தெரியல மச்சி". சிரித்துக்கொண்டே கேட்டேன், "எதற்காக அவளிடம் நீ கிம் கி டுக் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறாய்?" என்று. "அந்தப் படம் எனக்கு ஒரு பார்வை அனுபத்தைக் கொடுத்தது, அதை அவளிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ஒரு வாழ்க்கைத்துணையிடம் இதையெல்லாம் பகிர்ந்துகொண்டால் நல்லது தானே?" என்றான்.

"உனக்கு அவளிடம் க்ரே கார்டன் பற்றிப் பேச வேண்டும், இந்தியா ஏன் மிக் விமானங்களை வைத்துக் கொன்று மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும், தி.ஜாவின் கும்பகோணத்தை அவளுடன் காலரா நடந்து அனுபவிக்க வென்றும் இப்படியெல்லாம் எதிர்பார்ப்பிருக்கிறது. ஆனால் அவளுடைய எதிர்பார்ப்புகளை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா? ஃபைட் கிளப் பற்றி மூன்று மணி நேரம் பேசுவதை விட, உன்னுடன் பீச்சில் மிளகாய் பச்சி சாப்பிடுவது அவளுக்கு பிடித்ததாக இருக்கலாம்.

இதில் உயர்வு தாழ்வு என்றெல்லாம் ஒன்றும் இல்லை. உனக்கு உயர்வாகப் படுவது, அவளுக்கு தேவையில்லாததாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும், உன்னுடைய எதிர்பார்ப்புகள் காலத்துக்கும் மாறாதவை என்று சொல்ல முடியுமா? நேற்று பால குமாரனைப் போல் உலகில் யாரும் எழுத முடியாது என்று சொன்னாய். இன்று கரிச்சான் குஞ்சு என்கிறாய். உன் சிந்தனைத்தளம் நகரும்போதேல்லாம், அவளுடையதும் நகர வேண்டும் என்று எதிர்பார்ப்பாயா?

சரி இப்படி எடுத்துக்கொள், நீ பாலகுமாரன் பற்றி பேசும்போது, "ச்சீ கருமம்" என்று சொல்லி அவள் "மார்க்குவெஸ், யோசா ரேஞ்சில் இருக்கும் எனக்கு, இவன் ஒத்துவருவானா" என்று கேட்டால் எப்படி இருக்கும்? கலை, இலக்கியம், அரசியல், அறிவியல் இவற்றில் ஒருவரின் நிலைப்பாட்டை வைத்து அவரைக் காதலிக்கவோ, நண்பராக்கிக் கொள்ளவோ முடியாது. மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நீ எவ்வளவு வாசித்தாலும், சிந்தித்தாலும் பிரயோஜனமே இல்லை" என்றேன்.

இந்த உரையாடலை ஏனோ ஜெயமோகனுக்கு டெடிகேட் செய்யத் தோன்றியது. "நீங்கள் இலக்கியவாசகராகவும், யோசிப்பவராகவும் இருந்தால், வாழ்நாளில் சுவாரசியமான நான்கைந்து இந்தியப் பெண்களைக் கூட சந்திக்கப் போவதில்லை" என்கிறார். பாவமாக இருக்கிறது. அவரை நினைத்து அல்ல, அவரைச் சந்தித்த அந்தப் பெண்களை நினைத்து. ஒரு பெண்ணை சுவாரசியமாக பேசவைக்கக் கூடத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டு என்ன கஷ்டப்பட்டார்களோ, தெரியவில்லை.

Thursday, 19 February 2015

இந்தியாவில் எல்லோருக்கும் பொதுவான / சமமான ஒன்று என்று எந்த விஷயமும் இருந்ததில்லை. "அரசியலமைப்புச் சட்டம் எல்லோருக்கும் பொதுவாதனது, அதன் முன் இந்தியர்கள் அனைவரும் சமம்" என்று படித்ததை, சின்ன வயதில் விவரம் தெரியமால் நம்பிக் கொண்டிருந்தேன். நானும் சக மனிதனும் சமமல்ல என்று நிறுவ ஒவ்வொருவரின் மனதும் தங்களையறியாமல் முயன்று கொண்டே இருக்கிறது. சொல்லப்போனால், நான் சக மனிதனை விடக் கொஞ்சம் மேலே என்பதை ஒருவித பாதுகாப்புணர்வாக நினைக்கிறோம். நமக்குக் கீழே நாலு பேர் இருக்கிறார்கள் என்பதே நிறையே பேருக்கு ஒரு comfort கொடுக்கிறது.

துரதிருஷ்ட வசமாக சாதி, மத, இன அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளைப் பேசும் அளவுக்கு நாம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பேசுவதில்லை. முதலாளித்துவ அடிப்படையிலான தனியார் நிறுவனங்கள், சக மனிதர்களுக்கிடையே இப்படி ஏற்றத்தாழ்வுகளை விதைத்து காலங்காலமாக லாபம் ஈட்டிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஹமாம் சோப் வெளியிடும் அதே நிறுவனம் அதிக விலையில் டவ் சோப்பும் விற்பனை செய்யும். உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ப உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள, டூத் பேஸ்டில் இருந்து கார், விமானம் வரை எல்லாவற்றிலும் ஸ்பெஷல் வகையறாக்கள் இருக்கும்.

இதற்கு மேல் ஸ்பெஷல் வைக்க ஒன்றும் இல்லை என்ற நிலை வந்தால் கூட, அங்கும் ஒரு மெலிசான கோடாவது வைக்கத் தவறுவதில்லை. ஏனென்றால் அது தான் பணம் அதிகம் வைத்திருப்பவனைக் கொஞ்சமாவது திருப்திப் படுத்தும். நான் மற்றவர்களை விடக் கொஞ்சம் உயர்வாக இருக்கிறேன் என்ற நிம்மதியைத் (! தற்காலிகமாவது ) தரும். இதைப் பயன்படுத்திச் சம்பாதித்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு விமானப் பயணத்தை எடுத்துக் கொள்ளலாம். எல்லோருக்கும் ஒரே விமானம், ஒரே இருக்கை என்று இருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது. பணம் வைத்திருப்பவனுக்கும் ஒரு comfort கிடைக்காது. ஆனால் தனியாக இருக்கை தர முடியவில்லை, என்ன செய்யலாம் என யோசித்து, மூன்று இருக்கைகள் இருக்கும் வகுப்பில், நடுவில் ஒருவர் உட்கார மாட்டார். நீங்கள் சொகுசாகப் பயணம் செய்யலாம் என்று விளம்பரம் செய்து, இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். மக்களும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். வெறும் ஒன்றரை மணி நேர பயணத்திற்கே இப்படி என்றால், தினமும் பயன்படுத்தும் எத்தனை விஷயங்களில் இப்படிப் பணம் வைத்திருப்பவர்களைத் திருப்திப் படுத்த நிறுவனங்கள் முயற்சி செய்யும் என்று யோசிக்கவும்.

சரி எல்லா நாடுகளிலும் தானே இப்படி இருக்கிறது, இதில் இந்தியாவைக் குறை சொல்ல ஒன்றும் இல்லையே என்கிறீர்களா? கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், இப்படி தனியார் நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வுகளை விதைத்துப் பணம் சம்பாதிப்பதை, அரசு எந்த ஒரு துறையிலும் தடுத்ததே இல்லை. சொல்லப் போனால், மறைமுகமாக ஊக்குவிக்கவே செய்கிறது. இன்னும் சொல்லப் போனால், அரசும் இதையே செய்கிறது. ஒரு உதாரணம், நகரத்தில் இயக்கப்படும் சொகுசுப் பேருந்துகள். தொலை தூரப் பயணங்களுக்குச் சொகுசுப் பேருந்துகளை அதிகமான கட்டணத்தில் இயக்கினால் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாலு கிலோமீட்டருக்கு சொகுசுப் பேருந்து என்ற ஒன்றை அறிமுகப் படுத்தி, இரண்டரை மடங்கு கொள்ளையடிக்கும் அரசு, எப்படித் தனியார் நிறுவனங்களைத் தடுக்கும் என்று எதிர் பார்க்க முடியும்?

சரி விஷயத்திற்கு வருகிறேன். பொதுமக்களை நேரடியான வாடிக்கையாளராகக் கொண்ட எந்தத் துறையையும் முழுமையாக அரசு மட்டுமே ஏற்று நடத்துவதில்லை. நமது அரசும்,  சாதாரண மக்களால் நடத்தப் படுவதில்லை. குறைந்த பட்ச சொத்து மதிப்பு இருப்பவர்கள் தான் ஒவ்வொரு அரசிலும் இடம் பெறுகிறார்கள். எல்லாவற்றையும் அரசு ஏற்று நடத்தினால், சக மக்களுடன் இவர்களும் ஒன்றாகி விடுவார்கள். அதை அவர்கள் விரும்புவதில்லை. முக்கியமாக அரசியல்வாதிகளுக்குப் படியளக்கும் தொழிலதிபர்கள் விரும்புவதில்லை.

ஒரு சமூகத்தின் ஆணி வேறான கல்வியை மட்டுமாவது அரசு முழுமையாக ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்தியச் சூலில், முக்கியமாக இப்போதிருக்கும் அரசியல் சூழலில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று கருதுகிறேன்.
இந்தக் கோரிக்கையை வைப்பவர்கள் சொல்லும் ஒரு உதாரணம்,
டாஸ்மாக் கடைகளை அரசே ஏற்று நடத்துவதைப் போலக் கல்வி கூடங்களையும் நடத்த வேண்டும் என்பதே. இந்தக் கோரிக்கை வைப்பர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் புரிய வைக்க வேண்டும் .
1. அரசு அடிப்படைக் கல்விக்கூடங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறது, நாம் தான் அதில் படிக்க விரும்புவதில்லை
2. தனியார் ஒயின் ஷாப்புகளைத் தான் அரசு ஏற்று நடத்துகிறதே தவிர, ஹோட்டல் பார்களை அல்ல

இரண்டாவது விஷயத்தைக் கொஞ்சம் கவனித்தால், அரசு 100 % மதுக்கடைகளை நடத்துவதில்லை. சாதாரண மக்கள் குடிப்பதற்கான கடைகளை மட்டும் தான் அரசு நடத்துகிறது. இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் பார்த்தல், எல்லா ஹோட்டல்களில் உள்ள பார்களையும் மூடிவிட்டு, டாஸ்மாக்கை மட்டுமே அரசு நடத்த வேண்டும். இது சாத்தியமா? அரசால் செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். செய்ய முடியும், ஆனால் செய்ய விட மாட்டார்கள். ஒரு தொலதிபரும், சினிமா நடிகரும், அமைச்சரும் உங்களுடன், ஒரு புகை சூழ்ந்த டாஸ்மாக்கில் அமர்ந்து குடிப்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? உங்களாலேயே இதை ஏற்றுக் கொள்ள முடியாத போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் இதை நடைமுறை படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களா?

அதிகாரத்தில் இருப்பவர்களை விடுங்கள், ஒரு சாதாரண நடுத்தர வர்கத்தின் மனநிலை என்ன? தன்னுடைய நிலையில் இருப்பவர்களை விடத் தன் குழந்தைகள் வசதியான கல்விக் கூடங்களில் படிக்க வேண்டும் என்பதைத்தானே விரும்புகிறார்கள்? "அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்பதைப் பெரும்பாலான பெற்றோர்கள் "அவையத்து வசதியாக இருப்பச் செயல்" என்று புரிந்து கொண்டு, அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் தான் உயர் தரமானவை என்று நம்புகிறார்கள். சமூகத்தின் கடைசி மட்டம் வரை இது தான். இப்படி ஒரு சமூகச் சூழலில், எல்லோருடைய குழந்தைகளும் ஒரே வகுப்பறையில் அமர்வதை எத்தனை பேர் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறீர்கள்?

சரி எதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து, அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கி, முழுக்க அரசே நடத்துவதாக எடுத்துக் கொள்வோம். அப்போது, எல்லாப் பள்ளிகளிலும் கல்வித்தரம் ஒரே மாதிரி இருக்குமா? குறைந்த பட்சம், எல்லாப் பள்ளிகளிலும் சமமான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா? தகுதியான ஆசிரியர்கள் சரியான விகிதத்தில் நியமிக்கப் படுவார்களா? உதாரணமாக அரசு நடத்தும் பொறியியல் கல்லூரிகளை எடுத்துக்கொள்வோம். எல்லாக் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்களும் இருக்கிறார்களா? இருக்கும் பத்து இருபது கல்லூரிகளுக்கே அரசால் இதை எல்லாம் சரி சமமாகச் செய்து, உறுதிப் படுத்த முடியாத போது, மொத்தப் பள்ளிகளுக்கும், இதைச் சரியாக நடைமுறைப்படுத்த எவ்வளவு காலம் ஆகும்? அதற்கான ஊழியர்கள், செலவுகள் இவற்றை எப்படிச் சமாளிப்பது? தொழிலதிபர்கள் நடத்தும் பள்ளிக் கல்லூரிகளில் இருந்து அரசியல்வாதிகளுக்கு வரும் வருமானம் தடைபடுமே, அதை எப்படிச் சரி கட்டுவது?

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்து விட்டு, தங்கள் கட்சி ஆட்களுக்கு உள் குத்தகைக்கு விட்டதைப் போல, இதிலும் நடந்தால், நிலைமை இன்னும் மோசமாக அல்லவா ஆகிவிடும்? இவ்வளவு தலைவலிகள் உள்ள ஒரு விஷயத்தில் ஒரே ஒரு தீர்வு என்பது இருக்காது, ஆனால் எனக்குத் தெரிந்த ஒரே தீர்வு, ஒரு தன்னிச்சையான, சர்வாதிகாரி முதல்வர், அதே நேரம் இதன் மகத்துவத்தையும், தொலைநோக்குப் பலனையும் உணர்ந்த முதல்வர், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் துணித்து இதைச் செயல் படுத்தினால் தான் உண்டு. எனக்குத் தெரிந்து தமிழக அரசியல் களத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படி யாரும் இல்லை. என் மகனும், தன் குழந்தைக்கு எல்.கே.ஜி அப்ளிகேஷன் வாங்க இரண்டு நாட்கள் வரிசையில் நிற்க வேண்டியது தான் போல.

Tuesday, 10 February 2015

"ஒரு நல்ல வாசகன் எப்போதும் எழுத்தாளனுக்கு கடிதம் எழுத மாட்டான்" என்று சுஜாதா அடிக்கடி குறிப்பிடுவார். உண்மையில், ஒரு எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் எழுத்து மட்டுமே தொர்புச் சாதனமாக இருக்க வேண்டும். வாசகன் தான் எழுதுவதில்லையே என்கிறீர்களா? வாசகனுக்காகவும் சேர்த்து எழுதுபவனே எழுத்தாளன்.  நூலை அறிமுகப்படுத்த ஒரு விழா, விமர்சிக்க ஒரு இலக்கிய நிகழ்வு, வெளியே எங்காவது பார்த்தால் ஒரு நலம் விசாரிப்பு இத்துடன் நிறுத்திக்கொள்வது இருவருக்குமே நல்லது.

இதைத்தாண்டி, ஒரு எழுத்தாளனுடன் உரையாடத் தொடங்கும்போதோ, சேர்ந்து ஒரு கோப்பை தேநீரோ, சிகரெட்டோ, ஒயினோ பருகும்போதோ, ஒரு வாசகன் என்ற நிலையைத்தாண்டி, நண்பன் என்கிற வட்டத்துக்குள் நாமாகவே நுழைந்துவிடுகிறோம். வெகு சிலரால் மட்டுமே நண்பன், வாசகன் என்ற இரண்டையம் சமநிலைப்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், அந்த பக்குவம் இருப்பவர்கள், எந்த எழுத்தாளனையும் நெருங்குவதில்லை.

நம்முடைய நண்பனாக இருந்த ஒருவர் எழுத்தாளர் ஆகும்போது ஏற்ப்படும் உறவுக்கும், ஒரு எழுத்தாளனை வாசகனாக அணுகி, அதன் பிறகு நண்பனாவதற்கும் உள்ள உறவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரண்டாவதில், வாசிப்பின் மூலம் நமது மனதில் கட்டமைந்த எழுத்தாளனின் நட்சத்திர பிம்பத்தை, எவ்வளவு நெருங்கிய நண்பனானாலும் கடந்து செல்ல முடியாது. எழுத்தாளன் ஏதோ ஒரு இடத்தில் நமது பெயரை உச்சரித்தாலே, புளகாங்கிதம் அடைந்து முடியெல்லாம் நட்டுக்கொள்ளும். இந்த நட்சத்திர பிம்பத்தின் செல்வாக்கானது, நண்பன் என்கிற நிலையத்தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக ரசிகன், குரு, தந்தை, அண்ணன் என்றெல்லாம் சென்று விடும். இப்படி செல்வதால் இரண்டு பாதிப்புகள், முதலில் நம்மால் ஒரு கறாரான வாசகனாக இருக்க முடியாது. இரண்டாவது விஷயம் அந்த எழுத்தாளனின் கறாரான வாசகர்கள் சொல்லும் குறைகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதாவது, நாம் எப்படி அவரை ஒரு குருவாகவோ, ஆதர்ச நட்சத்திரமாகவோ, தந்தையாகவோ பாவிக்கிறோமோ, அப்படியே மற்றவர்களும் செய்ய வேண்டும், என்ற ஆசை வந்துவிடும்.

இதை விட முக்கியம், அந்த எழுத்தாளனை நம்மால் கடந்து போகவே முடியாது. தொடர்ந்து அந்த எழுத்தாளனின் influence நம்முடைய சிந்திக்கும் ஆற்றலை சிதைத்துக் கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு, தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஜெயமோகன் புத்தகங்களையும், அவருடைய கட்டுரைகளையும் படித்துக்கொண்டே இருந்தால் அவர் சொல்வது எல்லாமே ஏற்றுக்கொள்ளும்படியாகத் தோன்றும். எதிர்வினை ஆற்றினாலும், அதற்கேற்றார்போல பதில் சொல்லி உங்களை அவர் பக்கம் கொண்டு வந்து விடுவார். அவருடிய influence பவர் அப்படி. அப்படி ஏதேனும் தோன்றினால், உடனே ஒரு ஆறு மாதம் அந்தப்பக்கமே போகாமல் இருந்துவிட வேண்டும். அது தான் நம்முடைய சிந்திக்கும் ஆற்றலைக் காப்பாற்றும். ஒரு வாசகனாக மட்டும் இருக்கும்போது இப்படி தப்பிப்பது நிச்சயம் சாத்தியம், ஆனால் ஒரு ரசிகன், சீடன், மகன் என்ற நிலைமைக்கு போன பிறகு நிச்சயம் இதற்கு வாய்ப்பே இல்லை.

எப்பொழுது உங்களின் சுயசிந்தனைத்திறன் பாதிக்கப் படுகிறதோ, அதற்கு மேல் நீங்கள் என்ன வாசித்தும் எந்தப் பயனும் இல்லை. இலக்கிய சவமாகிவிடுகிறீர்கள்.

Tuesday, 20 January 2015

தேர்க்கால் சிறுகதையில் தேருக்கு சன்னக் கட்டை போடுவதைப் பற்றி ராஜன்  எழுதியதைப் படித்தபோது, ஒரு நிமிடம் மனது கதையை விட்டுவிட்டு தேர்களின் நினைவில் சுழல ஆரம்பித்துவிட்டது. பல ஊர்களில் இந்த சன்னக் கட்டை போடுவது குறிப்பிட்ட சில சாதிகளின் அல்லது குடும்பங்களின் உரிமையாக இருக்கும். அப்படி இருந்தாலும் கொஞ்சம் வலுவான ஆண்களே சன்னக் கட்டை போட முன்வருவார்கள். கனமான மரக்கட்டையை தூக்கிக் கொண்டு தேருக்கு முன்னால் ஓடுவதற்கு அசாத்திய உடல் வலு வேண்டும்.

சில நேரங்களில் சன்னக் கட்டைகளை உடைத்துக் கொண்டு தேர்கள் உருண்டோடும்...அதற்கும் தயாராக இருக்க வேண்டும். அந்த மாதிரி நேரங்களில் சிலருக்கு கால் கூட போனதாக கேள்விப்பட்டிருக்கிறேன் . பல்லக்கில் சாமி தூக்கி வரும்போது பல்லக்கை மரக் கால்களில் இறக்கி வைப்பார்கள். அதை "ஆயக்கால்" என்பார்கள். இது பெரும்பாலும் எடை குறைவாக இருப்பதால், சின்ன பசங்களை தூக்கி வர வைத்துவிடுவார்கள்.  சன்னக்கட்டை போடும்போது, தேரை நிறுத்துவதற்கு சக்கரத்தின் எதிரே அந்த சாய்வான கட்டையை  வைப்பதைப் போல, சில நேரங்களில் மக்கள் உணர்ச்சிப் பெருக்கில் வேகமாக இழுக்கும்போது வேகமாக ஓடும் தேரின் வேகத்தை மட்டுப்படுத்த கட்டையை பக்கவாட்டில் வைத்து வைத்து எடுப்பார்கள். தேர் அதன் மேல் ஏறி குலுங்கி இறங்கி ஓடுவதையும், தேர்போல அசைந்து வரும் அழகே என்று நம் ஆட்கள் வர்ணிப்பதையும் ஒப்பிட்டுக்கொள்க.

எப்போதோ நியாபகத்தில் பதிந்த நிகழ்வையோ, வார்த்தையோ இலக்கியத்தின் மூலம் மீட்டுருவாக்கம் செய்யும் சுகம் அலாதியானது.       கடந்த வார விகடனில் வந்த எஸ்.செந்தில்குமாரின் வெண்டி மாப்பிள்ளை சிறுகதையில் "தவிதாயப்பட்டார்" என்ற வார்த்தைப் பிரயோகம் வருகிறது. தன் மகளை கல்யாணம் செய்துகொள்ளப் போகும் மாப்பிள்ளை விஷம் குடித்து விட்டான் என்ற செய்து கேட்டு அது உண்மையா என விசாரிக்க அலையும் போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். எங்கள் ஊர்ப்பக்கம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இது. இதற்கு அர்த்தம் தவிப்பது மட்டுமல்ல,.ஒன்றும் செய்ய முடியாமல் ஒரு வகையாகக் குழம்பிப் போன நிலையைக் குறிப்பது.                                                                                                                                           என்னாலும் சரியாக வரையறுக்க முடியவில்லை. இந்த வார்த்தைப் பிரயோகத்தை நேரடியாகக் கேட்கும்போது தான் அந்த உணர்வு புரியும்.                           அந்த கதை முழுவதுமே மாமனார் தவிதாயப் படுவது  தான். அதில் அழகு என்னவென்றால், இந்த வார்த்தையை கதாபாத்திரங்கள் பேசும் வழக்கு மொழியோடு உபயோகிக்காமல், ஒரு ஆசிரியர் கதை சொல்லும் நடையிலேயே பயன்படுத்திருக்கிறார்
காதுகள்

இன்னமும் குழந்தை பிறந்தால் பின்னாளில் என்ன கலரில் இருப்பான் என்று தெரிந்துகொள்ள காதுகளையே பார்க்கின்றனர். சில சமூகங்களில் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே காது குத்தி விடுகிறார்கள். காது குத்து என்பது, ஒரு கல்யாணத்தை விட கோலாகலமான நிகழ்ச்சி. கல்யாணத்தைப் போல, தெரியாத இரண்டு குடும்ப சொந்தங்கள் எதிரெதிர் திசையில் நிற்காமல், எல்லாம் தெரிந்தவர்களாகவே சூழ்ந்திருக்கும் விழா. சொல்லப்போனால் நம் சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே விழாவும் கூட.

ஆண்குழந்தைக்கு காது குத்தினாலும் மூன்று நாளைக்கு கழட்டக் கூடாது என்று விதிமுறைகள் வகுத்திருப்பதால், நானெல்லாம் கம்மலுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறேன். காது குத்தாமல் ஆண்பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யக்கூடாது என்று வழக்கமும் இருப்பதால், திருமண மேடையிலேயே சாஸ்திரத்துக்காக காதுகுத்திக் கொண்டு தாலி கட்டியவர்களைப் பார்த்திருக்குறேன். மொட்டைக் காதோடு பெண் பிள்ளைகள் இருந்தால், தூர்ந்து விடுமென்று, குச்சி குத்தி விடுவார்கள். எந்தக் குழந்தையும் அப்படி அலைய விரும்புவதுமில்லை. காதுகுத்தும் முன்பே, பட்டன் தோடுகள் போட்டு பெரியவர்களாகிவிட்டதாக உணர்வார்கள். சிலருக்கு சரியான தோடு அமையாமல்,  காதுகள் சீழ் பிடித்தும்விடும். உள்ளதிலேயே கொடூரமான மணங்களில் காது சீழும் ஒன்று.

டைட்டானிக் மாட்டல்கள் பரவலாக இருந்த காலத்தில், அந்த மாட்டல்கள் பிரதிபலிக்கும் வண்ணங்களில் மின்னும் காதுகள் இன்னனும் அழகானவையாக உணரப்பட்டிருக்கின்றன. ஊக்கு, ஹேர்பின், பாய்க்குச்சி, பென்சில் என்று எது கிடைத்தாலும் காதுகுடையும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் கோழி இறகால் காது குடைவது தனி சுகம் தான். அதற்காக இறகைத் தேடி எடுத்து, நுனியை மட்டும் விட்டுவிட்டு மீதி இறகைக் கழித்துக் கொடுக்க அத்தைகளோ, சித்திகளோ வீட்டில் இருக்க வேண்டும். ஷீரடியில் அரை அடி நீள கம்பியைக் கையில் வைத்துக் கொண்டு காதில் இருந்து ஈ எடுக்கிறேன் என்று ஒருவர் கேட்டபோது, சிலிர்த்துக் கொள்ள காது மயிர்கள் தான் இல்லை எனக்கு.

அப்பாவுக்கும் எனக்கும் கணக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியருக்கு காதுக்கு வெளியே மயிர்கள் நீட்டியிருக்கும். ஜன்னல் வெளிச்சத்தில் அந்த மயிர்கள் மின்னுவதை பல நாட்கள் கவனித்துக் கொண்டே இருந்திருக்கிறேன். மனிதர்களை வரையும் போது காதுகள் தான் வரைவதற்கு எளிதானவை. எளிதாக ஒரு கேள்விக்குறியைப் போல முடித்துவிடலாம். விலங்குகளின் காதுகள் தான் கொஞ்சம் ஆச்சர்யமானவை. இவ்வளவு பெரிய யானையின் காதுக்குள் எறும்பு புகுந்தால் இறந்து விடும் என்று ரொம்ப நாட்கள் நம்பியிருக்கிறேன். யானையின் காதுகள் மாதிரி ஒரு extended surface இருந்தால் வெப்பக்கடத்தலை அதிகரிக்கலாம். அதை அறிவியலில் Fins  என்பார்கள். ஆமாம் மீன்களில் செவுல்கள்  மாதிரி தான். உண்மையில் மீன்களின் செவுல்கள் தான் அவற்றின் காதுகளோ என்று கூட யோசித்திருக்கிறேன் சின்ன வயதில். இன்னும் கூட பாம்புக்கு காது இல்லை என்பதை பலரால் நம்ப முடிவதில்லை.

நாயின் காதுகளை வைத்து, அவை என்ன மூடில் இருக்கின்ற என்று அறியலாம். மனிதனைப் போல காதைத் தடவிக் கொடுத்தால் நாய்களும் சுகமாக காட்டிக் கொண்டிருக்கும். ஆடுகளின் காதுக்குள் சேர்ந்திருக்கும் அழுக்கை துடைக்கும் போது வரும் வாடை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாத்துகளை கழுத்தைப் பிடித்து தூக்கச் சொன்னால் ஒரு பயம் வருவதைப் போலத்தான், முயல்களை காதைப் பிடித்து தூக்கச் சொன்னாலும் எனக்கு பயம் வரும். வலிக்குமே என்று. எத்தனை ஆசிரியர்கள் நம் காதைத் திருகியிருக்கிறார்கள்

பறவைகளுக்கு காது இருப்பதே தெரியாமல் இறகுகள் மூடியிருக்கும். கோழி பிடிக்கும்போது கையைக் கொண்டு தேவையே காதைக் கண்டுபிடிப்பது ஜாலியாக இருக்கும். பறவைகளில் வௌவாளுக்கும், விலங்குகளில் தேவாங்குக்கும் அழகான காதுகள் என்பது என்னுடைய கருத்து.

சுவற்றுக்கும் கூட காது உண்டு என்பார்கள். சில நேரம் காது குளிர கேட்க வேண்டும் என்றும் சொல்வார்கள். உண்மையில் காது தான் குளிரைத் தாங்க முடியாத உறுப்பு. நேரடியாக உடலுக்குள் குளிரைக் கடத்திவிடுகிறது. காதின் பின்னால் மூக்கையும், நுனி நாக்கையும் வைத்தால் உணர்ச்சி பொங்கும் என்பது தான் கலவியைப் பற்றி சீனியர்கள் சொல்லிக் கொடுத்த முதல் உருப்படியான விஷயம். வான்கோவின் காது என்ற சிறுகதையை உள்ளடக்கிய அதே பெயரிலான மொழி பெயர்ப்புப் புத்தகம் தமிழின் முக்கியான முயற்சி. மறுவாசிப்புக்காக தேடிக்கொண்டிருக்கிறேன். சாய்ந்து கொள்ள ஒரு மடி வேண்டும் என்று நண்பர் சொன்னதற்கு இன்னொரு நண்பர், "எனக்கு இரண்டு காதுகள் மட்டும் போதும்" என்றார். ஆம், காதுகள் தான் நம்மை பைத்தியமாகிவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன

Monday, 19 January 2015

ஒரு கோடை நாளின்
உயிர் துளைக்கும் மாலை மழைக் காற்றில்
எனை மட்டும் நனைக்கும்
தூறல் வேண்டி விழி மூடிய நேரத்தில்
இமையில் விழுந்து முதல்துளியை
முழுதாய் உணர்ந்து முடிப்பதற்குள்
அடைமழையைப் பெய்து போனாய்

வெயில் உலர்த்திக்கொண்டிருக்கும் மழையின் சுவட்டில்
உயிரும் உலரும் என்றஞ்சி இறைஞ்சுகிறேன்
வேகமாய் சுழைவாய் புவியே
அடைமழைக் காதலோன் வேண்டும்...

கவிதை பழகும் காதலி

Thursday, 8 January 2015

கல்லூரி ப்ராஜெக்டுக்காக ஐ.சி.எஃப் இல் இருந்த போது, SSE எனும் சீனியர் செக்ஷன் எஞ்சினியர் ஒரு நாள் எங்களைக் கூப்பிட்டு "அங்க கூட்டுறதுக்கு வந்திருக்காளே ஒரு பொம்பளை, அவளை இந்த 20 நாள்ல என்னிக்காச்சும் பார்த்திருக்கீங்களா?" என்று கேட்டார். நாங்கள் பார்த்ததில்லை. "இருபது நாள் கழிச்சு இப்போ தான் வரா, ஏன்னு என்னால கேட்க முடியாது. கேட்டால், நான் பக்கத்து ஷாப்புக்கு போறதுக்குள்ளே என்னை ஆள் வச்சு வெட்டிடுவா" என்றார்.

இந்தியாவில் இரண்டுவிதமான வேலைவாய்ப்பு நிறுவனங்கள்  மட்டுமே இருக்கின்றன. ஒன்று நீங்கள் என்ன செய்தாலும், உங்களை வேலையை விட்டு தூக்க முடியாத நிறுவனம், இரண்டாவது அவர்கள் எப்போது நினைத்தாலும் உங்களை வேலையிலிருந்து தூக்கலாம் என்ற நிறுவனம். வெகு சில நிறுவனங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. முதல் வகையில் பெரும்பாலான, அரசு நிறுவனங்களும், ஒரு சில பழைய தனியார் நிறுவனங்களும், வெகு சில நியாயஸ்தர்கள் நடத்தும் நிறுவங்களும் அடங்கும். உட்கார்ந்து குண்டி தேய்க்கும் வேலை என்று ஒரு காலத்தில் இதைச் சொல்வார்கள். பொண்ணு கொடுக்கும்போது மாமனாரின் முதல் சாய்ஸ் இந்த வேலையில் இருக்கும் மாப்பிள்ளைக்குத் தான்.

தனியார் நிறுவனங்களில் சம்பளம் கொஞ்சம் அதிகம் கிடைக்கத் தொடங்கியபோது, ஸ்திரத் தன்மை என்பதை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு நிறைய பேர் இந்தப் பக்கம் வரத் தொடங்கினார்கள். அரசு வேலை கிடைப்பதில் இருக்கும் ஒளிவு மறைவு சமாச்சாரங்களும் இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.  எவ்வளவு முயற்சி செய்தாலும் இன்டர்வியுவ் என்ற பெயரில் பணம் கறக்கிறார்கள், அதற்கு இதுவே பரவாயில்லை என்ற மனநிலையில் கொஞ்சம் பயமிருந்தாலும் தனியார் வேலையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

நண்பனுடைய அப்பா ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்தார். அவனிடம் சொல்லிக்கொண்டே இருப்பார், "எப்போ வேணும்னாலும் என்னை வேலையை விட்டு தூக்குவாங்க, நீ உன்னோட வாழக்கையை பாத்துக்க ஒழுங்கா படி" என்று. அவனும் ஒரு தனியார் நிறுவனத்தில் தான் வேலைக்கு சேர்ந்தான். ஆனால் நிச்சயம் அவன் அப்பா அளவுக்கு அவனுக்கு பயமில்லை. ஏனென்றால் பழகிவிட்டது. அரசு வேலைகள் எல்லாம் இப்பொழுது கொஞ்சம் வெளிப்படையாக நிரப்பப் பட்டாலும், மொத்த பட்டதாரிகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, அரசு வேலைக்கு தேர்வு செய்யப் படுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். வேலை வேண்டும் என்றால், தனியார் தான் ஒரே வழி. வருடக் கணக்கில், பயிற்சி மையங்களுக்கு சென்று, அரசுத் தேர்வுக்குத் தயாராகும் கொடுப்பினை நிறைய பேருக்கு வாய்ப்பதும் இல்லை.

உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயம் இருந்தாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கச் செய்வது தனியார் நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளம் தான். அதிலும், எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை. நம் ஊரில் குறைந்த பட்ச ஊதியமென்ற கணக்கெல்லாம் இல்லை. அந்த நிறுவனத்தில் அவ்வளவு தருகிறார்களே என்றெல்லாம் கேட்க முடியாது. கேட்டால், அங்கேயே போய்க்கோ என்று பதில் வரும். கொஞ்சம் அதிகமாக சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கும் தனியார் துறைகளில் ஐடி தான் அதிகம் கவனிக்கப் படுகிறது. அதிக சம்பளம் என்பதால் மட்டுமல்ல, வேலைவாப்பு எண்ணிக்கையும் ஐடியில் அதிகம் என்பதால்தான் கவனம் பெறுகிறது.

உதாரணத்துக்கு பவர் செக்டாரை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் எப்படி கணக்கிட்டாலும் இதில் இருக்கும் பொறியாளர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டாது. ஐடி துறையில் ஒரு நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையே லட்சங்களில் இருக்கும். ஆட்குறைப்பு என்பது எல்லா தனியார் நிறுவனங்களிலும், எல்லா துறைகளிலும் எப்பொழுதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட, அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று நாம் நம்பும் ஒரு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் இப்படி ஆட்குறைப்பில் ஈடுபடும்போது எல்லோரும் அதிர்ச்சியாகிரார்கள்.

ஐடி ஊழியர்களால் தான் நாடே சீரழிகின்றது என்று சொல்லிக் கொண்டிருந்த இதே சமுதாயம் தான், இன்று இவர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது. உண்மையில் அக்கறையில் தான் கவலைப்படுகிறார்களா அல்லது நடிக்கிறார்களா என்றே
புரியவில்லை. சரி எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்த அக்கறையால் பொறியாளர்கள் மாதிரியான உயர் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் (வார்த்தை உபயம் - ஜெமோ), தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. யார் இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள் என்று பார்த்தால், பெரும்பாலும் இந்த துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தான். உள்ளே இருப்பவர்கள் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிற்சங்கம் அமைந்தால் எல்லாரும் சேருவார்கள் என்றும் சொல்ல முடியாது. ஒற்றுமை நிச்சயம் இருக்காது. ஐடியில் மட்டுமல்ல, பொதுவாகவே பொறியாளர்களிடம் ஒற்றுமை இருக்காது. சக professional களான, மருத்துவர்களிடமும், வக்கீல்களிடமும் இருக்கும் ஒற்றுமையில் ஒரு பத்து சதவீதம் கூட பொறியாளர்களிடம் கிடையாது.  இதற்கு முதல் காரணமாக இருப்பது எண்ணிக்கை. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவருக்கு மதுரையில் பத்து மருத்துவர்களைத் தெரியுமா என்று கேட்டால், தெரியும். ஆனால் என்னுடைய அலுவலகத்தில் 2 வது தளத்தில் இருக்கும் எனக்கு, இந்தத் தளத்திலேயே முக்கால்வாசி பேரைத் தெரியாது. இப்படி ஒருங்கிணைக்கவே முடியாத ஒரு பெருங்கூட்டம் இருப்பது, முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமான ஒன்று. சரி, எப்படி இதை ஒருங்கிணைக்கவே முடியாத கூட்டம் என்கிறேன் என்று கேட்கிறீர்களா? தனியார் நிறுவனங்களிலும், கார்பரேட்டுகளிலும், சக ஊழியர்களுடன் போட்டி போடுவதை ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக்கிவிட்டார்கள். வெகு சில நிறுவனங்கள் மட்டும்தான் இதற்கு விதி விலக்கு.

அரசு வேலைகளில் இருப்பது போல, இத்தனை வருட அனுபவத்துக்கு இவ்வளவு சம்பளம் என்ற பேச்சே கிடையாது. ஒவ்வொரு வருடமும் அப்ரைசல் நடக்கும். (அல்லது நடந்து போல காண்பிக்கப்படும்). அதில் ஒருவருக்கு அதிக ஊதிய உயர்வும், இன்னொருவருக்கு குறைவாகவும், ஒரு சிலருக்கு கிடைக்காமலே கூட போகும். இதை யார் முடிவு செய்வார்கள் என்றால், ஒருவருடைய immediate boss /மேனேஜர் அல்லது டீம் லீடர். அதிலும் பார்த்தால், ஒரு மேனேஜர் இரக்க குணம் படைத்தவராக இருக்கும்பட்சத்தில் கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்க வழி உண்டு. அல்லது உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால் அதன் மூலம் பலன்பெறவும் முடியும். அவருக்கு உங்களைப் பிடிக்காவிட்டால் மொத்தமும் காலி. காராறன ஆட்கள் சில பேர் தான் இருப்பார்கள். நானும் தான் அந்த அளவு கம்பெனிக்காக உழைத்தேன் என்று நீங்கள் சண்டையும் போட முடியாது. ஊதிய உயர்வுக் கடிதம் என்பதே confidential சமாச்சாரம் என்று முத்திரை குத்தப்பட்டு தான் வரும்.

உடன் இருக்கும் ஊழியர்களிடமே இப்படி ஒரு போட்டியை உருவாக்கி விட்டிருக்கும்போது, அலுவலகத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமலும் நிற்கும் போது, தொழிற்சங்கம் என்ற ஒன்றை உருவாக்கினால், எத்தனை பேர் அதில் சேருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? பெரும்பாலும் தொழிற்சங்கங்கள் எல்லாம் இப்படி நிரந்தரமான பணிச் சூழல் இருக்கும் அரசு நிறுவனங்களில் அல்லது மிகவும் பழைய தனியார் நிறுவனங்களிலும் தான் செயல்படமுடியும். கார்பரேட்டுகளில் வேலைக்கு சேரும்போதே, "எங்களுக்கு தேவைப்படும் வரை மட்டுமே நீங்கள் இங்கே பணியில் இருக்க முடியும்" என்று கையெழுத்து வாங்கிக் கொண்டு தான் சேர்ப்பார்கள். அதுவுமில்லாமல், வேலை நிறுத்தம் என்ற ஒன்றை எல்லாம் அலுவலகங்களில் நடத்த முடியாது. அது மாதிரியான சமாச்சாரங்கள் எல்லாம், ஒரு தொழிற்சாலை, அதனுள் சில இயந்திரங்கள் இருக்கும் அமைப்புக்குத்தான் ஒத்து வரும். அலுவலகத்தில் தொழிற்சங்கங்கள் கதவை மூடி போராட்டம் நடத்த முடியாது. கதவை மூடினால், வீட்டில் இருந்து கூட வேலை நடக்கும். நீங்கள் இல்லையென்றால், அந்த வேலையை கொத்திக்கொண்டு போக ஆயிரம் பேர் இருக்கும் சூழலில் உங்கள் மேனேஜர் வேலையை முடி என்றால் முடித்து தான் ஆக வேண்டும்.

வேலையை விட்டு தூக்காமல் சம்பளத்தைக்  குறைப்பது, வசதிகளைக் குறைப்பது, மூன்று மாதத்துக்கு ஒரு முறை சம்பளம் தருவது இப்படி எல்லாம் கூட மறைமுகமாக நிறுவனங்களால் கொள்ளையடிக்க முடியும். எவ்வளவு தொழிற் சங்கங்கள் வைத்தாலும் சட்ட ரீதியாக ஒன்னும் கிழிக்க முடியாது. ஏன் புகார் கூட தெரிவிக்க முடியாது. என்னுடைய பழைய இரண்டு நிறுவனங்களில் இருந்தே எனக்கு இப்படி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வர வேண்டி இருக்கிறது. பலருக்கு எத்தனையோ லட்சங்கள், கோடிகள். ஆனால் சட்ட ரீதியில் எங்கும் போராட முடியாது. சம்பளம் தரவில்லை என்று போக்குவரத்து ஊழியர்கள் மாதிரி, மறியலில் எல்லாம் ஈடுபட்டு பேருந்து கண்ணாடியை உடைக்க முடியாது.

உருப்படியான தீர்வு ஏதாவது கிடைக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று, போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால் மட்டுமே முடியும். வருடந்தோறும் பொறியியல் முடித்து வெளிவரும், ஒரு பெரும்கூட்டத்தையும், ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் கூட்டத்தையும், பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசிடம் இருந்து கொஞ்சம் தெளிவான தொலைநோக்குள்ள திட்டங்கள் வேண்டும். முதலாளிகளின் தேவையை விட ஆட்கள் குறைவாகக் கிடைக்கும்போது, முதலாளித்துவத்தின் பிடி தானாகவே தளரும்.

எதற்கும் சுஜாதாவின் "மண்ணின் மைந்தர்கள்" குறுநாவலை ஒரு முறை படிக்குமாறு சிபாரிசு செய்கிறேன். எந்தத் தொகுப்பில் இருக்கிறதென்று தெரியவில்லை.

Tuesday, 6 January 2015

நடுவாய்க்கால் களிமண்ணுதான்
சுடும்போது வெடிக்காது
புள்ளையாரை சுடப் போறோமா?
சரி, காயும்போது வெடிக்காது......
இதுவும் அதானே,
அப்புறம் ஏன் தும்பிக்கை மட்டும் விழுது?
என்கிட்ட கேட்டா ?
ஏன் சாமி வேணாமா ?
அது என்னோடது இல்லையே

Monday, 5 January 2015

இலக்கியவாதிகள் செய்யும் பல விஷயங்கள் இன்னும் எனக்கு சரியாகப் புரிவதே இல்லை. எக்சைல் வெளியீட்டுக்கு எதற்காக நெல்சன் சேவியர் அழைக்கப் பட்டார் என்று இதுவரை எனக்குப் புரியவில்லை. ஒரு வளர்ந்து வரும் ஊடகவியலாளராக (வளர்ந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்) நெல்சன் மேல் எனக்கு கொஞ்சம் மரியாதை உண்டு. ஆனால் ஒரு முன்னணி எழுத்தாளரின் நாவலை வெளியீட்டின் போது விமர்சித்துப் பேசுவதற்கு அவர் சரியான ஆள் தானா என்பதில் எனக்கு ஆரம்பத்தில் இருந்து சந்தேகம் தான்.

ஜெயமோகன் இளையராஜாவை வைத்து புத்தக வெளியீடு நடத்தும்போது, இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று கேட்கலாம். சொல்லப் போனால், ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்தவர் என்ற ஒரே தகுதிக்காக (!!!!!) நீது சந்திராவை அழைக்கப் போகிறேன் என்று சாரு சொன்னதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை தான். இருந்தாலும் வேறு யாரையாவது அழைத்திருக்கலாம் என்பது என்னுடைய அபிப்ராயம்.

ஒரு நாவலை விமர்சிக்க அவருக்கு தகுதி இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை. ஒரு நாவலை விமர்சிக்க ஒரு வாசகனாக இருந்தால் மட்டும் போதும். உலக நாவல்களை எல்லாம் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தாரளமாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழகு சேர்ப்பது எது? அந்த நூலை முன்பே படித்து, ஆழமாக விமர்சிக்கும் ஒரு உரை தானே? நாலு பேர் அப்படி தீவிர விமர்சனம் செய்பவர்களாக இருக்கும்போது ஒருவர் கமர்ஷியலுக்காக இருக்கலாம். ஆனால் இங்கு நடப்பதோ தலைகீழ்.

கவுதம் மேனனையும், இளையராஜாவையும் பார்ப்பதற்காக வரும் ரசிகக் கூட்டங்களை விட, தீவிர வாசகர்கள் தான் ஒரு இலக்கிய நிகழ்வுக்கு அதிகம் வருகிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு. (எவ்வளவு பெரிய பிரபலம் வந்தாலும், இலக்கியக் கூட்டம் என்றால் தலைதெறிக்க ஓடுபவர்கள் தான் அதிகம்). இந்த தீவிர வாசகர்களுக்கும் சரி, எழுத்தாளருக்கும் சரி ஒரு நல்ல விமர்சன உரையை விட மகிழ்வான ஒன்று இருக்க முடியுமா? ஆனால் அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள்?

காநாசு வுக்குப் பிறகு தமிழில் நல்ல விமர்சனங்களே வருவதில்லை என்று எழுத்தாளர்கள் புலம்புகிறார்கள். விமர்சிக்க வேண்டிய தமிழறிஞர்களோ சமகால இலக்கிய நிகழ்வுகள் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் இலக்கியம் பக்கம் போனாலும், "பாரதி படைப்புகளில் தேசியம்", "குடும்ப நாவல்களில் பெண்மையின் மாண்பு" என்ற வகையில் முனைவர் பட்டம் வாங்குவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சரி அப்போ, யார் விமர்சனம் எழுதுபவர்களை ஊக்குவிக்க வேண்டும்? எழுத்தாளர்கள் தானே செய்ய வேண்டும்? தங்கள் வெளியீட்டு விழாக்களில் கூட அப்படி ஒருவரை கண்டறிந்து விமர்சனம் செய்ய வைக்காமல், நாவலை வாசிக்காத  தருண் தேஜ்பாலையும், நண்பன் என்பதற்காக மிஷ்கினையும் வைத்து விழா நடத்தினால் நல்ல விமர்சகர்கள் எப்படி உருவாக முடியும்?

தீவிர விமர்சம் என்றால், டீ கூட குடிக்காத அந்த மாலைப் பசியிலும் தூங்க வைப்பதைப் போல சிலர் உரையாற்றுகிறார்கள். தினத்தந்தி சினிமா விமர்சனத்தை எடுத்துக் கொள்ளுங்கள், படம் பார்க்காத ஒருவனை படம் பார்க்கத் தூண்டுவது போல் எப்படி எழுதுகிறார்கள்? அப்படி எழுதினாலோ, பேசினாலோ தானே நாவலை சராசரி மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும்? அனால் தமிழ் இலக்கியச் சூலில் நடப்பது என்ன? ஒரு பக்கம் எளிமையாக எழுதும் அசோகமித்திரன் படைப்புகளை வாசிப்பது எப்படி என்று இரண்டு நாள் வகுப்பெடுக்கிராகள், இன்னொரு பக்கம் கமலையும் இளையராஜாவையும் நம்பி புத்தகம் விற்க இறங்குகிறார்கள். உண்மையில் இந்த celebrity பிம்பத்தை வைத்து ஒரு புத்தகம் கூட விற்க முடியாது என்பதை இலக்கியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். கமலே guest appearance இல் நடித்தால் கூட, ரசிகனுக்கு பிடித்திருந்தால் தான் படத்துக்கே போவான். பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். சகலமும் சினிமா மயமான தமிழ் நாட்டில் சினிமாவுக்கே  இந்த நிலைமை என்றால் இலக்கியத்துக்கு சொல்லவா வேண்டும்.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்  "காசு கொடுத்து குதிரை வாங்கலாம், ஆனால் கொள்ளு திங்க வைக்க முடியாது".